வெள்ளி, 31 டிசம்பர், 2010

மன்னிக்கவும்! நன்றி!


அன்பார்ந்த வாசகர்களே!

மன்னிக்கவும்! இந்த பிளாக் மூலமாகத் தொடர்ந்து எழுதிவந்த நான், கடந்த மூன்று மாதங்களாக, ஒரு இடுகையைக் கூட வெளியிடவில்லை. வெளியூர் பயணங்கள், தொடர்ச்சியான பயிற்சி அரங்குகள், பொது நிகழ்ச்சிகள், ரோட்டரி மற்றும் ஜேஸி பணிகள் போன்று பல காரணங்கள் இருந்தாலும், நான் தவறுகளுக்குக் காரணங்கள் சொல்வதை விரும்புவதில்லை. ஏனென்று சொன்னால், காரணங்கள் சொல்லத் தொடங்கி, அதுவே பழக்கமாகி விட்டால், நாம் தவறுகளைத் திருத்திக் கொள்ளாமலே இருந்து விடுவோம் என்று நம்புபவன் நான்.

அதனால் மீண்டும் ஒரு முறை இந்தத் தவறு நிகழாமல், நிச்சயம் பார்த்துக் கொள்வேன் என்று உங்களிடம் உறுதியளிக்கிறேன். நான் வருந்துகிறேன் என்று பூசி மெழுகவெல்லாம் நான் விரும்பவில்லை. நேரடியாகவே உங்களிடம் பணிந்து கேட்கிறேன். மன்னிக்கவும்! நீங்கள் பெருந்தன்மையானவர்கள் என்று எனக்குத் தெரியும். எனவே, மன்னி;த்ததற்கு நன்றி! எனக்கு என் தவறை உணர்த்திய, என் பதிவுகளைத் தொடர்ந்து படித்து வரும் பலருக்கும், குறிப்பாக புதுக்கோட்டை நண்பர் பிரசாத் அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள் கோடி!

2010-ஆம் ஆண்டின் நிறைவு நாள் இன்று! கடந்த ஆண்டின் நிகழ்வுகளைத் திரும்பி நினைவில் கொண்டு வாருங்கள்! அவற்றை அசைபோடுங்கள்! இனிமையானவை, வருத்தம் தருபவை என அனைத்தையும் நினைத்துப் பாருங்கள்! அவை அனைத்திலும், நம் வாழ்க்கையை மேம்படுத்துவதற்கு என்ன பாடங்கள் உள்ளன என்று கவனித்துக், கற்றுக்கொள்ளுங்கள்! நீங்கள் செய்த தவறுகளுக்குக், காலங் கடத்தாமல், உரியவர்களிடம் மன்னிப்புக் கேளுங்கள்!

இப்பொழுதெல்லாம் மன்னிப்புக் கேட்பதும், நன்றி கூறுவதும் நம் வழக்கங்களில் இருந்து சிறிது, சிறிதாக மறைந்து வருகிறது. குறிப்பாக மன்னிப்புக் கோருவது! ஆங்கிலத்தில் சாரி என்றும், எக்ஸ்கியூஸ் என்றும் சொல்ல முடிகிற நம்மால், தமிழில் மன்னிக்கவும் என்று சொல்ல முடிவதில்லை. காரணம்........... பிரெஸ்டீஜ், ஈகோ....

மன்னிப்புக் கேட்கிற அளவுக்கு நான் தவறு செய்யவில்லை என்று விளக்கமளிக்கிறோம். அப்படி என்றால், எந்த எந்த தவறுகளுக்கு, மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று யாராவது லிஸ்ட் கொடுத்தால் பரவாயில்லை. தவறு என்பது தவறிச் செய்வதுதான். எனவே, எல்லாவற்றுக்கும் மன்னிப்புக் கோரலாம். அதில் ஒரு குறையும் இல்லை. மன்னிப்புக் கோருவதால், நிச்சயமாக நாம் தாழ்ந்து விட மாட்டோம். எனவே, நாகரீகம் என்ற பெயரில், தேவையற்ற ஈகோ-வைத் தவிர்ப்போம். சிறியதோ, பெரியதோ, தவறு நம்முடையதாக இருந்தால், அதை உணர்ந்து, மன்னிப்புக் கோருவோம்.

அதேபோல், நமக்கு சொல்லித் தந்த பாடங்களுக்காக 2010-ஆம் ஆண்டுக்கும், நிகழ்வுகளுக்கும், தொடர்புடைய மனிதர்களுக்கும் நன்றி கூறுங்கள்! நல்லது செய்தவர்களுக்குத்தானே நன்றி கூற வேண்டும்! அல்லது செய்தவர்களுக்குமா? என்று வியப்படையாதீர்கள். அவர்களும், ஒரு அனுபவத்தையே தந்திருக்கிறார்கள்! அவையும் நம் வாழ்க்கை மேம்படுவதற்கு, உதவி செய்யக்கூடும்! இது குறித்து எனக்கு ஒரு அருமையான பார்வர்ட் எஸ்எம்எஸ் வந்தது. அதன் தமிழாக்கம் இதோ!


 என்னை வெறுத்தவர்களுக்கு என் நன்றி! ஏனென்றால், அவர்கள் என்னை மேலும், வலிமையுடையவனாக மாற்றினார்கள்.

 என்னை நேசித்தவர்களுக்கு என் நன்றி! ஏனென்றால், அவர்கள் என் இதயத்தை விரிவடையச் செய்தார்கள்!

 என்னைக் குறித்துக் கவலைப்பட்டவர்களுக்கு என் நன்றி! ஏனென்றால், என் மீது அக்கறையுடையவர்கள் பலர் இருக்கிறார்கள் என்ற நம்பிக்கையை அவர்கள் தந்தார்கள்!

 என்னை விட்டுப் பிரிந்தவர்களுக்கு என் நன்றி! ஏனென்றால், உலகில் எதுவும் நிலையானதில்லை என்று, அவர்கள் எனக்கு உணர்த்தினார்கள்!

 என் வாழ்க்கையில் புதிய வரவாக நுழைந்தவர்களுக்கு என் நன்றி! ஏனென்றால், நான் இன்று யாராக இருக்கிறேனோ, அதற்கு அவர்கள் காரணமாக இருந்தார்கள்!


மேற்கண்ட இந்த வரிகளையே நான் உங்களுக்கும் சமர்ப்பிக்கிறேன்! நான் உங்களைப் பொறுத்த வரையில், எந்த உறவில், எந்த நிலையில் இருந்தாலும், என் வாழ்வில், நீங்களும், நிச்சயமாக ஒரு அங்கமாக இருந்தீர்கள்! இருக்கிறீர்கள்! இருப்பீர்கள்! எனவே, உங்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள் கோடி!

2011-ஆம் ஆண்டை நல்ல முறையில் திட்டமிடுவோம்! உற்சாகமாக வரவேற்போம்! ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு நொடியும், நன்றாக அனுபவித்து வாழ்வோம்! வாழ்க்கை வாழ்வதற்கே! இனிய புத்தாண்டு வாழ்த்துகள்! மீண்டும் அடுத்த வாரம் சந்திப்போம்!

மீண்டும் சொல்கிறேன்...... மன்னிக்கவும்! நன்றி!

வெள்ளி, 17 செப்டம்பர், 2010

சடங்குகளா..? சங்கடங்களா..?

சடங்குகள், சம்பிரதாயங்கள், விழாக்கள், நம்பிக்கைகள்... இன்னும் எத்தனை பெயர்களில் சொன்னாலும், அவை எல்லாம் மனிதனை நெறிப்படுத்தவும், மகிழ்ச்சிப்படுத்தவும்தான் தோன்றின. ஆனால், இன்று நாம் உண்மையிலேயே எல்லா சடங்குகளையும், விழாக்களையும் மகிழ்ச்சியோடுதான் கொண்டாடுகிறோமா? நம் கொண்டாட்டங்களால் உண்மையிலேயே எல்லாரும் மகிழ்வாகத்தான் இருக்கிறார்களா? – யோசி!

நான் எப்போதும் சொல்வதுண்டு – நாம் பல முற்காலக் கருத்துகளையும், பழக்க வழக்கங்களையும் அரைகுறையாக அல்லது தவறாகத்தான் பின்பற்றி வருகிறோம் என்று. அதை நிரூபிக்கும் வகையில்தான் தினந்தோறும் எத்தனை நிகழ்ச்சிகள்...!

மிக அதிகமான (சுமார் 40) இலக்கிய அமைப்புகளையும், ஏராளமான அறிஞர்கள், பேச்சாளர்கள், கவிஞர்களையும் கொண்ட நகரமாகிய எங்கள் புதுக்கோட்டையிலேயே, தற்போதெல்லாம் அதிகமாக இலக்கிய நிகழ்வுகளைப் பார்க்க முடியவில்லை. நடக்கின்ற சில நிகழ்வுகளிலும் கூட்டம் அதிகம் இருப்பதில்லை. காரணம் - எல்லாமே வெறும் சடங்காக, சம்பிரதாயமாக நாம் பின்பற்றுவதுதான்.

இலக்கிய விழாக்களில் இலக்கியத்தைத் தவிர மற்றவை குறித்துப் பேசுவதும், ஜனரஞ்சகம் என்ற பெயரில் தரம் தாழ்ந்து பேசுவதும், காரியம் ஆவதற்காக சில பெரிய்...ய (?) மனிதர்களை ரொம்ப ஓவராகப் புகழ்வதும், சிலர் சொல்லி வைத்தாற்போல் ஒருவரை ஒருவர் புகழ்ந்து கொள்வதும், மிகச் சிலரே எல்லா மேடைகளையும் ஆக்கிரமித்துக் கொள்வதும், எப்போதும் தாமதமாகத் தொடங்கித் தாமதாகவே நிறைவு செய்வதும், பார்வையாளர்களுக்குப் பிடிக்கிற மாதிரி பேசுகிறேன் என்ற போர்வையிலும், கைதட்டல் பெறுவதற்காகவும் பொருத்தமில்லாத, கேட்பவர்களைக் குழியில் தள்ளுகின்ற கருத்துகளைப் பேசுவதும், தமக்குப் பிடிக்காதவர்களை நாகரிகமின்றி விமர்சனம் செய்யப் பொது நிகழ்வுகளைப் பயன்படுத்திக் கொள்ளுவதும்.................................................................... அப்பப்பா! இந்தக் கூத்துகளை எல்லாம் எழுதினால் எனக்கு நூற்றுக்கணக்கில் பக்கங்கள் தேவைப்படும் - அதைப் பிறகு பார்க்கலாம். இப்போதைக்கு, மேற்சொன்ன பல காரணங்களால், அந்த விழாவிற்கு உரிய, தேவையான பல அடிப்படைகள் தகர்க்கப்பட்டுவிட்டதை மட்டும் நாம் கவனத்தில் கொள்வோம்.


இலக்கிய விழாக்கள் மட்டும்தான் என்றில்லை! ஆன்மிக விழாக்கள் இதைவிட மோசமான நிலையில் உள்ளன. எனக்குப் பல நாட்களாகப் புரியாத புதிர்களாக, கோயில் அல்லது சாமி பெயரில் நடக்கும் விழாக்கள் உள்ளன. கோயில் திருவிழா என்றால் கரகாட்டம் அல்லது நடன நிகழ்ச்சி என்ற பெயரை வைத்து நடக்கும் மிட்நைட் மசாலாக்கள், திருட்டு விசிடி போட்டால் தப்பு என்பதால், திருட்டு தியேட்டரே நடத்தும் அளவுக்குப் புதிய திரைப்படங்கள், இசை நிகழ்ச்சி என்ற பெயரில் ஆபாசமான பாடல்கள், பால்குடங்கள், காவடிகள், அலகு குத்தியவர்கள், கடவுள் சிலைகளின் ஊர்வலங்கள் எல்லாவற்றின் முன்னாலும், குடித்துவிட்டு கேவலமான முறையில் குத்தாட்டம்... என்ன செய்து கொண்டிருக்கிறோம் நாம்?

கடவுளை நினைத்து மனமுருக வேண்டிய வேளைகளிலும், பொழுது போக்க நினைக்கிறோம். அடுத்த கட்டம் பொழுது போக்கு என்ற பெயரில் மனதையும், உடலையும், ஊரையும் கெடுக்கிறோம். எனக்கு கடவுள் பக்தி உண்டு. ஆனால், ஒரு நாளும் இவையெவற்றையும் செய்ததில்லை. தமிழ் சினிமாவின் நிகழ்கால பக்திப் படங்கள்தான் மக்களிடையே கடவுள் நம்பிக்கையைக் கேலிக்குள்ளாக்கி வருகிறது என்று நினைத்தால், நமது செய்கைகள் எல்லாமே அப்படித்தான் இருக்கிறது.

ஏற்கனவே, பகுத்தறிவு என்ற பெயரில் நாத்திகவாதம் தலைதூக்கி வருகிறது. அதற்கு நமது மூட நம்பிக்கைகள் மட்டும் காரணம் அல்ல. நம்மிடையே பக்தி அதிகரித்தும், ஒழுக்கம் குறைந்தும் காணப்படுவதும்தான். இந்த நிலையில், இதையெல்லாம் சரிசெய்ய வேண்டாமா? – யோசி!

பொது விழாக்கள் மட்டுமல்லாது, குடும்ப விழாக்களும் குலைந்து போனதுதான் என்னை இக்கட்டுரையையே எழுதத் தூண்டியது. எல்லாமே வெறும் கடமைக்காக, சடங்காக ஏன் மாறிப்போனது? – யோசி!

சமீபத்தில் உறவினர் ஒருவரின் திருமணத்திற்காக சென்னை சென்றிருந்தேன். லட்சக்கணக்கில் செலவழித்து ஏசி மண்டபம் பிடித்திருந்தார்கள். மலர் அலங்காரம், மேடை அலங்காரம், விருந்துகள் என்று எல்லாமே மிக ஆடம்பரமாகவும், அருமையாகவும் செய்திருந்தார்கள். ஆனால், வெளியூரில் இருந்து வந்த விருந்தினர்கள் எல்லாரும் தங்குவதைப் பற்றி மட்டும் கண்டுகொள்ளவே இல்லை. சென்னையின் அந்த புறநகர்ப் பகுதியில், ஆட்டோ, டாக்ஸி கிடைப்பது கூட மிக அரிதாக இருந்தது. நகரில் ஒரு லாட்ஜில் தங்கினால், மண்டபத்திற்கு செல்ல சுமார் ஒன்றரை மணிநேரம் ஆகும். இதில் மிகப் பெரிய கொடுமை என்னவென்றால், பணியாட்கள் அத்தனை பேரும் ஏசி ஹாலில் அன்றிரவு தூங்க, விருந்தினர்கள் நாங்கள் எல்லாம் மொட்டை மாடியில்! கொசுக்கடியில், குளிரில் ஒருவரும் தூங்கவில்லை. பல லட்சம் செலவழித்தவர்களுக்கு, விருந்தினர்கள் வசதியாகத் தங்குவதற்கு, சில ஆயிரங்கள் செலவழிக்க ஏன் முடியவில்லை? வேண்டாம் என்ற எண்ணம் இல்லை. காரணம், அஜாக்கிரதை, சரியான திட்டமிடல் இன்மை, அதைவிட முக்கியமாக நான் சொல்வது... திருமண நிகழ்வைப் பெரிதாக நினைத்தார்களே அன்றி விருந்தினர்களை அல்ல என்பதுதான்.

இவை மட்டுமல்ல. பொதுவாக நம் மகிழ்ச்சிக்காக நாம் செய்யும் நிகழ்வுகள், மற்றவர்களுக்கு மிகப்பெரிய இம்சையாக விளங்குவதும் எனக்கு வருத்தமளிக்கிறது. திருமண ஊர்வலங்கள், இறந்தவர்களின் சடல ஊர்வலங்கள், அரசியல் ஊர்வலங்கள், ஆன்மீக ஊர்வலங்கள் என்று எல்லாமே போக்குவரத்து நெரிசலையும், பொதுமக்களுக்கு அவஸ்தையையும் அளவின்றித் தருகிறது. காரணம் நம் தவறான எண்ணம். முன்பெல்லாம், ஏதோ சில வி.ஐ.பி-க்கள் மட்டுமே இது போன்ற பெரிய ஊர்வலங்கள் நடத்திப் பொதுமக்களுக்குத் தொல்லை தந்தது போக, தற்போது யாரெல்லாம் போக்குவரத்துக்கு இடையூறு செய்து, பொதுமக்களைத் துன்புறுத்துகிறார்களோ அவர்களெல்லாம் வி.ஐ.பி-க்கள் என்ற மோசமான எண்ணத்தை நாம் வளர்த்துக் கொண்டதுதான்.

இதற்கெல்லாம் ஒரு முடிவு வர வேண்டுமானால், நம்மிடையே ஒரு விழிப்புணர்வு வர வேண்டும். நான் முன்பே சொன்னது போல, மனிதனுக்குரிய பண்புகளையும், பண்பாட்டையும் வளர்ப்பதும், எல்லாரும் மகிழ்வாக இருப்பதும் மட்டுமே நம் விழாக்களின் நோக்கமாக இருக்க வேண்டும்! அப்போதுதான், சடங்குகள், சங்கடங்கள் தருவதாக இல்லாமல், சந்தோஷங்களின் மடங்குகளாய் இருக்கும்!

வெள்ளி, 10 செப்டம்பர், 2010

நல்ல ஆசிரியர்களுக்கு வறுமை கூடாது!

சென்ற வாரம், செப்டம்பர் 5-ஆம் நாள், நமது முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர். ராதாகிருஷ்ணன் அவர்களின் பிறந்த நாள் - ஆசிரியர் தினம். ஆசிரியராக இருந்து, பின்னர் இந்நாட்டின் குடியரசுத் தலைவராக மலர்ந்த அவரது பிறந்த நாளைக் கொண்டாட, ஆசிரியர் தினம் என்பது மிகப் பொருத்தமானதே!

ஆனால், நம் நாட்டில் ஆசிரியர் தினம் கொண்டாடுவது இருக்கட்டும். ஆசிரியர்களைக் கொண்டாடுகிறோமா? – யோசி!

ஆசிரியர்களைப் போற்றுவதற்காக, டாக்டர். ராதாகிருஷ்ணன் அவர்கள் பெயரில், நமது தமிழக அரசு வழங்கும் விருதுகளில்தான் எத்தனை குளறுபடிகள்! பள்ளிக்கே ஒழுங்காக செல்லாதோருக்கும், ஒழுக்கமில்லாதவர்களுக்கும், பணம் கொடுப்பவர்களுக்கும், பரிந்துரை பிடிப்பவர்களுக்கும் என்று சில தகுதியில்லாவர்களுக்கும் அந்த விருதுகள் கொடுக்கப்படுவதனால், தகுதியிருந்து பெறுபவர்களுக்குக் கூட தர்மசங்கடமாகிவிடுகிறது!

அதனால்தான், அரசு விருது பெறாத சிறந்த ஆசிரியர்களுக்கு, ஆண்டுதோறும் நல்லாசிரியர் விருதுகள் வழங்குவது என்று எங்கள் கவிராசன் அறக்கட்டளையில் தீர்மானித்தோம். பாரதியாரின் பெயரான கவிராசன் என்பதில், எங்கள் குடும்பத்தினரின் முதலெழுத்துகளும் உள்ளன. எனது தாயாரை நடத்துநராகவும், எனது அண்ணனை நிர்வாக அறங்காவலராகவும், எனது தந்தையாரை ஆலோசகராகவும் கொண்டு, நான், 2006-ல் தொடங்கியதே இந்தக் கவிராசன் அறக்கட்டளை.

இதுவரை, பல ஆயிரக்கணக்கான ரூபாய்கள் நற்பணிக்காக செலவழித்திருந்தாலும், ஒரு ரூபாய் கூட நன்கொடை பெற்றதில்லை என்பதே எங்கள் அறக்கட்டளையின் சிறப்பு. கடந்த 5 ஆண்டுகளாக, ஒவ்வொரு ஆண்டும், செப்டம்பர் 5-ஆம் தேதியில், நாங்களே நேரடியாகத் தேர்வு செய்து, “நல்லாசிரியர்” விருதுகள் வழங்கி வருகிறோம். இதுவரை 31 ஆசிரியர்கள் இவ்விருதுகளைப் பெற்றுள்ளனர்.

கடந்த செப்டம்பர் 5 ஞாயிற்றுக்கிழமை மாலை, இந்த ஆண்டிற்கான விழா நடைபெற்றது. சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற புதுக்கோட்டை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர், உயர்திரு. முத்துச்சாமி அவர்கள், தான் இந்த நிலைக்கு உயரக் காரணமான உன்னதமான ஆசிரியர் திரு. கிருஷ்ணசாமி அவர்களை உருக்கமாக நினைவு கூர்ந்தார். மேலும், அவரது உரையில் அவர் சொன்ன வாக்கியம்தான், இந்தக் கட்டுரையின் தலைப்பாக உருப்பெற்றுள்ளது. அவர் சொன்னார் “ஒரு நல்ல ஆசிரியர் வறுமையில் வாடினால், அது நம் நாட்டுக்கே அவமானம்” என்று.

நல்ல ஆசிரியர்களுக்கு வறுமை என்பது பொருளாதாரத்தில் இருப்பதே, இந்த நாட்டிற்கு அவமானம் என்றால், நல்ல ஆசிரியர்களின் எண்ணிக்கையிலும் வறுமை ஏற்படின், அது எவ்வளவு பெரிய அவமானம்? – யோசி!

ஆசிரியர்களைப் பற்றி, சமீபத்தில் நாளிதழ்களிலும், தொலைக்காட்சிகளிலும் வரும் செய்திகள் மெச்சும்படியாக இல்லை. இதற்கு ஆசிரியர்கள் மட்டும் காரணமில்லை. தகுதியில்லாதோரை, லஞ்சம், ஊழல், பரிந்துரைகள் காரணமாக நியமிக்கும் அரசாங்கமும், பள்ளி – கல்லூரி நிர்வாகங்களுமே முதல் குற்றவாளிகள். தனியார் நிறுவனங்களில் குறைவான சம்பளம், அரசு நிறுவனங்களில் மோசமான நிர்வாகம் என்று ஏராளமான குற்றவாளிகள் இதற்குப் பொறுப்பாளிகள் ஆவார்கள்.

காரணங்களை அடுக்குவதால், சில ஆசிரியர்களின் தவறான போக்கினை எந்தவிதத்திலும் நியாயப்படுத்த மாட்டேன். காரணம், ஆசிரியப் பணி என்பது தொழில் அல்ல. லாப, நட்டக் கணக்குப் பார்ப்பதற்கு. அது ஒரு சமூக சேவை. நாளைய சமூகம் நலம்பெற, ஒரு தலைமுறையின் நடத்தையையே மாற்றக்கூடிய சக்தி வாய்ந்த சேவை. அந்தப் பொறுப்பினை உணர்ந்து ஆசிரியர்கள் நடக்க வேண்டும்.

அல்லவை அழிய வேண்டுமானால் நல்லதைப் போற்றுங்கள். உண்மையிலேயே தொண்டுணர்வோடு, முன்னுதாரணமாகப் பணியாற்றுகின்ற நல்ல ஆசிரியர்களை, ஊரறிய, உலகறியப் பாராட்ட வேண்டும். அவர்களுக்குரிய அங்கீகாரங்களை வழங்க வேண்டும். அப்போது, தானாகவே, சில களைகள் தலைகுனியும். மீறி, நிமிர்பவை களையப்படும்.

ஆசிரியப் பயிற்சிப் பள்ளிகள், கல்வியியல் கல்லூரிகள் போன்றவற்றில், மதிப்புக் கல்வியை வலியுறுத்துவோம். ஒழுக்கமுடையவர்கள் மட்டுமே சேர்கிற பணியாக ஆசிரியப் பணியை மாற்றுவோம்.

நல்ல ஆசிரியர்களால் மட்டுமே நல்ல சமூகத்தை உருவாக்க முடியும்! நல்ல சமூகம் என்பது நல்ல ஆசிரியர்களை மதித்துப் போற்றுவதாக இருக்க வேண்டும்!

வெள்ளி, 20 ஆகஸ்ட், 2010

இளைய பாரதம் ஏற்றுவோம்!


நாம் தற்போது இருப்பது “இளைஞர்களின் யுகம்”. எண்ணிலடங்காத ஆற்றல் கொண்ட இளைஞர்களைத்தான், விவேகானந்தர் முதல் அப்துல் கலாம் வரை உலகத் தலைவர்கள் அனைவரும் போற்றி வந்துள்ளனர். “எல்லாவற்றையும் இழந்த பின்னரும் ஒன்று மிச்சம் இருக்கும். அது எதிர்காலம்” என்ற ஒரு பொன்மொழி எனக்கு மிகவும் பிடிக்கும். நம் வாழ்க்கையே, அந்த எதிர்காலம் நன்றாக இருக்கும் என்ற நம்பிக்கையில்தான் நடந்து கொண்டிருக்கிறது. அந்த எதிர்காலம் இருப்பதோ இளைஞர்கள் கைகளில் என்பதை நாம் அனைவரும் அறிவோம். ஆனால், உணர்ந்திருக்கிறோமா? இளைஞர்களைத் தேவையான பொழுது உற்சாகப்படுத்துகிறோமா..? சரியான பாதைகளில் வழிநடத்துகிறோமா..? அவர்களுக்கு உரிய மதிப்பையும், முக்கியத்துவத்தையும், அங்கீகாரத்தையும் வழங்குகிறோமா..? – யோசி!

கடந்த வாரம்தான், எல்லா நாட்களையும் போல வழக்கமான முறையில், ஆகஸ்டு 12-ஆம் தேதியும், எந்த ஆரவாரமும் இன்றி நம்மைக் கடந்து போனது. அதன் முக்கியத்துவத்தை நாம் உணர்ந்தோமா? ஆகஸ்டு 12-ஆம் தேதி, சர்வதேச இளைஞர் தினம். அந்த நாளின் முக்கியத்துவத்தை உணர்த்தும் கொண்டாட்டங்களும், பயனுள்ள நிகழ்வுகளும் ஏதும் நடைபெற்றதாகத் தெரியவில்லை. ஏனென்றால், நமக்கு அது முக்கியமாகத் தெரியவில்லை. சரி. போனது போகட்டும். இனி எப்படி? – யோசி!

1998-ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 8-ஆம் தேதி முதல் 12-ஆம் தேதி வரை, போர்ச்சுகல் நாட்டின் தலைநகர் லிஸ்பனில், இளைஞர் நலனுக்குப் பொறுப்பான அமைச்சர்களின் உலக மாநாடு நடைபெற்றது. அந்த மாநாட்டில், ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்டு 12-ஆம் தேதியை சர்வதேச இளைஞர் தினமாக அறிவிக்கலாம் என்று பரிந்துரை செய்யப்பெற்றது. 1999-ல் ஐக்கிய நாடுகளின் பொதுச் சபை, இந்தப் பரிந்துரையை ஏற்று அவ்வாறே அறிவித்தது. அதனைத் தொடர்ந்து, 2000-ஆம் ஆண்டு முதல், ஆகஸ்டு 12-ஆம் தேதி “சர்வதேச இளைஞர் தினம்”-ஆகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

இளைஞர் தினத்தை, ஆண்டுதோறும் ஒரு மையக் கருத்துடன் ஐ.நா.சபை கொண்டாடி வருகிறது. இந்த ஆண்டுக்கான மையக்கருத்து “கலந்துரையாடல் மற்றும் ஒருவருக்கொருவர் புரிந்துகொள்ளுதல்” என்பதாகும். இதனடிப்படையில், பல கருத்தரங்குகளும், நிகழ்வுகளும் நடைபெறும்.

இந்தத் தகவல்கள் மட்டுமல்ல. இன்னும் ஒரு இனிப்பான செய்தி. இளைஞர்களுக்கு, இந்த ஆண்டு மிகவும் முக்கியமான, சிறப்பான ஆண்டாகும். ஏனென்று தெரியுமா?

இந்த ஆகஸ்டு 12 தொடங்கி, வரும் அடுத்த ஓராண்டை, அதாவது ஆகஸ்டு 2011 வரையில், “சர்வதேச இளைஞர் ஆண்டாக”, ஐ.நா. சபை அறிவித்துள்ளது. இதையொட்டி, இந்த ஆண்டு முழுவதும், உலகெங்கும் ஏராளமான நிகழ்ச்சிகளும், போட்டிகளும், கருத்தரங்குகளும், கலந்துரையாடல்களும், மாநாடுகளும் நடைபெற உள்ளன. நாமும் இந்தக் கொண்டாட்டங்களில் பங்கெடுக்க வேண்டாமா..? உலகிலேயே மிக அதிகமான எண்ணிக்கையில், இளைஞர்களைப் பெற்றுள்ள, நம் இந்திய நாடு, இந்த ஓராண்டினை, இளைஞர்களை முன்னேற்றுவதற்கும், நல்வழி காட்டுவதற்கும், நம்பிக்கை அளிப்பதற்கும் பயன்படுத்திக் கொள்ள வேண்டாமா..? – யோசி!

இவை மட்டுமல்ல. உலக வரலாற்றிலேயே முதன் முறையாக, உலகமே கொண்டாடும் உற்சாகத் திருவிழாவாக, இளையோருக்கான சிறப்பு ஒலிம்பிக் போட்டிகள், தற்போது சிங்கப்பூரில் நடைபெற்று வருகிறது. சாதாரண உள்ளுர் போட்டிகளுக்கு அளிக்கப்படும் முக்கியத்துவம் கூட, இந்த உலகப் போட்டிகளுக்கு, நம் ஊடகங்களால் வழங்கப்படவில்லை என்பது வேதனை தருகிறது.

அதிலும், இந்தியர்கள், இன்றுவரை (ஆகஸ்டு 19, 2010) மூன்று பதக்கங்களை வென்றுள்ளனர். பாட்மின்டனில் சுனில் குமார் வெள்ளிப் பதக்கம், மல்யுத்தத்தில் பூஜா வெள்ளிப் பதக்கம், கடியன் வெண்கலப் பதக்கம் என – மொத்தம் மூன்று. மேலும், டென்னிஸில், இந்தியாவின் யுகி பாம்ப்ரி, இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்று, ஒரு பதக்கத்தை உறுதி செய்திருக்கிறார். அப்படியிருந்தும், இவர்களை யாரும் பாராட்டவில்லை. இந்தச் செய்திகளை எந்த ஊடகமும், உரிய முக்கியத்துவம் தந்து வெளியிடவில்லை.

என்ன ஆயிற்று நமக்கு? சாதனை செய்த சில நூறு இளைஞர்களை சரியான முறையில் ஊக்குவித்தால் தானே, இன்னும் ஆயிரம், லட்சம், கோடி என இளைஞர்கள் ஏராளமான சாதனைகளைப் படைக்க முடியும்.

சமூகம் இந்த இளைஞர்களின் மீது தான் வைத்துள்ள நம்பிக்கையை வெளிப்படுத்துவதற்கும், இளைஞர் சக்தியைக் கொண்டாடுவதற்கும், உற்சாகப்படுத்துவதற்கும், அதன் மூலம் இளைஞர்கள் தங்கள் ஆற்றலை உணர்ந்து கொள்வதற்கும், தங்கள் ஆற்றலை சமுதாயத்திற்குப் பயனுள்ள வழிகளில் பயன்படுத்த முனைவதற்கும், தங்கள் முன்னேற்றத்திற்கான முட்டுக்கட்டைகள் குறித்து விழிப்புணர்வு பெறுவதற்கும், அந்த முட்டுக்கட்டைகளைத் தங்கள் வெற்றியின் படிக்கட்டுகள் ஆக்குவதற்கான வழிகள் குறித்து ஆய்வு செய்வதற்கும், இதுவே ஏற்ற தருணம்.

“எங்கள் ஆண்டு – எங்கள் குரல்” என்ற ஐ.நா. சபையின், இந்த இளைஞர் ஆண்டுக்கான மையக் கருத்து, ஒவ்வொரு இளைஞனின் உள்ளக் கருத்தாகட்டும். உலகெங்கும், இளைஞர்களின் குரல் ஓங்கி ஒலிக்கட்டும்! அதிலும், இந்திய இளைஞனின் குரலே மற்றவர்களை வழி நடத்தட்டும்! அதற்கு அரசியல்வாதிகளும், அதிகாரிகளும், பெரியவர்களும், ஊடகங்களும் நிறைய பாராட்டுகளையும், நிறைவான வசதிகளையும் அவர்களுக்கு வழங்கட்டும்!

இளைஞர்களுக்கு உரிய வாய்ப்பளிப்போம்! வரவேற்போம்! அதன் மூலம் இந்தியாவை வளப்படுத்துவோம்! வலுப்படுத்துவோம்!

வெள்ளி, 13 ஆகஸ்ட், 2010

சுதந்திரம் உணர்வோம்! உயர்த்துவோம்!


வரும் ஆகஸ்டு 15 அன்று, நமது பாரத மணித்திருநாடு, தனது 64-ஆவது சுதந்திர தினத்தைக் கொண்டாடத் தயாராகி வருகிறது. ஆனால், உண்மையிலேயே, சுதந்திரம் என்றால் என்ன, என்று நாம் ஒழுங்காகப் புரிந்திருக்கிறோமா? நமது நாட்டின் சுதந்திர வரலாற்றை நன்றாகத் தெரிந்திருக்கிறோமா? சுதந்திரத்தின் அருமையை, மதிப்பை உணர்ந்திருக்கிறோமா? சற்றே சந்தேகமாகத்தான் இருக்கிறது. – யோசி!

சுதந்திரம் என்பது கட்டுப்பாடுகளே இல்லாத, தறிகெட்ட, நெறிகெட்ட வாழ்க்கை என்றுதான் நம்மில் பலர் கருதிக் கொண்டிருக்கிறோம். “நான் எது செய்தாலும் அது சரியானதுதான்” என்று நம்மில் பலர் வாதிட்டுக் கொண்டிருக்கிறோம். உண்மையிலேயே, அப்படிக் கட்டுப்பாடுகள் இல்லாமல் இருந்தால் உலகம் எப்படி இருக்கும் என்று யோசித்துப் பாருங்கள்! எந்த முன்னேற்றமும் இல்லாத அடர்காடாக, மனிதர்கள் மிருகங்களாக வாழும் நடுக்காடாக, மனிதம் மரணமடைந்துவிட்ட சுடுகாடாக இருக்கும். என்னைப் பொறுத்தவரை, கட்டுப்பாடுகளே இல்லாமல் வாழ்வது சுதந்திரம் அல்ல. கட்டுப்பாடுகளை மற்றவர் என்மீது திணிக்காமல், நானே விரும்பி, சுய கட்டுப்பாட்டுடன் வாழ்வதே உண்மையான சுதந்திரம் ஆகும். மனம் போன போக்கில் எல்லாம் வாழாமல், நாம் விரும்பும் போக்கில் மனத்தைச் செலுத்துவதே உண்மையான சுதந்திரம் ஆகும்.

“உன் சுதந்திரம் என்பது அடுத்தவரின் மூக்கு நுனி வரை” என்று ஒரு பொன்மொழி சொல்கிறது. அதாவது, அடுத்தவரின் சுதந்திரத்தைக் கெடுக்காமல், எனது சுதந்திரம் இருக்க வேண்டும். ஆனால் இன்று என்ன நிலை? தனிமனித சுதந்திரத்தைப் பற்றி வாய்கிழியப் பேசும் யாரும், சமுதாய ஒழுக்கத்தை மதிப்பதில்லை. தன் சுதந்திரத்தைப் பற்றியே கவலைப்படும் யாரும், மற்றவர்களின் சுதந்திரத்தைப் பற்றி சிந்திப்பதே இல்லை. – யோசி!

சரி, நமது இந்திய நாட்டின் சுதந்திரத்தின் அருமையையாவது உணர்ந்திருக்கிறோமா? அதுவும் இல்லை. இந்த நாட்டை அவமதிப்பதற்கும், தலைவர்களை இழிவு செய்வதற்கும், இந்தியாவைக் கிண்டலடித்து ஜோக்குகள் சொல்வதற்கும், நினைத்ததையெல்லாம் பேசவும், எழுதவும், பரப்புவதற்கும், சமுதாயத்தைப் பாதிக்கும் வகையில் போராடுவதற்கும், சிலரின் சுயநலத்திற்காகப் பலரை அழிக்கும் வன்முறையில் ஈடுபடுவதற்கும், அப்பப்பா... நமக்கெல்லாம் இவற்றுக்குத்தானா சுதந்திரம்..? சுதந்திர தினத்தன்று, அதைக் கொச்சைப்படுத்தும் வகையில் போராட்டங்கள், கருப்புக் கொடிகள். என்ன காரணமாக இருந்தாலும், அந்தப் புனித நாளில் இவற்றைச் செய்யலாமா? இதற்கெல்லாம்தானா நமக்கு சுதந்திரம்? – யோசி!

காந்தி, நேரு, நேதாஜி போன்ற மிகச் சில தலைவர்களைப் பற்றி மட்டுமே நாம் அறிந்திருக்கிறோம். (அவர்களையும் நாம் ஒழுங்காகப் பின்பற்றுவது இல்லை என்பது வேறு) தலைவர்களோடு இணைந்து, நம் தேச விடுதலைக்காகப் பாடுபட்ட, தன் உடல், பொருள், உயிர் என அனைத்தையும் துறந்த லட்சக்கணக்கான தியாகிகள் அனைவரையும் நமக்குத் தெரியுமா? பிற்காலத்தில் நம்மைப் பற்றிப் புகழ்ந்து பேசுவார்கள், சிலை வைப்பார்கள், நம் சந்ததியினருக்கு நன்மை செய்வார்கள் என்றெல்லாம் எண்ணியா அந்த பெயர் தெரியாத உன்னத மனிதர்கள் போராடினார்கள்? – யோசி!

தேச நலன் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்ட லட்சக்கணக்கானோரின் உடல்களின் மீது நின்று கொண்டு இருப்பதால்தான், இன்று உலக அரங்கில் உயர்ந்து நிற்கிறது நம் இந்தியா என்பதை மறந்து விடாதீர்கள். அவர்களைப் போல் வாழ்க்கையையே தியாகம் செய்யக் கூட வேண்டாம். அவர்கள் வாங்கிக் கொடுத்த சுதந்திரத்தைப் பழிக்காமல் இருக்கலாமே! இன்னும் கூட “இரவில் வாங்கினோம் - விடியவே இல்லை” என்று முகாரிகள் பாட வேண்டாமே! “இரவில்தானே வாங்கினோம் - இரவலா வாங்கினோம்” என்று புதிய பூபாளங்கள் பாடலாமே! – யோசி!

உலகின் எல்லா நாடுகளையும் போல், இந்தியாவிலும் பல பிரச்சனைகள் இருக்கின்றன. நான் இல்லை என்று சொல்லவில்லை. ஆனால் ஒன்றை மறவாதீர்கள். சுதந்திரத்திற்காகப் பாடுபாட்டவர்களா இதற்குக் காரணம்? கவிஞர் மு.மேத்தா சொல்வதைப் போல “அவர்கள் கொடுத்துச் சென்றது என்னவோ அட்சய பாத்திரம்தான். நாம்தான் அதைப் பிச்சைப் பாத்திரம் ஆக்கிவிட்டோம்!” நம்மிடையே வாழும் சுயநல அரசியல்வாதிகள், அதிகாரிகளால்தானே நமக்கு இந்தப் பிரச்சனைகள். “இனி இந்த நாட்டில் தலைவர்களுக்குச் சிலை வைக்க வேண்டாம். நாய்களுக்குச் சிலை வைத்து நன்றியினைக் கற்போம்” என்பார் கவிஞர் வைரமுத்து. அப்படி, இந்த நாட்டிற்காக உழைத்த எண்ணற்ற நல்ல உள்ளங்களுக்கு, நாம் நன்றி உணர்வோடு நடந்து கொள்ள வேண்டாமா? – யோசி!

சுதந்திரத்தை அவமதிப்பதாலோ, நமது இந்தியத் திருநாட்டை இழிவுபடுத்துவதாலோ, நமக்கு எந்த நன்மையும் நடந்து விடாது. இன்னும் கொஞ்சம் கடுமையாகவே சொல்கிறேன். இந்த நாட்டை மதிக்காத எவரும், இந்த நாட்டை எந்த வகையிலாவது இழிவு செய்ய நினைக்கும் எவரும், இந்த இந்தியத் திருநாட்டில் வாழத் தகுதியானவர் இல்லை. அவர்களை, இப்பொழுதே நாடு கடத்துங்கள். குறைந்தபட்சம், அப்படிப்பட்டவர்கள் யாரானாலும், அவர்களை உங்கள் இல்லத்திலும், உள்ளத்திலும் அனுமதிக்காதீர்கள்!

நம்முடைய தேசப்பற்று எங்கே போனது? கார்கில் போரின் போதும், கிரிக்கெட் ஆட்டங்களின் போதும் மட்டும்தான் நமக்கெல்லாம், நாட்டுப்பற்று என்பது வருமா? நாட்டை மதிப்பதும், நாட்டிற்காக உழைத்தவர்களைக் கொண்டாடுவதும், நாட்டை இழிவு செய்வோரை இகழ்ந்து ஒதுக்குவதும், நாட்டின் முன்னேற்றத்திற்காகப் பாடுபடுவதும்... இவையெல்லாம்தானே நாட்டுப்பற்றின் அடையாளங்கள். ஆனால், நாட்டுப்பற்று மிகுந்தவர்களாகக் காட்டிக் கொள்ளும் நம்மில் ஏராளமானோருக்கு, ஒழுங்காகத் தேசிய கீதம் கூடப் பாடத் தெரியவில்லை என்பதுதான் கசப்பான உண்மை. - இதற்கெல்லாம் என்னதான் தீர்வு? – யோசி!

1) தேசத் தலைவர்களை எந்தக் காரணம் கொண்டும், சாதி, மதம், மொழி, மாநிலம் என்றெல்லாம் பிரித்து, அவர்களின் பெருமைகளைச் சுருக்காமல் இருப்போம். (முத்துராமலிங்கத் தேவர், காமராஜ நாடார், தலித் தலைவர் அம்பேத்கார்... இன்னும் வளரும் இந்த கொடுமைகள் வேண்டாம்)
2) நம் இந்திய நாடு குறித்த தீய எண்ணங்களை, முற்போக்கு அல்லது விழிப்புணர்வு என்ற பெயரில் பரப்பி, நல்ல உள்ளங்களில் நஞ்சை விதைத்து, இளைஞர்களின் வாழ்வைக் கருக்காமல் இருப்போம். (உண்மை நிலையைச் சொல்லலாம். ஆனால், அது நல்ல மாற்றத்தை ஏற்படுத்துவதற்காக மட்டுமே இருக்க வேண்டும். தேச விரோதிகளை உருவாக்குவதற்காக அல்ல)
3) இந்தியச் சின்னங்களைக், கொடியைக், கீதத்தைத், தலைவர்களை, நாட்டுக்காக உழைத்த, உழைக்கும் நல்லவர்களை மதிப்போம்.
4) இந்திய சுதந்திர வரலாற்றை, இந்தியா முழுமைக்கும் ஒரே கருத்தாய், நன்மை செய்யும் வித்தாய், மாணவர் நெஞ்சங்களில் பதிப்போம்.
5) “சொர்க்கமே என்றாலும், அது நம்மூரைப் போல வருமா? என்னாடு என்றாலும் அது நம் நாட்டிற்கு ஈடாகுமா?” என்று உள்ளம் உருகத் துதிப்போம்.
6) நமது பிறந்தநாள் போல, இந்துக்களின் தீபாவளி போல, முஸ்லீமகளின் ரம்ஜான் போல, கிறிஸ்தவர்களின் கிறிஸ்துமஸ் போல, இந்தியர்கள் அனைவருக்குமான சுதந்திர தினத்தை, மிகுந்த மகிழ்ச்சியோடும், பொறுப்புணர்வோடும் கொண்டாடுவோம்!
7) “தாயைக் காப்பதும், நாட்டைக் காப்பதும் ஒன்றுதான்” என்று உணர்ந்து, நாட்டு முன்னேற்றத்திற்காக, நாட்டின் குறைகளைக் களையப் பாடுபடுவோம்!

இந்தியனாக வாழ்வதில் பெருமை கொள்வோம்! நாம் இந்தியனாக இருப்பதற்காக, இந்தியா முழுமையும் பெருமை அடையுமாறு செய்வோம்! ஜெய்ஹிந்த்!

வெள்ளி, 6 ஆகஸ்ட், 2010

உடுப்பும், துடுப்பும்..!

சென்ற வாரம், சர்வதேச நட்பு தினத்தை முன்னிட்டு சிறிய கட்டுரை ஒன்றை எழுதியிருந்தேன். நண்பர்கள் குறித்த சில நினைவுகளைப் பகிர்ந்து கொள்வதாக, அதில் கூறியிருந்தேன். அதையொட்டியே இக்கட்டுரை.

நண்பர்களோடு எத்தனை நாள், எத்தனை நேரம் பேசிக்கொண்டிருந்தாலும், உண்மையிலேயே நேரம் போவது தெரியாது. அதிலும் “ஓல்டு இஸ் கோல்டு” என்பது, நிச்சயம் நட்புக்குப் பொருந்தும். தினந்தோறும் நாம் ஏராளமான நபர்களைச் சந்திக்கிறோம். அவ்வப்போது, பல புதிய நண்பர்களைப் பெறுகிறோம். ஆனால், நீண்ட காலமாக ஒருவர் நண்பராக இருக்கும் பட்சத்தில்தான், அதன் இனிமையும், வலிமையும் கூடுகிறது.

நண்பர்கள் கூட்டம் என்று சொன்னாலே, எனக்கு, சில ஆண்டுகளுக்கு முன் நான் பணிபுரிந்த, டிஎம்சி கம்ப்யூட்டர் சென்டரில் நடந்த கூட்டங்கள்தான் நினைவுக்கு வரும். அங்கே ஒன்றாகப் பணிபுரிந்தவர்களில் சிலர் மட்டும், மாதந்தோறும் ஒரு சனி அல்லது ஞாயிற்றுக்கிழமை மாலை கூடிப் பேசி மகிழ்வோம். ஆண், பெண் இருபாலரும் கலந்த சுமார் 6 முதல் 8 நண்பர்களின் இனிமையான அந்த சந்திப்பு, சுமார் ஓராண்டு காலம் தொடர்ந்தது. முதல் கூட்டத்தின் போது, அதை ஏற்பாடு செய்த, திருமதி. உமாசெல்வி (இப்போதும் தொடர்பில் உள்ள நல்ல தோழி) அவர்களை, நான் கூடக் கிண்டல் செய்தேன், “நாம்தான் தினந்தோறும் வேலைநேரத்தில் சந்திக்கிறோமே! தனியாக இந்தக் கூட்டம் வேறு எதற்கு?” என்று. ஆனால், தற்போது, அந்த நினைவுகள் நெஞ்சில் ஒரு இனிமையான தாக்கத்தையும், நண்பர்களுடன் பேசி அளவளாவ, அதுபோல், பின்னர் ஒரு வாய்ப்புக் கிடைக்கவில்லையே என்ற ஏக்கத்தையும் தந்து கொண்டிருக்கிறது. இன்றும், அவர்களில் பலரோடும் நல்ல தொடர்பு இருக்கிறது.

இந்தக் கட்டுரையைக் காரணமாக்கி, என் வாழ்வில் நான் பெற்ற நண்பர்களை, நண்பர்களால் கிடைத்த அனுபவங்களைக், கடந்த சில நாட்களாக எண்ணிப் பார்த்தேன். அத்தனையையும் எழுதுவது என்றால், ஒரு மிகப்பெரிய புத்தகமே தயார் செய்து விடலாம். அந்த அளவிற்கு என் மொத்த வாழ்க்கை அனுபவங்களில் நண்பர்களின் பங்கு மிகப் பெரியது. எனக்கு, சகோதர உறவென்று நான் அதிகம் யாரையும் நினைப்பதில்லை. அண்ணன், தம்பி, அக்கா, தங்கை என்றெல்லாம் நினைப்பதை விட, நண்பர்களாகப் பழகுவதையே விரும்புகிறேன். ஏனென்றால் நான், நட்பின் மதிப்பும், பெருமையும், புனிதமும் நன்கு உணர்ந்தவன். என் வயதினரை மட்டுமல்லாது, மிக உயர்ந்த வி.ஐ.பி-க்கள், என் மாணவர்கள் என எல்லோரையும் நண்பர்களாகவே பார்க்கும் பழக்கம் கொண்டவன் நான். ஆனால், யாரையும் எளிதில் என்னை நெருங்கவிட மாட்டேன். அதனால்தான், எனக்கு நண்பர்கள் அதிகம். ஆனால், நெருங்கிய நண்பர்கள் குறைவு. தோழர்கள் (“உயிர் காப்பான் தோழன்”) என்று யாரும் இல்லை.

எல்லோரையும் போல எனக்கும்தான், எத்தனை விதமான நண்பர்கள்! இந்த உலகில் என் முதல் மற்றும் மிக நெருங்கிய நட்பாக நான் நம்பும் என் அம்மா, நான் தொடர்ந்து பள்ளி செல்வதற்கே காரணமாக இருந்த என் வாழ்வின் முதல் வகுப்பு நண்பர்கள் சரவணகுமார் மற்றும் சதீஷ். இரண்டாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை நான் உயிர் என்று கொண்டாடிய நண்பன் மாரிமுத்து. என் சென்னைப் பயணங்களின் போதெல்லாம் எனக்கு உதவிய பரணி. என்னோடு ஒரே வகுப்பில் ஒன்றாய்ப் படித்து, நீண்ட காலம் தொடர்பில்லாமல் இருந்த போது, கனவில் நான் கண்ட அதே முறையில், அதே இடத்தில் மீண்டும் சந்தித்த நண்பன் சுந்தர். என்னைத் துரத்தித், துரத்தி நண்பனாகி, இன்றும் என் வாழ்வில் நெருங்கிய நண்பனாகத் தொடர்ந்து கொண்டிருக்கும் ராஜா. மாமா பெண்ணாக இருந்தாலும், தோழியாகவே நான் எப்போதும் காணும் ஸ்ரீவித்யா. ஒன்றாகவே படித்திருந்தாலும், பெங்களுரில் வேலைக்குச் சென்ற பின், கடிதம் மூலமாக நெருங்கிய நண்பனான சதீஷ். எனது நிறுவனத்தை இடம்மாற்ற எண்ணிய போது, தானாகவே முன்வந்து உதவிய நண்பர் சுந்தரராமன். செய்த தொழிலால் பழகிப், பின் அதையும் தாண்டிய தனித்துவமான நட்பாக வளர்ந்த நண்பர்கள் ரகுபதி மற்றும் ராஜேஷ். ஒன்றாகப் பணிபுரிந்து, தற்போது புதுக்கோட்டை முழுவதும், எங்கள் இருவரையும் ஒன்றாகவே எண்ணுமளவிற்கு, என் வாழ்வோடு ஒன்றிவிட்ட நெருங்கிய நண்பர் ஸ்ரீராம். என் மீது அதிக அக்கறையும், மதிப்பும் கொண்ட என் மாணவ நண்பர்கள் அருண்பிரசாத் மற்றும் ஹிஷாம்... இன்னும்... இன்னும்... (பெயர் விடுபட்ட என் நண்பர்கள் என்னை மன்னிக்கவும். எழுதுகிற சில நிமிடங்களில் நினைவு வந்த சிலரை மட்டும் எழுதியுள்ளேன்)

இன்னும் ஏராளமான பெயர்கள் என் நெஞ்சில் விழுந்து கொண்டேயிருக்கிறது. வார்த்தைகளில் இங்கே அவர்கள் பெயரெல்லாம் விழாததற்குக் காரணம், எழுதுகின்ற எனக்கு இனிமையாக இருந்தாலும், படிக்கின்ற உங்களுக்குக் கசந்து விடக் கூடாது என்பதனால்தான்.

நான் என் நண்பர்கள் பலருக்குப் பல உதவிகளைச் செய்திருக்கிறேன். சராசரியாக எல்லோரும் செய்யும் சாதாரண உதவிகள் முதல், சிலருக்கு தேர்வில் வெற்றி பெற, சிலருக்கு தற்கொலை எண்ணத்தை மாற்ற, இன்னும் சிலருக்கு வாழ்க்கையின் முக்கியமான முடிவுகளை எடுக்க, இன்னும் எத்தனையோ விதங்களில்... அதே வேளையில், எனக்கு என் நண்பர்கள் செய்த சிறு உதவிகளையும் மறக்காமல் இருக்கிறேன்.

பாரதியார், கண்ணன் பாட்டில், கண்ணனைத் தன் தோழனாக எண்ணிக் கூறும் சில வரிகள், நட்புக்கு இலக்கணம் வகுப்பதாய் நான் நம்புகிறேன். அதையெல்லாம் பின்பற்றி வாழ்ந்திடவே முயன்று வருகிறேன். அதனால்தான், ஒன்றில் மட்டும் நான் தெளிவாக இருக்கிறேன். நண்பர்களை இழந்தாலும் பரவாயில்லை. அவர்கள் நலனை மட்டும்தான் நாட வேண்டும். அதன் மூலம் நட்பு எப்போதும் வாழ வேண்டும்.

வள்ளுவர் சொன்ன எல்லாக் குறள்களையும் என்னால் பின்பற்ற முடியவில்லை என்றாலும் கூட, பல குறள்களை முறையாகப் பின்பற்றி வருகிறேன். “காலத்தினால் செய்த உதவி”-களின் அருமையை அறிந்து, நன்றியுணர்வோடு வாழ்கிறேன். குறிப்பாக, நட்பு பற்றி சொன்ன பல குறள்கள் என் வாழ்வில் முக்கியமானவை. “நகுதற் பொருட்டன்று நட்டல்” என்று நட்பை இழந்தாலும், என் நண்பர்களின் நன்மையையே கருதி வந்துள்ளேன். நண்பர்களை அளப்பதற்கு, என் வாழ்விலும் “கேட்டினும் உண்டோர் உறுதி” என்று பலமுறை வியந்துள்ளேன்.

தேவை என்னும் போது மட்டும் என்னைத் தொடர்பு கொள்ளும் சிலரும், எனக்கு நண்பர்களாக இருக்கிறார்கள். “உறுவது சீர்தூக்கும்” நண்பர்கள் பலரையும் நான் கண்டுள்ளேன். இப்போதும் நட்பாகக் கொண்டுள்ளேன். என் அம்மா கூட சொல்வார், “அவர்கள் உன்னைப் பயன்படுத்திக் கொண்டு, காரியம் முடிந்ததும் மறந்து விடுவார்கள்” என்று. நான் எப்போதும் சொல்வேன் - “மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்ள எல்லோரும் வருவார்கள். ஆனால், ஒரு பிரச்சனை, துன்பம் என்று வரும்போது, அவர்களுக்கு என் நினைவு வருகிறது என்றால், நான் சிறந்த நண்பனாக இருக்கிறேன் என்றுதானே பொருள். தேவைக்காகவாவது என்னைத் தேடினால் போதும். அப்போதும், நண்பர்களுக்கு உதவுவதை விட வேறென்ன மகிழ்ச்சி இருக்க முடியும்” என்று.

“உடுக்கை இழந்தவன் கைபோல்” உதவிய பல நண்பர்களை, என் வாழ்வில் பெற்றிருக்கிறேன். நானும் அவ்வாறே வாழ்ந்திருக்கிறேன். அதனால் உங்களுக்கு ஒரு வேண்டுகோள்! உடுப்பைப் போன்று நம் மானம் காக்கவும், துடுப்பைப் போன்று நம் வாழ்வைக் காக்கவும் செய்பவர்கள் நண்பர்கள்தான். தேவை முடிந்ததும் உடுப்பையும், துடுப்பையும் போல, நண்பர்களையும் தூர எறிந்து விடாதீர்கள். வாழ்வு பயனற்றதாக, மகிழ்ச்சியற்றதாக மாறிவிடும். நல்ல நண்பர்களோடு செலவிடும் நேரமே, வாழ்வின் அதி உன்னதமான நேரமாக நான் எண்ணுகிறேன். பணம் தேடும் பணிகளைக் கூட விடுத்து, நண்பர்களின் மகிழ்ச்சியான வாழ்விற்காக நேரம் செலவிடவே விரும்புகிறேன்.

ஏனென்றால், “இந்த உலகின் மிகப்பெரும் ஏழை - நண்பன் இல்லாதவன்” என்ற திரைப்படப் பாடல் வரியை நான் நம்புகிறேன். நீங்களும் நம்புங்கள்! நட்பினை வளருங்கள்!

சனி, 31 ஜூலை, 2010

நட்பு வாழ்க!


ஆகஸ்ட் முதல் ஞாயிற்றுக்கிழமை, உலகம் முழுவதும் பல நாடுகளில், நண்பர்கள் தினமாகக் கொண்டாடப்படுகிறது. 1935-ல், அமெரிக்காவில் தேசிய நட்பு தினமாகத் தொடங்கிய இந்த நல்ல நிகழ்வு, பிறகு பல நாடுகளுக்கும் பரவி, தற்போது சர்வதேச நட்பு தினமாக, நண்பர்கள் தினமாக சிறந்த முறையில் கொண்டாடப்படுகிறது.

1935-ல், ஆகஸ்டு முதல் சனிக்கிழமை அன்று, அமெரிக்காவில் ஒருவர் கொல்லப்பட்டதாகவும், மறுநாள் - ஞாயிற்றுக்கிழமை அன்று அவரது நண்பர் தற்கொலை செய்துகொண்டதாகவும், அதன் நினைவாகத்தான், அமெரிக்காவில் நட்பு தினம் கொண்டாடப்பட்டதாகவும், இன்று காலையில் எனக்கொரு குறுந்தகவல் வந்தது.

என்ன காரணத்திற்காகத் தோன்றினாலும், எவ்வளவுதான் எல்லோரும் அதை வணிகமயமாக்கி, நட்பைக் கொண்டாடும் நல்ல நோக்கத்தின் வலிமையைக் குறைத்தாலும், எனக்கென்னவோ, தேவையில்லாத பல தினங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்துக் கொண்டாடி வரும் நாம், இந்த நட்பு தினத்திற்கு தாராளமாக வரவேற்பு அளித்துக் கொண்டாட வேண்டும் என்றே தோன்றுகிறது.

எல்லோருடைய நெஞ்சிலும் நண்பர்கள் குறித்த நினைவுகள் ஏராளம் இருக்கும். எனக்கும் உண்டு. பசுமையான, சில நினைவுகளை மட்டும் உங்களோடு இங்கே பகிர்ந்து கொள்ளலாம் என்று நினைக்கிறேன். ஆனால் அதை எழுதிட எனக்கு கொஞ்சம் சுதந்திரமான மனநிலையும், நேரமும் தேவை. ஓரிரு நாட்களில் இந்தக் கட்டுரையைத் தொடர்கிறேன்.

வன்முறையையும், சாதி, மத, இன, மொழி, நிற, பொருளாதார, சமுதாய வேற்றுமைகளையும் அழித்துப், புதியதோர் உலகம் படைக்க, நிச்சயமாக நட்பு தினத்தை நன்றாகக் கொண்டாடுங்கள். நண்பர்களைத் தொடர்பு கொள்ளுங்கள். சந்தித்து உரையாடுங்கள். நல்ல நட்பையும், நண்பர்களையும் போற்றுவோம்! நட்பு வாழ்க!

சனி, 24 ஜூலை, 2010

மரணம் சொல்லும் வாழ்க்கை!

“எப்பொழுதும் சாவைப் பற்றியே சிந்தித்துக் கொண்டிருப்பதால் எனக்கு வாழ்க்கையின் அர்த்தம் புரிந்திருக்கிறது” என்ற அந்த மனிதரின் பேட்டியைப் பார்த்ததும், என்னால் வியப்பை அடக்க முடியவில்லை. எந்த லட்சியமும், கட்டுப்பாடுகளும் இல்லாமல் வாழ்ந்து கொண்டிருக்கும், ஒரு மரண கானா பாடகர், அந்த விஜய் டி.வி. நிகழ்ச்சியில், சொன்ன பல விஷயங்கள், என்னைப் பலவாறும் சிந்திக்கத் தூண்டியது.

பொதுவாக நாம் எல்லாரும் சொல்வோம் - நமக்கெல்லாம் பிறந்த தேதி தெரியும், இறக்கும் தேதி தெரியாது என்று. ஆனால் உண்மையிலே யோசித்துப் பார்த்தால், நாம் பிறந்த பின்னர்தான், நமக்குப் பிறந்த தேதி தெரியும். அதற்கு முன் தெரியாது. அதே போல் தான், இறக்கும் வரையில், நம் இறந்த தேதியும் தெரியாது. வாழ்க்கையை மிகவும் சுவாரஸ்யமாக்கும் இரகசியமே அதுதானே! கண்ணதாசன் கூட சொல்வாராம் - “எனக்கு சாவைக் கண்டு பயமில்லை. ஏனென்றால் நான் இருக்கும் வரை அது என்னிடம் வரப்போவதில்லை. சாவு வரும்போது, நான் இருக்கப் போவதில்லை” என்று.

நாம் அனைவருமே, சாவைப் பற்றிப் பயப்படுகிறோம். கவலைப்படுகிறோம் அல்லது குறைந்தபட்சம் சிந்திக்கிறோம். யோசித்துப் பார்த்தால், நம்மை, நம் மரணத்தைத் தவிர, மற்ற எல்லா மரணங்களும் ஏதாவது ஒரு வகையில் பாதிக்கிறது. சுனாமியின் சீற்றத்தால் உயிரிழந்தோர், இலங்கை இராணுவத்தால் அழித்தொழிக்கப்படும் தமிழ் இனம், குண்டுவெடிப்புகள், வன்முறைகள், கொலைகள், விபத்துகள் மற்றும் நோய்களினால் மாண்டு போவோர் என்று நித்தம் நித்தம், செய்திகளின் வழியே நாம் அறியும், நமக்கு நேரடியான உறவோ, தொடர்போ இல்லாத எல்லா மனிதர்களின் மரணங்களும், நம்மைக் கலங்க வைக்கிறது. வைக்க வேண்டும். அப்போதுதான், நம்மிடம் மனித நேயம் மிச்சம் இருக்கிறது என்று பொருள்.

மேற்சொன்ன மரணங்கள் ஒரு சில நிமிடங்களில், நம் எண்ணங்களை விட்டு அகன்று விடுகின்றன. ஆனால், நம் நெருங்கிய உறவினர் அல்லது நண்பரின் மரணம், சில நேரங்களில் நம் வாழ்க்கையையே பாதிக்கிறது. மரணம் என்பது இயற்கையானது, தவிர்க்க முடியாதது, வள்ளுவர் சொல்வது போல், இந்த உலகமே “நெடுநல் உளனொருவன் இன்றில்லை என்னும் பெருமை படைத்தது” என்பன போன்ற உண்மைகளை நாம் அனைவரும் அறிவோம். இருந்தாலும், நாம் ஏன் இந்த மரணங்களால் பாதிக்கப்படுகிறோம்? – யோசி!

ஒரு பக்கம் பார்த்தால், மரணம் அடைந்தவரின் சடலத்தருகே இருந்து கொண்டு, இரவு பகலாக ஒப்பாரி வைக்கிறோம். இன்னொரு பக்கம் பார்த்தால், பிணத்தின் முன் ஆடுகிறோம், வெடி வெடிக்கிறோம், படையல் என்று விருந்து உண்கிறோம். சற்றே குழப்பமாகத்தான் உள்ளது. நாம் மரணத்தை வெறுக்கிறோமா அல்லது கொண்டாடுகிறோமா..?

என்னைப் பொறுத்தவரை, மரணம் என்பது கூட, பல் துலக்குவது, குளிப்பது போன்ற ஒரு சராசரி நிகழ்வே ஆகும். அதைக் கண்டு நாம் பயப்படுவதோ, கவலைப்படுவதோ, கொண்டாடுவதோ, வெறுப்பதோ பயனில்லாதது. நான், இந்த சமூகத்தில் காணப்படும் பல அவலங்களை எண்ணிப் பலவாறும் கவலைப்பட்டிருக்கிறேன். எனது பலநாள் உறக்கங்களைத் தொலைத்திருக்கிறேன். ஆனால், மரணங்கள் என்னை ஒருபோதும் பாதித்தது இல்லை. எந்த சாவு வீட்டிற்கும் சென்று நான் அழுததே இல்லை. அவ்வளவு ஏன்? இந்த உலகிலேயே, நான் மிகவும் நேசிக்கும் உயிரான என் அம்மாவிடமே, நான் சொல்வதுண்டு “நீ செத்தால் கூட, நான் அழ மாட்டேன்” என்று.

உடனே, என்னை இரக்கமே இல்லாத அரக்கன், அன்பே இல்லாத ஜடம் என்றெல்லாம் எண்ணிவிடாதீர்கள். நான் கொஞ்சம் பிராக்டிக்கலாக எதையும் அணுகுபவன். அவ்வளவுதான். மரணமடைந்தவர்களுக்காக அழுவதை விட, அந்த மரணத்தால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர், உறவினர்களுக்கு ஆறுதல் சொல்வதையும், உதவி செய்வதையுமே முக்கியமாக எண்ணுபவன் நான். மரணத்தைக் கண்டு பயப்படுவர்களாலும், கவலைப்படுபவர்களாலும் எந்த உதவியையும் செய்ய முடியாது. விவேக் ஒரு படத்தில் இதையே கிண்டலாகச் சொல்வார் “நம்மாளுங்க, இருக்கும் போது தண்ணி கூட தரமாட்டார்கள். ஆனால், செத்தபிறகு பால் ஊற்றுவார்கள்” என்று.

பல நேரங்களில், உணர்ச்சிகளுக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தை, நாம் அறிவுக்கு வழங்குவதில்லை என்னும் கருத்துடையவன் நான். சற்றே சிந்தியுங்கள். நம் வீட்டில் ஒருவருக்கு உடல்நலம் சரியில்லை என்றால் என்ன செய்வோம்..? அழுவதாலோ, புலம்புவதாலோ, ஊரைக் கூட்டுவதாலோ ஏதாவது பயன் கிடைக்குமா? அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று, உரிய சிகிச்சை அளிப்போம். நோயாளி உடல் நலம் பெறும் வரை, நம்பிக்கையை மட்டுமே அளிப்போம். அளிக்க வேண்டும். அப்படியிருக்க, மரணத்தின் போது மட்டும், ஏன் இந்தச் சிக்கல்கள்...? – யோசி!

என்னைப் பொறுத்தவரை, மரணத்தின் மீது நாம் செலுத்தும் கவனத்தை விட, அதிகமாக, வாழ்வதில்தான் செலுத்த வேண்டும். மரணம் என்பதே, நாம் வாழும் நாட்களைப் பயனுள்ளதாகவும், மகிழ்ச்சிகரமாகவும் செலவழிக்க வேண்டும் என்று நமக்கு நினைவூட்;டுவதற்கான ஒரு அடையாளம்தான். அதனால்தான், குறித்த காலத்திற்குள் செய்ய வேண்டியவற்றை, “டெட் லைன்” என்கிறோம். நான் செய்ய நினைத்த பலவற்றை, உடனே செய்து விடுவேன். என்றாவது ஒருநாள், எதிர்காலத்தில் என்றெல்லாம் நான் எதையும் வைத்துக்கொள்ளவில்லை. குறிக்கோள் இல்லாத வாழ்க்கையைப் பற்றி நான் சொல்லவில்லை. ஆனால், மிகவும் நீண்ட காலத்திற்கு நான் திட்டமிடுவது இல்லை என்றே சொல்கிறேன்.

அதனால்தான், நிறைய பணம் சேர்ப்பதற்கு முன்னதாகவே, ஒரு அறக்கட்டளையைத் தொடங்கி, யாரிடமும் நன்கொடை பெறாமல், கடந்த 4 ஆண்டுகளாக பல உதவிகளைச் செய்து வருகிறேன். விருது வாங்க வேண்டிய வயதில், ஆண்டுதோறும், சிறந்த ஆசிரியர்களைத் தேர்;ந்தெடுத்து, விருது வழங்கிக் கொண்டிருக்கிறேன். காரணம் ஒன்றுதான். நாளையே நான் இறக்க நேர்ந்தாலும், நான் வருத்தத்தோடு, ஏதாவது ஒரு நல்ல காரியத்தைச் செய்ய முடியாத ஏக்கத்தோடு இறக்கக் கூடாது என்று நினைக்கிறேன். என்னால் என்ன முடியுமோ, அதைக் காலந்தாழ்த்தாமல் இப்போதே செய்கிறேன். அதனால்தான் வாழ்க்கை எனக்கு மிகவும் மகிழ்ச்சிகரமாக உள்ளது. நீங்களும், காலம் கடத்தாமல், நல்ல செயல்களை, உங்களால் முடிந்த சமூகப் பணிகளை உடனே செய்யுங்கள்.

“நீங்கள் எதை இழந்தீர்கள் என்பதல்ல, உங்களிடம் என்ன மிச்சம் இருக்கிறது என்பதே முக்கியம்” என்ற மிகச்சிறந்த அறிவியல் அறிஞர் ஸ்டீபன் ஹாக்கிங்-கின் வாழ்க்கை எனக்குத் தந்த மந்திரச் சொற்களும், “மண்ணில் எட்டு நாள் வாழ்ந்திடும் பட்டாம்பூச்சி அழுவது கிடையாது. வாழும் நாளைச் சார்ந்தது, வாழ்க்கை என்பது” என்னும் திரைப்பாடலும், ஒவ்வொரு நாளும் என் உற்சாகத்தை வற்றாமல் காத்து வருகின்றன. ஒரு கோப்பைத் தேநீரையும் அனுபவித்துக் குடிக்கும் ஜென் துறவி போல, இந்தக் கணத்திலேயே நான் வாழ்கிறேன்.


“என்னடா துன்பம் அதை எட்டி உதை, வாழ்ந்து பார்!
எப்போதும் உன்னை நம்பி!
இடுகாடு போன பின் நடுவீடு அழைக்குமோ?
ஏறி விளையாடு தம்பி!”

என்ற பாடலுக்கேற்ப, மரணத்தை விட, வாழ்க்கையையே அதிகமாக சிந்திக்கிறேன். வாழ்பவர்களையே அதிகமாக சந்திக்கிறேன். எல்லாத் துன்பங்களிலும், பிரச்சனைகளிலும் எப்போதும் நான் மகிழ்ச்சியாகவும், உற்சாகமாகவுமே வாழ்கிறேன். என்னை விட, மகிழ்ச்சியாகவும், உற்சாகமாகவும் நீங்களும் வாழ என் வாழ்த்துக்கள்!

வெள்ளி, 16 ஜூலை, 2010

விந்தை மனிதர்கள் - 2

தவறுகள் சரியாகுமா...?

நான் உலக அளவிலான பிரச்சனைகளை விட உள்ள அளவிலான பிரச்சனைகளுக்கே அதிக முக்கியத்துவம் அளிப்பேன். ஏனென்றால் என்னைப் பொறுத்தவரை, நம் உள்ளம், உள்ளபடியே மாறினால் மட்டுமே, எல்லாப் பிரச்சனைகளுக்கும் தீர்வு வருமென்று, தீர்க்கமாக நம்புகிறேன்.

எல்லாத் தவறுகளும், தப்புகளும் சரியாக வேண்டும் என்றே நாம் அனைவரும் விரும்புகிறோம். ஆனால், இன்றைய உலகில் நாம் என்ன செய்து கொண்டு இருக்கிறோம் தெரியுமா? தவறுகளைத் திருத்தி சரிசெய்வதை விட்டுவிட்டு, தவறான நடத்தைகளையே, சரியான நடத்தைகளாக மாற்றிக் கொண்டிருக்கிறோம். இதை விட அவலம் வேறென்ன? – யோசி!

“தவறு என்பது தவறிச் செய்வது. தப்பு என்பது தெரிந்து செய்வது.
தவறு செய்தவன் திருந்தப் பார்க்கனும். தப்பு செய்பவன் வருந்தியாகனும்”

என்ற பழைய பாடல் எனக்கு நினைவுக்கு வருகிறது. நான் தப்பு, தவறு, குற்றம் என்று வார்த்தைச் சிக்கல்களுக்குள் நுழையவில்லை. தெரிந்து செய்தாலும், தெரியாமல் செய்தாலும்... அதைச் சரிசெய்ய முயற்சிக்க வேண்டும். சரி செய்ய முடியாவிட்டாலும் பரவாயில்லை. அதற்காக வருந்த வேண்டும். உரிய தண்டனையை அனுபவிக்க வேண்டும். மீண்டும் அந்தத் தவறைச் செய்யாமல் இருக்க வேண்டும்.

இதையெல்லாம் செய்யாமல் விடுவதே சரியல்ல என்ற நிலையில், அவற்றை நியாயப்படுத்த முயற்சித்தோம் என்றால், பிறகு எப்படி, எல்லாம் சரியாகும்...?

முன்னொரு காலத்தில் எதையெல்லாம் தவறு என்று சொல்லிக் கொண்டிருந்தோமோ, அதையெல்லாம் சரியென்று அறியவும், தெரியவும், உணரவும்... சொல்லப் போனால், நம்பவே தொடங்கிவிட்டோம். பள்ளிக் கூடத்திற்கு கட் அடிப்பது, பெண்களை சைட் அடிப்பது, நீலப்படங்கள் பார்ப்பது, கெட்ட வார்த்தைகள், ஆபாசமான நடவடிக்கைகள், இரட்டை அர்த்த வசனங்கள், நமது உடலழகை எல்லாருக்கும் வெளிச்சமிட்டுக் காட்டுவது, வன்முறையில் ஈடுபடுவது, இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம். பூமியின் தோற்றத்தில் வேண்டுமானால், தவறு சரியாகலாம். நம் வாழ்க்கை முறையிலும், நம் குணங்களிலும் எப்படி தவறுகள் சரியாக மாறும்...?

ஆபாசமான படங்களை முழுவதும் வெளியிட்டுவிட்டு, சமூக அவலங்களைப் பதிவு செய்வதாக நியாயப்படுத்தும் பத்திரிக்கைகள்...

பொறுக்கிகளையும், ரௌடிகளையும் கதாநாயகக் கதாபாத்திரங்களாக்கிவிட்டு, யதார்த்தத்தையே காட்டுவதாக நியாயப்படுத்தும் சினிமாக்கள்...

வன்முறையையும், ஆபாசத்தையும், அருவெறுப்புகளையும் நம் வீட்டின் வரவேற்பறைக்கே கொண்டுவரும் தொலைக்காட்சி சேனல்கள்...

இவையெல்லாம், இந்த எண்ணங்கள் நம்மில் வேரூன்ற, வளர, பரவ முக்கியக் காரணம்.

பல ஆண்டுகளுக்கு முன், ஒரு பத்திரிக்கையில் ஒரு கேள்வி – பதில்.

கேள்வி: சாதாரணப் படத்திற்கும், “ஏ” படத்திற்கும் என்ன வித்தியாசம்?
பதில்: சாதாரணப் படங்களைக் குடும்பத்தோடு சென்று பார்ப்பார்கள். “ஏ” படங்களைக், குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவரும், தனித்தனியே சென்று பார்ப்பார்கள்.

இந்த பதிலில், ஏன் சேர்ந்து போய் “ஏ” படங்களைப் பார்க்க மாட்டார்கள் என்ற கருத்தை மட்டும் யோசியுங்கள். ஏனென்றால், அது தவறு என்று நினைத்தனர். அதனால், மனங்கெட்டவர்களும், மானங்கெட்டவர்களும் மிகக் குறைவாக இருந்தனர். ஆனால் இன்று, ஆறாம் வகுப்புப் படிக்கும் சிறுவர்கள் கூட, ஆளுக்கு ஐந்து ரூபாய் போட்டு, இன்டர்நெட்டில், ஆபாசப்படங்களைச் சேர்ந்து பார்க்கின்றனர். அதன் மோசமான விளைவுகளைப் பற்றி நான் விளக்கத் தேவையில்லை என்று நினைக்கிறேன்.

தவறுகளைத், தவறு என்று கருதும் வரை, அவற்றைச் செய்ய எல்லோரும் பயப்படுவர். தயங்குவர். மறைந்தும், ஒளிந்தும் செய்வர். மாட்டிக் கொண்டால் தண்டனையும், அவமானமும் அடைவர். அதனால் வருந்துவர். பின் திருந்துவர். இந்தக் காரணங்களால், தவறுகள் குறைவாக இருக்கும். ஆனால், இப்போது நடப்பது என்ன?


நாம் ஏதோ ஒன்றை நினைக்கவும், பேசவும், செய்யவும் நாம் பெற்றிருக்கும் உரிமையையே அதிகாரம் என்கிறோம். ஆனால் நாம், நம் அதிகாரத்தை முறையாகப் பயன்படுத்துகிறோமா..? அதிகாரத்தை நிலைநிறுத்தத் தேவையில்லாமல் தன் பலத்தைப் பிரயோகிப்பது... ஏதோ அமெரிக்கா மட்டும்தான் என்று எண்ணிவிடாதீர்கள்... நம்மில் பலருந்தான். நாம் எல்லோரும் அதிகாரத்தைத் தவறாகவே பயன்படுத்தி வருகிறோம். திருக்குறளில் வரும் அதிகாரங்கள் உட்பட... குறிப்பாக, நான் குறிப்பிட விரும்புவது, தவறுகளை சரியானதாக்கிக் கொண்டிருக்கும் நம் எதேச்சாதிகாரத்தை.

மிகச் சாதாரண அளவில் ஒரு உதாரணம் சொல்கிறேன். ரயிலில் முன்பதிவு செய்பவர்கள் பயணிக்கும் பெட்டிகளில், முன்பதிவு செய்யாத ஒருவர் பயணம் செய்வதே குற்றம் என்று சட்டம் சொல்கிறது. இன்றைய சூழ்நிலையில், அவசரமும், மக்கட் பெருக்கமும் அதைச் சரியாகப் பின்பற்ற விடவில்லை. பரவாயில்லை. ஆனால், முன்பதிவு செய்யாத ஒருவர், முன்பதிவு செய்து முறையாக வருபவர்களுக்கு இடமளிக்காமல் தாம் அமர்ந்து கொள்வதும், இருக்கைகளை மாற்றச் சொல்வதும், அதிகாரம் செய்வதும், வம்புச் சண்டையிடுவதும்... அப்பப்பா... என்னால் தாங்கவே முடியவில்லை. தவறுகளை மனித உரிமைகளாக்கும் இவர்களை என்ன செய்வது...?

ரயில் சம்பவம் கூட ஒரு எளிமையான, சாதாரணமான உதாரணம்தான். ஆனால், இந்த சமூகத்தையே கெடுக்க வல்ல, கொடுந் தீங்கு இழைக்கக் கூடிய, மனித இனமே எண்ணி வெட்கித் தலைகுனியக் கூடிய, குற்றங்களை நியாயப்படுத்துகின்ற, பல மோசமான செயல்களை, நாம் எண்ணற்ற வேளைகளில், வேலைகளில், தொடர்ந்து செய்து வருகிறோம். அதுவும்... கொஞ்சம் கூட கூச்சமே இல்லாமல்.

மனித சட்டங்கள், சமூக சட்டங்கள், அரசியல் சட்டங்கள் என்று எதையுமே நாம் மதிப்பதில்லை. சட்டங்கள் மீறப்படுவதை எந்த விதத்திலும் நியாயப்படுத்துவதை, நான் விரும்புவதில்லை. தவறான சட்டங்கள் கூட, அமைதியான வழியில், முறையாகத் திருத்தப்பட வேண்டுமேயன்றி, அதை முரட்டுத்தனமாக, அதுவும் சுயலாபத்துக்காக, மீறுவதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

அதைவிடக் கொடுமை... சமீபத்தில், ஒரு இணையதளத்தில் ஒருவர் கட்டுரை எழுதியிருக்கிறார். லஞ்சம் வாங்குவதை சட்டமாக்கிவிடலாம் என்று. அதற்கு விரிவான விளக்கம் வேறு. சட்டத்தை மீறித் தவறு செய்யக் கூடாது என்பதற்காக, தவறுகள் அனைத்தையும் சட்டமாக்கிவிடும், முட்டாள்தனமான யோசனைகளைத் தயவு செய்து, குப்பையில் போடுங்கள். “இலக்கு எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியம் அதை அடைவதற்கான வழிகளும்” என்ற காந்தியடிகளின் வார்த்தைகளின்படி, நாம் வாழ முற்பட வேண்டும். வெறும் சட்டங்களால் மட்டும் எதையும் சாதித்துவிட முடியாது என்பது எனக்கும் புரிகிறது. ஆனால், மக்கள் மனங்களை நல்வழியில் மாற்ற முயற்சிக்க வேண்டுமே தவிர, அதற்காக, தவறு செய்வதை சட்டமாக்கி, உரிமையாக்கி விடாதீர்கள்.

எல்லாக் குற்றங்களுக்குப் பின்னாலும் ஒரு காரணம் இருக்கும். அதற்காக, குற்றங்களை நியாயப்படுத்துவதை நிறுத்துவோம். எப்போதும் சரி எது என்பது பற்றியே யோசிப்போம். அதைச் சரியாகச் செய்வதை ஒன்றையே மூச்சாக சுவாசிப்போம். தவறுகள் ஒருபோதும் சரியானதாக்கப்படாமல் பார்த்துக்கொள்வோம். தவறுகள் செய்யாமல், மக்கள் அனைவரும் வாழ்வதற்கான வழிமுறைகளைப் பற்றி சிந்திப்போம். அவற்றை நடைமுறைப்படுத்த முயற்சிப்போம்.

என்றாவது ஒருநாள் நிச்சயம் விடியும்..! அதுவும் நம்மால் மட்டுமே முடியும்..!

செவ்வாய், 6 ஜூலை, 2010

பேருக்காக சேவை...?


“ஊருக்கு உழைத்திடல் யோகம்” என்றார் மகாகவி பாரதி. “சேவை செய்வதே ஆனந்தம்” என்று வாழ்ந்த மிகப்பெரிய, அரிய மனிதர்கள் பலர் நம்மிடையே உண்டு. ஆனால், இன்று சமுதாய சேவையின் நிலை என்ன?

இந்த சமூகத்தைப் பொறுத்தவரை, நாம் இன்று அனுபவித்துக் கொண்டிருக்கும் எல்லா வசதிகளும், வாய்ப்புகளும், நலங்களும், இன்பங்களும், நமக்கு உறவில்லாத, சொல்லப்போனால்... தொடர்பே இல்லாத பலரின் போராட்டங்களால், தியாகங்களால், சமூக நோக்கால், உயரிய சிந்தனைகளால், பொதுநலத் தொண்டுகளால் விளைந்தவை என்பதை நாம் மிகச் சுலபமாக மறந்துவிட்டதன் விளைவுதான், இன்று நாம் அனுபவித்துக் கொண்டிருக்கும் துன்பங்கள் அனைத்தும்.

போராடவும், சேவை செய்யவும், தியாகம் செய்யவும் யாரோ சில இளிச்சவாயர்கள் நமக்கெல்லாம் எப்போதும் வேண்டும். ஆனால், நாம் மட்டும் இவை எவற்றிலும் பங்கெடுக்காமல், அதன் நற்பலன்களை மட்டும் அனுபவிக்கும் சாறுண்ணிகளாக, ஒட்டுண்ணிகளாக .... மன்னிக்கவும்.... மற்றவர்களின் இரத்தத்தை உறிஞ்சி உயிர் வாழும் ரத்தக் காட்டேரிகளாக சுக வாழ்வு வாழ வேண்டும். என்ன ஒரு தீய எண்ணம்...? என்ன ஒரு மோசமான வாழ்க்கை...?

நாம் அரசியல் சுதந்திரம் பெறுவதற்குக் கூட பல்லாண்டுகள் தாமதம் ஆனதற்கு, நம்முடைய இந்த எண்ணம்தான் காரணம். முப்பது கோடி இந்தியர்களும், அப்போதே ஒன்று திரண்டு, ஓரணியில் உழைத்திருந்தால், ஒரே மாதத்தில் ஆங்கிலேயர்கள் நம் நாட்டை விட்டு ஓடியிருப்பார்கள். ஆனால், நம் முன்னோர்களில் ஏராளமானோர், அப்போதும் அவனிடம் அடிமைகளாய் ஊழியம் செய்து, ஊதியம் பெற்றுக் கொண்டுதானே இருந்தனர்.

கல்வி, வேலைவாய்ப்பு, அறிவியல், சமத்துவம், உடல்நலம், வாழ்க்கைத் தரம் என இன்னும் அனைத்துத் துறைகளிலும், இந்தியா போக வேண்டிய தூரமும், எட்ட வேண்டிய உயரமும் மிக அதிகம். அதற்கு சிலர் மட்டும் உழைத்தால் போதாது. எல்லோரும் ஒன்று சேர வேண்டும்.

உடனே, நான் ஏதோ உங்கள் எல்லோரையும், உங்கள் வாழ்க்கையையே தியாகம் செய்துவிட்டு, மகாத்மா காந்தியைப் போலவோ, மதர் தெரசாவைப் போலவோ சமுதாயப் பணிகளில் ஈடுபடச் சொல்வதாய் எண்ணிவிடாதீர்கள்! நடைமுறையில் எல்லாருக்கும் அது சாத்தியமில்லை என்பது எனக்கும் தெரியும். ஆனால், அதற்காக, முழுவதுமான ஒரு சுயநல வாழ்வை மட்டுமே வாழ்வது எந்த விதத்தில் நியாயம் என நீங்களே சொல்லுங்கள்! யோசி...!

“இந்த உலகில் நாம் வாழ்வதற்காகத் தரும் வாடகைதான் சேவை” என்ற கோணத்தில் பார்த்தால், நாமெல்லாம் எத்தனை ஆண்டுகளாக, வாடகையை முறையாகத் தரவில்லை என சிந்தியுங்கள். இதில் மிகப்பெரிய கொடுமை... சமுதாய சேவை செய்பவர்களை நாம் நடத்தும் விதம்தான்...!

சேவை செய்பவர்களை, வேலை இல்லாதவர்கள், பொழுது போகாதவர்கள், ஊர் வம்புக்காக அலைபவர்கள், பொறுப்பில்லாதவர்கள், அவர்கள் பேருக்காக செய்கிறார்கள், பெயர் - புகழுக்காக செய்கிறார்கள், விளம்பரத்திற்காக செய்கிறார்கள், சுய லாபத்திற்காக செய்கிறார்கள் என எத்தனை விதமாகக் கிண்டலும், கேலியும், விமர்சனமும் செய்கிறோம்... இதுவரை நாம் எச்சில் கையால் காக்கை விரட்டாதவர்கள் என்ற எந்தவிதமான குற்ற உணர்வும் இல்லாமலே...

சமீபத்தில் நான் ரோட்டரி சங்கத்தின் தலைவராகப் பணியேற்றேன். விழா அழைப்பிதழ் கொடுக்கப் போனபோது, ஒரு ஆடிட்டர் என்னிடம் மிகுந்த அக்கறையுடன் சொன்னார். “இதையெல்லாம் விட்டுடுங்க தம்பி. இன்னிக்கு நாலு பேரு புகழும்போது நல்லாத்தான் இருக்கும். ஆனால், பணம் இருந்தாத்தான் மதிப்பு. பணம் இருந்தால், பதவி, புகழ் எல்லாம் தானே வரும். அதனால உருப்படியா ஏதாவது வேலையைப் பாருங்க” என்று. அந்த ஆடிட்டர் மட்டுமல்ல. இதே கருத்தை அவரவர் பாணியில் பலர் சொல்ல நான் கேட்டிருக்கிறேன். நான் பல அமைப்புகளில் பல பொறுப்புகளை வகித்துவிட்டேன். நிறையப் புகழும் அடைந்திருக்கிறேன். சேவை செய்வதினால் இவை எல்லாம் கிடைத்திருக்கலாம். ஆனால், அதற்காக எல்லாம் நான் சமூக சேவை செய்வதில்லை. அதாவது நான் பணியாற்றுவதற்குத்தான் ஊதியம் பெறுகிறேனே தவிர, ஊதியத்திற்காக எந்தப் பணியையும் செய்வது இல்லை. இன்னும் புரியும்படி, கொஞ்சம் லோக்கலாகச் சொன்னால், நான் சாப்பிட்டு, செரித்தது போக மிச்சக் கழிவினை வெளியேற்றுவதற்காகத்தான் மலம் கழிக்கிறேனே தவிர, மலம் கழிப்பதற்காக சாப்பிடுவது இல்லை.

அதே வேளையில், எனக்குப் பெயருக்காக, (பேருக்காக அல்ல) புகழுக்காக சேவை செய்பவர்களையும் குறை கூறுவதில் உடன்பாடில்லை. ஏனென்றால், புகழுக்காக ஒரு பணியைச் செய்பவர்கள், நிச்சயமாக மோசமான செயலைச் செய்ய மாட்டார்கள். பணம், பதவி, அதிகாரம், ஆடம்பரம், சொத்து, சுகம், மோகம் போல புகழும் ஒரு போதைதான். ஆனால், புகழ் என்பது மற்ற போதைகள் போல, ஒருக் காலத்திலும் மற்றவர்களுக்குக் கேடு செய்யாது. புகழை விரும்பும் யாரும் பழிகொள்ள விரும்ப மாட்டார். உதாரணமாக, ஒரு காலத்தில், அரசியலில் பெரும் செல்வந்தர்கள் மட்டுமே ஈடுபட்டனர். அரசியலைப் பயன்படுத்தி சம்பாதிக்க வேண்டிய தேவையில்லாமல் இருந்ததால், அவர்கள் புகழுக்காக மட்டுமே அரசியல் செய்தனர். அதனால் புகழ்தரக்கூடிய, மக்களிடம் மதிப்புப் பெறக்கூடிய செயல்களை மட்டுமே செய்தனர். ஆனால், தற்போது என்ன நடக்கிறது. அரசியலில் ஈடுபடுவதே பணம் சம்பாதிக்கத்தான் என்ற முடிவோடுதான் நடந்து கொள்கின்றனர். மானம், வெட்கமே பார்க்காத இவர்கள், புகழைப் பற்றியா கவலைப் படுவார்கள்? அதனால், நல்ல செயல்களைச் செய்யாமல் இருப்பதோடு மட்டுமில்லை, எல்லாவிதமான மோசமான, தீய செயல்களையும் எந்தவிதமான தயக்கமும் இன்றிச் செய்கிறார்கள். (இந்தக் கருத்தையும், செல்வந்தர்கள் மட்டுமே அரசியலில் ஈடுபடலாம் என்று நான் சொல்வதாகப் புரிந்து கொள்ளாதீர்கள். அரசியலுக்கு வருவதன் நோக்கம் பற்றி மட்டுமே இக்கருத்து)

எல்லாப் பணிகளிலும், தவறு செய்பவர்கள் எப்போதும் இருப்பார்கள். அதற்காக, எல்லாரையும் குறை சொல்லக் கூடாது என்பது நாம் அறிந்ததே. நாடோடிகள் படத்தில் வரும் நகைச்சுவை நடிகர் போல், சிறிய சேவை செய்தாலும், பெரிய அளவில் பேனர் வைத்து விளம்பரம் செய்யும் பலர் இருக்கத்தான் செய்கிறார்கள். ஆனால், என்னைப் பொறுத்தவரை அதில் கூட நான் குற்றம் காண்பதில்லை. எதுவும் செய்யாமலே இருப்பவர்களை விட, ஏதாவது உருப்படியான சமூக சேவையை செய்துவிட்டு, விளம்பரம் செய்துகொள்பவர்களை நான் பாராட்டுகிறேன். ஏனென்றால், ஒரு சேவை எதற்காக செய்யப்படுகிறது என்பதை விட, அதனால் விளையும் நற்பலன்கள் என்னென்ன என்றே நான் கணக்கிடுகிறேன். எந்தத் தீமையும் இல்லாத, உண்மையாக பலன்தரும் ஒரு பொதுநல சேவை, பேருக்காகவோ, பெயர்-புகழுக்காகவோ, விளம்பரத்துக்காகவோ அல்லது சுயலாபத்துக்காகவோ, எதற்காக செய்யப்பட்டாலும் பரவாயில்லை. தயவுசெய்து அதை ஊக்கப்படுத்துங்கள். குறைகள் இருந்தால் கூட, குறைகளைச் சரி செய்வதே உங்கள் நோக்கமாக இருக்கட்டும். சேவை செய்பவரைக் குற்றவாளி ஆக்கி, சேவையைத் தடுத்து விடாதீர்கள். அரசாங்கம் செய்யும் பல திட்டங்கள் கூட, இந்த முறையில்தான் வீணாகிறது என்பதை மறவாதீர்கள்.

“இருட்டைக் குறை சொல்வதை விட, ஒரு மெழுகுவர்த்தியையாவது ஏற்றி வைப்பதே மேலானது!”

நான் எனது 14-ஆம் வயது முதல், கடந்த 15 ஆண்டுகளாகத், தொடர்ந்து பல சமுதாய சேவைகளைச் செய்து வருகிறேன். ஆனால், அந்த இளம் வயதிலேயே, என்னை சமுதாய சேவையில் ஈடுபடுத்திய பெருமைக்குரிய என் அண்ணன், தற்போது அதையே வெட்டி வேலை என்கிறார். பணம்தான் இந்த உலகில் மதிப்பைத் தரும் என எனக்கே உபதேசம் செய்கிறார். காரணம்...? சேவைக்குரிய மதிப்பும், அங்கீகாரமும் இந்த சமுதாயத்தில் தரப்படவில்லை என்பதுதான்.

பொதுவாகவே, சமுதாய சேவை செய்பவர்கள், தங்கள் பணம், பொருள், உழைப்பு, நேரம், தங்கள் சுகம், தங்கள் குடும்பம், தங்கள் வேலை என பலவற்றைத் தியாகம் செய்துதான் சேவை செய்ய முடியும். இந்த சமுதாயம் அவர்களுக்குத் தரும் ஒரே பிரதிபலன் மதிப்பு, மரியாதை அல்லது புகழ். விவேக் ஸ்டைலில் சொன்னால், “இந்த உலகத்துல இருக்கும் போது தவிச்ச வாய்க்குத் தண்ணி கூட கொடுக்க மாட்டார்கள். ஆனால் செத்த பிறகு பால் ஊற்றுவார்கள்”. காமராஜருக்கும், காந்தியடிகளுக்கும் நாம் அதைத்தான் செய்தோம். அய்யா, அந்த மதிப்பையும், புகழையுமாவது தர வேண்டாமா? அதைக் கூட செய்வதற்கு யோசித்தால் எப்படி...?

இன்று செல்வம் படைத்தவர்கள் எல்லாம் செல்வாக்குப் படைத்தவர்களாகி விட்டார்கள்! பணம் படைத்தவர்கள் எல்லாம் பாராட்டுக்கு உரியவர்களாகி விட்டார்கள்! அதிகாரம் படைத்தவர்கள் எல்லாம் ஆண்டவனாகி விட்டார்கள்! கடமையைச் செய்பவர்களுக்குக் கூடக் கையூட்டாய்ப் பொருளும், புகழும் தரும் காலமிது! இந்த நிலையில், உண்மையாக, உருப்படியாக ஒரே ஒரு பொதுநலச் சேவை செய்திருந்தாலும் பரவாயில்லை... அவரைப் பாராட்டுங்கள்... போற்றுங்கள்... பாராட்டு விழாக்களுக்காகவாவது, மக்களுக்கு நல்ல திட்டங்கள் கிடைத்தால் நன்மைதானே! அதனால் மேலும் சேவை செய்வோர் எண்ணிக்கையும், சேவைகளின் எண்ணிக்கையும் கூடும்.

எனவே, சேவையே பேருக்காக... அதாவது பிறருக்குப் பயனில்லாமல் இருக்கக் கூடாதே தவிர, ஒருவர் தன் பெயருக்காக... அதாவது புகழுக்காக சேவை செய்வதில் எந்தத் தவறும் இல்லை. சேவை செய்வதை விந்தையான ஒரு செயலாகப் பார்ப்பதை நிறுத்தி, நாம் எல்லாரும் வழக்கமாக்கினால், நாட்டுக்கும் நமக்கும் நன்மைதானே!

தெலுங்கில் வெளிவந்த ஸ்டாலின் திரைப்படத்தில், ஹீரோ சிரஞ்சீவி, தான் ஒவ்வொருவருக்கு உதவி செய்யும் போதும், பிரதிபலனாக, அவர்களை மூன்று பேருக்கு உதவி செய்யச் சொல்வாராம். அது போலவே, நாம் கூட சேவை செய்வதை ஒரு வழக்கமாகவும், பழக்கமாகவும் மாற்ற முடியும். சாலை விபத்தில் இறந்து போன ஹிதேந்திரன் என்ற இளைஞனின் பெற்றோர், அவனது உடல் உறுப்புகளைத் தானமாகக் கொடுத்துப், பலருக்கும் வாழ்வளித்த ஈடு இணையற்ற அருஞ்செயலை நாம் அனைவரும் அறிவோம். ஆனால், அந்த இளைஞனின் இதயம், அபிராமி என்ற ஒரு சிறுமிக்குப் பொருத்தப்பட்டது. விதியின் கொடுங்குணத்தால், அச்சிறுமி இரண்டு ஆண்டுகளில் இறந்து போனாள். இறந்தவுடனே, அவளது கண்கள் தானமாகக் கொடுக்கப்பட்டன என்பதை நம்மில் எத்தனை பேர் அறிவோம்...?

இந்தக் கட்டுரையைப் படிப்பவர்களுக்கு என்னுடைய வேண்டுகோள்:

ஒருவரின் சேவைகள் உண்மையானதா, போலியானதா என்று சரியாகத் தெரியவில்லை என்றாலும் பரவாயில்லை. பாராட்டுங்கள். ஏனென்றால், நூறு போலி சேவையாளர்களை நீங்கள் அங்கீகரித்தால் கூடத் தவறல்ல. ஆனால், ஒரே ஒரு உண்மையான சமூக சேவகரை நீங்கள் அங்கீகரிக்காமல், பாராட்டாமல் விட்டுவிட்டால் கூட, நாளைய சமுதாய முன்னேற்றத்தை அது கட்டுப்படுத்தும். மட்டுப்படுத்தும்.

உண்மையான சேவை செய்பவர்களைப் போற்றுங்கள். பாராட்டுங்கள். மதிப்பளியுங்கள். புகழுங்கள். அங்கீகாரம் செய்யுங்கள். அது மட்டுமே சேவை செய்பவர்களையும், சேவை செய்யும் எண்ணத்தையும், அதிகரிக்கும், வலுப்படுத்தும். அதன் மூலம் நம் வாழ்வும், சமூக நிலையும் சிறக்கும், உயரும்.


சேவை செய்வோருக்கு என் பணிவான வேண்டுகோள்:

தயவுசெய்து, உண்மையாகவே மற்றவர்களுக்குப் பயனில்லாததையோ, செய்யாததையோ, நல்லன அல்லாததையோ சேவை என்று சொல்லவோ, விளம்பரப்படுத்தவோ செய்யாதீர்கள். அதனால், உண்மையான சேவை செய்பவர்களுக்கான மரியாதை முற்றிலும் குறைகிறது. உங்களால் பாதிக்கப்பட்டு, உண்மையான சேவை செய்பவர்கள் நிறுத்திவிட்டால், உலகமே பாதிக்கப்படும்.

அதேபோல், உண்மையான சேவை செய்பவர்கள், “உலகம் இப்படித்தான்” என்பதை உணருங்கள். எந்தக் காரணத்திற்காகவும், உங்கள் சேவைகளை நிறுத்தி விடாதீர்கள். தொடர்ந்து செய்யுங்கள். உங்களால்தான், இந்த உலகமே அழியாமல் இன்றும் இருப்பதாக நான் சொல்லவில்லை. புறநானூற்றுப் பாடலின் வழியாய்த், தமிழ் மொழியே சொல்கிறது. நம்புங்கள். என்றும் நம்பிக்கையோடு செயல்படுங்கள். நாளை நல்லபடியாய் விடியும்! நம்மால் முடியும்!

ஞாயிறு, 27 ஜூன், 2010

ஒரு ஆள் உலகம்


தலைப்பைப் பார்த்தவுடன், ஏதோ தனிமையிலே இனிமை காண்பதைப் பற்றிச் சொல்லப்போகிறேன் என்று முடிவு செய்து விடாதீர்கள். இந்தக் கட்டுரை நம் ஒவ்வொருவரையும், தனி ஆளாக, இந்த உலகத்தின் பிரதிநிதியாக சிந்திக்கப் போகிறது. ஆமாம். அதனால்தானே, ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்ற பழமொழியே வந்தது.

சமீபத்தில் ஆனந்த விகடனில், “ஹாய் மதன்” பகுதியில், ஒரு கேள்வி வெளியாகி இருந்தது. “நான் ஒருவன் மட்டும் ஓட்டுப் போடாவிட்டால் என்ன?” என்பதுதான் அந்தக் கேள்வி. அதற்கு மதன் கூறியிருந்த பதிலை விட, அந்தக் கேள்வி என் அடிமனதில் ஆயிரம் சிந்தனைகளைத் தோற்றுவித்தது. அதுவும், பல்லவன் எக்ஸ்பிரஸ் ரயிலில், சென்னையிலிருந்து, திருச்சி நோக்கி வந்து கொண்டிருந்த போது இக்கேள்வியை நான் படிக்க நேர்ந்தது. ரயிலின் சப்தம், வளைவுகள், பக்கத்திலிருந்த சக பயணிகளின் உரையாடல்கள், சங்கடங்கள் என எதுவும், இக்கேள்வியில் இருந்து என்னை திசை திருப்பிவிட முடியவில்லை. கையில் புத்தகத்தை வைத்துக்கொண்டு, ஜன்னலின் வழியே, இயற்கையின் மீது பார்வையைப் படரவிட்டவனாய் இருந்த என்னுள், இயற்கையாகவே, இந்த மனிதர்களின் இயற்கை குறித்த எண்ணங்கள் மேலோங்கியது.

“நான் ஒருவன் மட்டும் ஓட்டுப் போடாவிட்டால் என்ன?” ஓட்டுப் போடுதல், ஜனநாயகக் கடமை என்பது சரிதான். ஆனால், ஓட்டுப்போடுவது மட்டும் குறித்தல்ல எனது சிந்தனை. எந்த ஒரு செயலானாலும், அதே கேள்வியைக் கேட்டுக்கொள்ளலாம். “நான் ஒருவன் மட்டும் இதைச் செய்தால் என்ன? அல்லது செய்யாமல் இருந்தால் என்ன?” உண்மைதானே. யாரோ ஒரே ஒருவர் ஒரு செயலைச் செய்தாலோ, அல்லது செய்யாமல் விட்டுவிட்டாலோ, இந்த உலகில் என்ன மாற்றம் நிகழ்ந்து விடும்? பூனை கண்ணை மூடிக் கொண்டுவிட்டால், உலகம் இருண்டா போய்விடும்? – யோசி...!

நாம் எல்லோருமே, அடிப்படையில் பல செய்திகளைப், பொதுவாழ்வில் ஒருவிதமாகவும், தனி வாழ்வில் வேறு விதமாகவுமே பேசியும், செய்தும் வருகிறோம். இதற்கு ஒரு உதாரணமாக, எனது முந்தைய கட்டுரை “விந்தை மனிதர்கள்-1”-ல் கூட பல உதாரணங்களைக் கூறி இருந்தேன். “நான் ஒருவன் குப்பை போட்டால் என்ன?”, “நான் ஒருவன் சிக்னலை மதிக்காவிட்டால் என்ன?”, இது போன்ற ஆயிரம் கேள்விகள், தனி வாழ்வில் தனி மனிதர்கள், தங்கள் செயல்களுக்கு நியாயம் கற்பிப்பதற்காகக் கூறுவது. ஆனால், அவர்களே, மற்றவர்களுக்கென்று வரும்போதும், பொது வாழ்விலும் இவற்றையெல்லாம் தவறு என்கிறார்கள். சரி. ஏன் தவறு என்று பார்த்துவிடுவோம்.

முதலில், இந்த விளக்கங்கள் எல்லாம் நம்மை சில மோசமான பழக்கங்களுக்கு அடிமையாக்கிவிடும். அதாவது தவறுகளுக்கு நியாயம் கற்பிக்கப்போய், தவறுகளே வழக்கமாகப் பழக்கமாக மாறிவிடும் அபாயம் உள்ளது. உதாரணமாக, ஒரு குழந்தை “இன்று ஒருநாள் மட்டும் லேட்டா எழுந்திரிச்சா என்ன” என்றோ, “இன்று ஒருநாள் மட்டும் ஸ்கூலுக்குப் போகலைன்னா என்ன?” என்றோ, கேட்கத் தொடங்கினால், அவையே பழக்கமாகி, பிறகு, லேட்டாக எழுவதும், ஸ்கூலுக்குப் போக அடம்பிடிப்பதும் வாடிக்கையாகத் தொடர்ந்துவிடும் என்பதுதான் அவற்றில் உள்ள அபாயம். தவறு என்பது தவறிச் செய்வது என்ற நிலை மாறி, தவறு செய்வதையே வாழ்க்கையாக்கி விடுகிறோம். எனவே, தவறுகளைத் திருத்துவதை விட்டு விட்டு, தயவு செய்து உங்கள் தவறுகளுக்கு நியாயம் கற்பிக்க முயலாதீர்கள். பிறகு, அதுவே உங்கள் வாழ்க்கையை வீணாக்கிவிடும். சிகரெட், மது, மாது, வன்முறை, லஞ்சம், ஊழல் உள்ளிட்ட எல்லா சமூகக் கேடுகளும் இந்த நியாயப்படுத்துவதினால் விளைந்தவைதான் என்பதை மறவாதீர்கள்.

மற்றொரு முக்கியமான சிந்தனை - இந்த உலகத்தின் வரலாறு என்பது, சில தனிப்பட்ட மனிதர்களின் வரலாறு என்பதை மறவாதீர்கள். சில அரசர்கள், சில அறிவியலாளர்கள், சில சிந்தனையாளர்கள், சில சாதனையாளர்கள் என உலக வரலாறே சில மனிதர்களின் வாழ்க்கையைப் பற்றியதுதான். நமக்குப் புரிகிற பாணியில் சொன்னால், எத்தனை படம் எடுத்தாலும், அதில் எத்தனை கேரக்டர்கள் வந்தாலும், அது அப்படத்தின் ஹீரோக்களின் வாழ்க்கையைப் பற்றியதுதான். எனவே, ஒவ்வொரு தனி மனிதனும் இந்த சமுதாயத்தின் முக்கியமான, தவிர்க்க முடியாத அங்கம். நான் ஒரு தனிமனிதன் சரியாக இருந்தால், சமுதாய மாற்றத்திற்கான ஒரு விதையை நான் விதைத்திருக்கிறேன் என்று பொருள். அது மரமாக வளர்ந்து கனிகள் கொடுக்கப் பல்லாண்டுகள் ஆகலாம். ஆனால், விதை நல்லதாக இருந்தால், மரமும், அது தரும் கனிகளும் நிச்சயம் நல்லதாகத்தான் இருக்கும். நம்புங்கள்.

நீங்கள் தசாவதாரம் படம் பார்த்திருப்பீர்கள். அதில் “கேயாஸ் தியரி” என ஒன்றை விளக்குவார்கள். அதாவது, இந்த உலகத்தின் எந்த ஒரு செயலும், வேறு ஒரு விளைவுக்குக் காரணமாக அமையலாம் என்பது. உதாரணமாக, நான் ஒருவன் மட்டும் மரத்தை வெட்டினால் என்ன என்று பலரும் செய்ததன் விளைவுதான், இன்று நாம் அனுபவிக்கும் கொடும் வெயில். "Global Warming" . இப்படி நான் ஒருவன் மட்டும் என்று நாம் செய்யும் தவறான செயல்கள் பல மோசமான விளைவுகளை ஏற்படுத்துகின்றன. நாம் ஏன் நல்ல செயல்களுக்கு, உயர்ந்த நெறிகளின் அடிப்படையில் வாழ்வதற்கு, இந்த “நான் ஒருவன் மட்டும்” வாசக்தை நல்ல வழியில் பயன்படுத்தக் கூடாது? – யோசி.

நம் கடமைகளைச் செய்யாமல் இருப்பதற்கும், தள்ளிப்போடுவதற்கும், சோம்பேறித்தனத்திற்கும், தவறுகளை நியாயப்படுத்துவதற்கும் மட்டும்தான் “நான் ஒருவன் மட்டும்...” என்ற வாசகம் பயன்படும். நான் என்பவன் இந்த உலகத்தின் பிரதிநிதி. நான்தான் உலகம் என உணருங்கள். நான் ஒருவன் தான் உலகம் என்று சுயநலத்தோடு வாழச் சொல்லவில்லை. ஆனால் நான் என்பவன், இந்த உலகத்தின் உதாரணம் என்று எண்ணுங்கள். நல்ல முன்னுதாரணமாக வாழ முயலுங்கள். நான் ஒருவன் மட்டும் என்று ஒவ்வொருவரும் எண்ணுவதால்தான் இங்கு எதுவுமே சரியாக இல்லை. சரிப்படுத்தவும் முடியவில்லை. நான் ஒருவன் மட்டும் சரியாக இருந்து என்ன பயன் என்று ஒவ்வொருவரும் எண்ணத் தொடங்கிவிட்டனர். அதற்கு நானும் ஒரு காரணமாக மாறி விட்டேன். ஒரு மாற்றாக, உலகம் எப்படி இருந்தாலும், நான் சரியாக மட்டுமே இருப்பேன். மற்றவர்கள் எல்லாம் கடமைகளை ஒழுங்காகச் செய்யவில்லை என்றாலும், நான் என் கடமைகளைச் சரியாகச் செய்வேன் என்று உறுதி கொள்ளுங்கள். செயல்படுங்கள். அப்போது இந்த உலகமே சரியான பாதையில் உங்களைப் பின்பற்றும். உலகத்தைப் பின்பற்றியவர்களை இந்த உலகம் ஒரு போதும் மதித்ததும் இல்லை. வரலாற்றில் பதித்ததும் இல்லை. யாரையெல்லாம் இந்த உலகம் பின்பற்றியதோ அவர்களே சரித்திர நாயகர்கள் என்பதை மறவாதீர்கள். இறுதியாக, சீனத் தத்துவ ஞானி கன்பூசியஸின் பொன்மொழி வாக்கியம் - உங்கள் சிந்தனைக்காக.

“எது வசதியானதோ, அதைச் செய்யாதீர்கள். எது சரியானதோ, அதை மட்டுமே செய்யுங்கள்”

சனி, 19 ஜூன், 2010

விந்தை மனிதர்கள் - 1

ஆம்! நம்முடைய வாழ்க்கை முறையில்தான் எத்தனை விசித்திரங்கள். பொதுவாக ஞானிகள் சொல்வார்கள்... வாழ்க்கை விசித்திரமானது என்று! அந்த வாழ்க்கையையும் எத்தனை விதமாக, வித்தியாசமாக, விசித்திரமாக நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இந்த விந்தை மனிதர்களைப் பார்த்தால் எனக்கும் விந்தையாக, வியப்பாகத்தான் இருக்கிறது. நாம் வாழும் முறைகளில் காணப்படும் விந்தைகளைத், தங்கள் சிந்தைகளைத் தொடுமாறு, நல்ல செயல்களில் கொண்டு விடுமாறு சொல்வதே இத்தொடரின் பணியாகும். தங்கள் கருத்துகளே இத்தொடருக்கு அணியாகும்.

சாதனையாளர்களை வியக்கின்றோம்! ஆனால்... சராசரிகளாகவே வாழ விரும்புகின்றோம்!!

மனிதர்கள் கூடும் இடங்களில் எல்லாம், நாம் பேசுகின்ற பொருளாகப் பிரபலமானவர்களும், சாதனையாளர்களுமே இருக்கிறார்கள்! ஆனால் நம்மில் பெரும்பாலானோர், அந்தச் சாதனைகளைச் செய்ய விரும்புவதில்லை! விரும்புபவர்களை வளர்ப்பதுமில்லை!

என்ன... ஆச்சரியமாக இருக்கிறதா? அவசரப்பட்டு இல்லை என்று மறுக்காதீர்கள்! ஏன் என்றால் அதுதான் உண்மை! நாம் டெண்டுல்கர் செஞ்சுரி அடிப்பதைப் பார்த்து வியக்கிறோம். அது பற்றிப் பல்வேறு விதமாக விவாதிக்கிறோம். ஆனால், நம் பிள்ளைகள் கிரிக்கெட் விளையாடுவது நமக்குப் பிடிக்காது! “இன்று சூப்பர் ஸ்டார் நீச்சல் குளத்தில் குளித்தார்” என்பது போன்ற ரஜினிகாந்தைப் பற்றிய உப்புச்சப்பில்லாத, சாதாரணமான செய்திகளைக் கூடத் தேடிப் படித்துவிட்டு, ஆச்சரியமாக அதைப் பற்றிப் பேசுகிறோம். ஆனால், நம் உறவினர் யாரேனும் சினிமாத் துறையில் பணியாற்றப் போவதாகச் சொன்னால், “உனக்கு ஏன் இந்த வேண்டாத வேலை?” என்றோ, “பையன் கெட்டுப்போயிடுவான். பார்த்துக்கங்க” என்றோ அறிவுரை சொல்கிறோம்.

கிரிக்கெட், சினிமா மட்டுமில்லை, சுயதொழில் செய்வது, வித்தியாசமாகச் சிந்திப்பது, கண்டுபிடிப்பது, கலைத்துறைகளில் திறமையோடிருப்பது எனப் பல தளங்களிலும் நம்முடைய இந்த வேடிக்கையான செயல்கள் வாடிக்கையாகிவிட்டன. இவையும், நம் வீட்டுப் பிள்ளைகளிடம், இன்றைய இளம் தலைமுறையினரிடம் மட்டும்தான் என்றில்லை. எனக்குத் தெரிந்த ஒரு நண்பர், சென்னையில் வசிக்கிறார். அவருக்கு சுமார் 35 வயது இருக்கும். கடந்த 10 ஆண்டுகளாகத் தொழில் செய்து வருகிறார். பல்வேறு பயிற்சிகளை மாணவர்களுக்கு வழங்கி வருகிறார். கடந்த இரண்டு ஆண்டுகளாக, தொழிலில் பல்வேறு பிரச்சனைகள். எதிர்பார்த்த அளவுக்கு வருமானம் இல்லை. வருமானம் குறைந்து விட்டதே தவிர, நட்டம் ஏதும் இல்லை. ஆனாலும், வீட்டாரின் தொல்லை தாங்க முடியாமல், தற்போது, சுயதொழிலை விட்டுவிட்டு, ஒரு நிறுவனத்தில் வேலைக்குப் போகின்றார். குடும்பத்திற்காக இதைச் செய்தாலும், மனதளவில் அவரால் இதை ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. இதில் வியத்தகு செய்தி என்னவென்றால், அவரது குடும்பம் ஒன்றும் பொருளாதார ரீதியாக எந்தப் பிரச்சனையிலும் இல்லை. அப்படியிருந்தும், தொழில் செய்து பத்தாயிரம் ரூபாய் ஈட்டுவதை விட, ஏதாவது ஒரு வேலைக்குச் சென்று, குறைவான சம்பளம் பெற்றாலும் சரி என்பதுதான் அவரது குடும்பத்தினரின் நம்பிக்கை மற்றும் வாதம்.

இந்த மனோபாவம், மேற்சொன்ன ஒரு நண்பரின் குடும்பத்தில் மட்டுமல்ல, பெரும்பாலான தமிழர்களிடையே உள்ளது. வேலைக்குப் போவதையே, இன்னும் சிறப்பாகச் சொன்னால், அரசாங்க வேலைக்குப் போவதையே வாழ்க்கையில் “செட்டில்” ஆவது என்று சொல்லும் வழக்கம் இன்றும் நம்மிடையே உள்ளது. எனக்கு ரொம்ப நாளாக விடை தெரியாத பல கேள்விகளில், முக்கியமான ஒன்று – “செட்டில்” ஆவது என்றால் என்ன? – யோசி...!

கம்ப்யூட்டர் பயிற்சி நிறுவனம் நடத்தி வரும் என் நண்பர் ஒருவருக்கு, நீண்ட நாட்களாகத், திருமணத்திற்குப் பெண் கிடைக்கவில்லை. அதற்கு அவரது பெற்றோர் சொல்லும் காரணம்தான் என்னை வியக்க வைக்கிறது. அந்தக் காரணம் - “அவர் வேலைக்குச் செல்லாமல் தொழில் செய்வதுதான். நீ மட்டும் வேலைக்குப் போ. அடுத்த மாதமே உனக்குத் திருமணம் நடந்துவிடும்” என்று. எங்கே போய்க்கொண்டிருக்கிறோம் நாம்? ஒரு கட்டத்தில், மாப்பிள்ளையின் வேலை மற்றும் சம்பளத்திற்கேற்ப வரதட்சணைப் பிச்சை பெற்றுக் கொண்டிருந்தோம். பிறகு, கம்ப்யூட்டர் கம்பெனிகளில் பணிபுரிபவர்களுக்கும், வெளிநாட்டு மாப்பிள்ளைகளுக்கும் முன்னுரிமை அளித்து வந்தோம். இன்னும் கொஞ்ச காலத்தில், வேலைக்கு ஆள் எடுக்கும் போது நிர்ணயிக்கும் தகுதிகள் போலத், திருமணத்திற்கும் இந்த இந்த வேலையில் இருப்பவர்கள் மட்டுமே செய்ய முடியும் என்ற நிலை வரும் போல.

உஸ்... இப்பவே கண்ணைக் கட்டுதே...!

இதற்கெல்லாம் காரணம், ரிஸ்க்கே இல்லாமல் வாழ எண்ணும் நம் பாதுகாப்பு மனப்பான்மையா...? அல்லது, நம் மனதிற்குள்ளே ஊற்றிவிடப்பட்ட, தற்போது நம் மனமெல்லாம் ஊறிவிட்ட அடிமை மனப்பான்மையா...? அல்லது ஊரோடு ஒத்து வாழ்கிறேன் என்ற பேரில் முளைத்திருக்கும், மற்றவர்களைக் கண்மூடித்தனமாகப் பின்பற்றும் மனப்பான்மையா..? – யோசி...!

தமிழகத்தின் எந்த ஊருக்கு, நான் பயிற்சி அளிக்கப் போனாலும், பெற்றோர்களில் பெரும்பாலானோர் சொல்வது, தன் குழந்தையை டாக்டராகவோ, என்ஜினியர் ஆகவோ ஆக்க விரும்புவதைத்தான். எல்லோரும், டாக்டராகவும், என்ஜினியராகவும் மட்டுமே ஆக முயன்றால், இந்த உலகின் நிலை என்னவாகும்...? இதையே நான் என் மாணவர்களிடம் விளையாட்டாகக் கேட்பேன் - “எல்லோரும் டாக்டரானால், யார்தான் பேஷண்ட் ஆவது?” என்று. சென்னை, கோவை போன்ற பெருநகரங்களில் கூட புதுமையான படிப்புகள், வேலை வாய்ப்புகள் குறித்த போதிய விழிப்புணர்வு இல்லை என்பது எனக்கு மிகுந்த வருத்தத்தை அளித்தது. இன்றைய உலகில், ஆயிரக்கணக்கான துறைகளில் லட்சக்கணக்கான வாய்ப்புகள் உள்ளன, பணம் சம்பாதிப்பதற்கும், வாழ்க்கைத் தரத்தில் உயர்வதற்கும் மட்டுமல்ல, சமுதாயத்தை முன்னேற்றுவதற்கும்தான். அப்படியிருந்தும், ஒரு சிறிய வட்டத்தைப் போட்டுக்கொண்டு, அதுவேதான் சிறந்தது, பாதுகாப்பானது என்றெல்லாம் நம்பிக்கொண்டிருக்கும் நம்மைப் பற்றி நான் வேறென்ன சொல்வது... நாம் சராசரியாக மட்டுமே வாழ விரும்புகிறோம் என்பதைத் தவிர.

உங்களுக்குப் பிடித்த, நீங்கள் வியக்கும், பிரபலமான 100 சாதனையாளர்களை ஒரு பட்டியல் போடுங்கள். சத்தியமாக அதில் ஒரு சிலர் கூட, நீங்கள் வழக்கமாகப் பார்க்கும் “செட்டில்” ஆன நபர்களோ, அரசு அலுவலக குமாஸ்தாக்களோ, வழக்கமாக நம்மால் அதிகம் விரும்பப்படும் பணிகளைச் செய்பவர்களோ இருக்க மாட்டார்கள். அவர்களில் பெரும்பாலானோர், அரசியல்வாதிகளாக, ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளாக, விளையாட்டு வீரர்களாக, விஞ்ஞானிகளாக மற்றும் தொழிலதிபர்களாகத்தான் இருப்பார்கள்.

இப்பொழுதேனும் சொல்லுங்கள். உலகின் 600 கோடிக்கும் அதிகமான மக்களோடு மக்களாக நீங்கள் சராசரி வாழ்வில் கரைந்து போகப் போகிறீர்களா...? அல்லது, நம்மை விமர்சிப்பவர்கள் குறித்துக் கவலை கொள்ளாது, வித்தியாசமாக முயற்சி செய்து, உலகமே வியந்து போற்றும் ... குறைந்த பட்சம் உள்ளுராவது வியந்து போற்றும் சாதனையாளராகப் போகிறீர்களா...? – யோசி...!

வெள்ளி, 26 மார்ச், 2010

தோற்க – கற்க!


பெற்றுக்கொள்ள மட்டுமா... கற்றுக்கொள்ளவும்தான் வாழ்க்கை!

தோல்வி பெற்றால்...

 நான் தோற்றவன் என்று பொருள் அல்ல
நான் இன்னும் வெற்றி பெறவில்லை என்றுதான் பொருள்.

 நான் எதையும் சாதிக்கவில்லை என்று பொருள் அல்ல
நான் கற்றுக் கொண்டு இருக்கிறேன் என்றுதான் பொருள்.

 நான் முட்டாளாக இருந்திருக்கிறேன் என்று பொருள் அல்ல
நான் பரிசோதனைகளுக்குத் தயாராக உள்ளேன் என்றுதான் பொருள்.

 நான் அதிர்ஷ்டம் இல்லாதவன் என்று பொருள் அல்ல
நான் முயற்சிக்கும் துணிவு உள்ளவன் என்றுதான் பொருள்.

 என்னிடம் எந்தத் தகுதியும் இல்லை என்று பொருள் அல்ல
நான் புதிய ஒரு வழியில் முயற்சிக்க வேண்டும் என்றுதான் பொருள்.

 நான் தாழ்ந்தவன் என்று பொருள் அல்ல
நான் இன்னும் மேன்மையாக வாழ வேண்டும் என்றுதான் பொருள்.

 நான் என் வாழ்க்கையை வீணடித்துவிட்டேன் என்று பொருள் அல்ல
நான் மீண்டும் தொடங்குவதற்கு வாய்ப்பு உள்ளது என்றுதான் பொருள்.

 நான் முயற்சியைக் கைவிட்டுவிட வேண்டும் என்று பொருள் அல்ல
நான் மேலும் கடினமாக முயற்சிக்க வேண்டும் என்பதுதான் பொருள்.

 என்னால் அதை அடையவே முடியாது என்று பொருள் அல்ல
எனக்கு இன்னும் பயிற்சி தேவை என்றுதான் பொருள்.

 என்னைக் கடவுள் கைவிட்டுவிட்டார் என்று பொருள் அல்ல
அவர் வேறொரு சிறந்த திட்டம் வைத்துள்ளார் என்றுதான் பொருள்.

-- எங்கோ ஆங்கிலத்தில் படித்ததின் தமிழ் ஆக்கம்

தமிழ்ப் புத்தாண்டு – தை 1-ஆ? சித்திரை 1-ஆ?

தமிழ்ப் புத்தாண்டை நாம் எந்த நாளில் கொண்டாட வேண்டும்? இதுதான் தற்போது நம்முன் நிற்கும் தமிழ் தொடர்பான மிகப்பெரிய விவாதம். இதுநாள் வரை, சித்திரை 1-ஆம் நாளை நாம் அனைவரும் தமிழ்ப்புத்தாண்டு என்று கொண்டாடி மகிழ்ந்து வந்தோம். தற்போதோ, அது ஆரியர் ஏற்படுத்திய மாயை. தமிழ்ப் புத்தாண்டு “தை 1” அன்றுதான் கொண்டாடப்பட வேண்டும் என்று பல தமிழ் அறிஞர்கள் கூறுகின்றனர். தமிழக அரசும் அதை ஏற்று, நடைமுறைப்படுத்தியுள்ளது. ஆனால்… எது சரி? உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு இன்னும் சில வாரங்களில் நடைபெற உள்ள நிலையில், ஒவ்வொரு தமிழரும் இது குறித்துச் சிந்திக்க வேண்டும் என நான் நினைக்கிறேன். என்னுடைய கருத்தைப் பார்ப்பதற்கு முன், தமிழ்ப்புத்தாண்டு தை ஒன்றுதான் என்பதற்கு ஆதரவாக வெளியிடப்பட்டுள்ள சில கருத்துக்களைப் பார்ப்போம்.


 தமிழ் உலகில், தமிழ் ஆண்டு என்னும் பெயரில் வழக்கில் இருக்கின்ற, “பிரபவ” முதல் “அட்சய” வரை உள்ள 60 ஆண்டுகளின் பெயர்கள் தமிழ் இல்லை. அவை பற்சக்கர முறையில் இருப்பதால் 60 ஆண்டுகளுக்கு மேல் உள்ள காலத்தைக் கணக்கிடுவதற்கு உதவியாக இல்லை. அதற்கு வழங்கும் கதையானது, அறிவு, அறிவியல், தமிழ் மரபு, மாண்பு, பண்பு ஆகியவற்றுக்குப் பொருத்தமாக இல்லை.

 எனவே, தமிழ் அறிஞர்கள், சான்றோர்கள், புலவர்கள் 1921-ஆம் ஆண்டு, சென்னைப் பச்சையப்பன் கல்லூரியில், தமிழ்க்கடல் மறைமலை அடிகளார் தலைமையில் கூடி, இது குறித்து ஆராய்ந்தார்கள். பின்னர், திருவள்ளுவர் பெயரில் தொடர் ஆண்டு பின்பற்றுவது என்றும், அதையே தமிழ் ஆண்டு எனக்கொள்வது என்றும், திருவள்ளுவர் காலத்தை கி.மு. 31 எனக் கொள்வது என்றும், தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டின் தொடக்கம் என்றும் முடிவு செய்தார்கள்.

 திருவள்ளுவர் ஆண்டுக்கு முதல் மாதம் தை; இறுதி மாதம் மார்கழி. புத்தாண்டுத் தொடக்கம் தை முதல் நாள். ஆங்கில ஆண்டுடன் 31 கூட்டினால் வருவது திருவள்ளுவர் ஆண்டு ஆகும். உதாரணமாக, 2010 + 31 = 2041. எனவே, இந்த தை ஒன்று முதல் தொடங்கும் புத்தாண்டு, திருவள்ளுவர் ஆண்டு 2041 ஆகும். தமிழ்நாடு அரசு, இதை 1971 முதல் நடைமுறைப்படுத்தி வருகிறது.

 வாரத்தின் ஏழு நாட்களுக்கும் ஒவ்வொரு கிழமை என்று பெயரிட்டு அழைக்கிறோம். இந்த ஏழு கிழமைகளில் புதன், சனி தவிர மற்றவை தமிழ். அவற்றையும் தமிழ்ப் பெயரிட்டு வழங்குவோம். புதன் = அறிவன்; சனி = காரி.

என்னைப் பொறுத்த வரை, மேற்கூறியுள்ள விளக்கங்கள் கூட முழுமையானதாகப், பொருத்தமானதாக இல்லை. அப்படியே அவற்றை ஏற்றுக்கொண்டாலும் கூட, அவற்றை நடைமுறைப்படுத்துவதில் பல சிக்கல்கள் உள்ளன. ஒவ்வொரு தமிழனுக்கும் தமிழ்ப்பற்று அவசியம் என்பதில் இரண்டாவது கருத்து இல்லை. ஆனால், உண்மையிலேயே தமிழ்ப்பற்றின் காரணமாகத்தான் தமிழ்ப் புத்தாண்டு, தேதி மாற்றம் பெற்றுள்ளதா என்பது நாம் யோசிக்க வேண்டிய கேள்வி. பொதுவாக, அரசியல்வாதிகளுக்கு, நம்மை ஏமாற்றவும், திசை திருப்பவும், நம்முடைய உணர்ச்சிகளைத் தூண்டிவிட்டு அறிவை மழுங்கச் செய்யவும், ஓட்டுப் பெறவும் மட்டுமே இதுவரை தமிழ் மொழிப்பற்றும், இனப்பற்றும் பயன்பட்டு வருகிறது. அப்படிப்பட்ட நிலையில் தமிழ்ப் புத்தாண்டு எந்த நாளில் கொண்டாட வேண்டும் என்பதை ஒரு சர்ச்சைப் பொருளாக்கி இருப்பது, சந்தேகத்தையும், வருத்தத்தையுமே உண்டாக்குகிறது.

தமிழ்ப் புத்தாண்டு என்பது தமிழர்களின் ஒரு கொண்டாட்டம். அதை எந்த நாளில் கொண்டாட வேண்டும் என்பது அவர்களின் உரிமை. கொண்டாட்டங்களைப் பொறுத்த வரை, அவற்றின் உண்மை, பின்புலம் என்று ஆராய்வதை விட, மனிதர்களின் சுதந்திரத்திற்கே அதிக முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என நான் எண்ணுகிறேன். புத்தாண்டு என்பது ஒரு ஆண்டின் தொடக்கம் மட்டுமே ஆகும். அது தவிர அந்த நாளுக்கு வேறெந்த முக்கியத்துவமும் இல்லை என நான் கருதுகிறேன். தற்போது கொண்டாடப்படும் பல தினங்கள், வியாபார நோக்கில் உருவாக்கப்பட்டவை என்பது நாம் அனைவரும் அறிந்ததே. அது போலத், தமிழ்ப் புத்தாண்டையும் அரசியலும், அதிகாரமும் உருவாக்கிய அல்லது மாற்றிய ஒருநாளாக இருப்பதில் எனக்கு உடன்பாடில்லை. தமிழர்கள் எந்த நாளையும் புத்தாண்டாக முடிவு செய்யலாம். பொதுமக்கள் கருத்தறிய முயற்சித்து, அவர்களிடம் விளக்கி, அது குறித்து ஒரு பொதுக்கருத்து எட்டப்படலாம். ஆனால், அது மக்கள் கருத்தாக மாற்றப்பட வேண்டுமே தவிர, திணிக்கப்படல் ஆகாது. அப்படி ஒரு பொதுக்கருத்து எட்டப்படும் வரை, அவரவர் விருப்பப்படி, தை ஒன்றிலோ, சித்திரை ஒன்றிலோ புத்தாண்டைக் கொண்டாடிக் கொள்ளலாம் என்பது எனது தாழ்மையான ஆனால் உறுதியான கருத்தாகும்.

புதன், 24 மார்ச், 2010

மரணத்தை வென்றவன்




நீங்கள் எப்போதாவது மரணத்தை சந்தித்தித்து இருக்கிறீர்களா ? சரி விடுங்கள் வாழ்க்கையையாவது சந்தித்து இருக்கிறீர்களா ? என்ன கேள்வி இது? எல்லோரும் வாழ்ந்து கொண்டுதானே இருக்கிறோம் என்கிறீர்களா?

நான் இல்லை என்கிறேன். இருப்பது வேறு. வாழ்வது வேறு. வாழ்கையை வாழ்ந்து பார்க்கவும் கொஞ்சம் ஆழ்ந்து பார்க்கவும் தான் இந்த தளமும், இந்த கட்டுரையும்.

எல்லோரையும் போல் எனக்கும் ஒரு ரோல் மாடல் உண்டு. அவர் பெயர் ARMSTRONG. அவரைத்தான் எனக்கு தெரியுமே என்கிறீர்களா? ஆனால் நீங்கள் நினைப்பவர் - நிலவில் முதலில் கால் வைத்த Neil Armstrong. நான் சொல்வது Lance Armstrong. யார் அவர்?


யார் இந்த லான்ஸ் ஆர்ம்ஸ்ட்ராங்? அமெரிக்காவைச் சார்ந்த ஒரு சைக்கிள் பந்தய வீரர். நமக்குத் துன்பங்கள் வரும்போது எல்லாம், உலகத்திலேயே நாம்தான் அதிகம் கஷ்டப்படுவதாக நாம் எண்ணும்போதெல்லாம், இவரை ஒரு கணம் நினைத்தால் போதும். நம்பிக்கை ஊற்றெடுக்கும். வாழ்க்கையின் மீதான நம் பார்வை மாறும். புத்துணர்ச்சி பொங்கும். அப்படி என்ன செய்தார் இவர்...?

அமெரிக்காவின் டெக்ஸாஸ் நகரில் பிறந்த லான்ஸிற்கு, பிறந்தது முதலே பிரச்சனைகள் தொடங்கிவிட்டன. இரண்டு வயதில் அப்பாவும் அம்மாவும் பிரிந்துவிட, அம்மாவுடனும் வளர்ப்புத் தந்தையுடனும் வளர்ந்த லான்ஸிற்கு, அவருடைய மணவாழ்க்கையும் சேர்த்து, குடும்ப வாழ்க்கை இறுதி வரை இனிமையாக அமையவே இல்லை.

இளமைக் காலத்தில் டிரையத்லான் (சைக்கிள், ஓட்டம் மற்றும் நீச்சல் - மூன்றும் சேர்ந்த போட்டி) வீரராக பல சாதனைகள் படைத்துக்கொண்டிருந்த லான்ஸின் முழுக்கவனமும், பின்னர், சைக்கிள் பந்தயத்தின் மீது திரும்பியது. வெற்றிகளும், தோல்விகளும் நிறையப் பார்த்த போதும், ஆர்ம்ஸ்ட்ராங்கின் ஆசையெல்லாம், டூர் டி பிரான்ஸ் பந்தயத்தில் வென்றுவிட வேண்டும் என்பதாகவே இருந்தது.

முதலில் டூர் டி பிரான்ஸ் பந்தயத்தைப் பற்றி அறிந்து கொள்ள வேண்டியது அவசியம்! உலகின் மிகக் கடினமான பந்தயங்களுள் ஒன்று அது. ஆண்டுதோறும் ஜலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில், பிரான்ஸ் மற்றும் அதன் எல்லையோரங்களில், சுமார் 21 நாட்கள் நடைபெறும் அப்பந்தயத்தில் கடக்க வேண்டிய தூரம் சுமார் 3500 கிலோ மீட்டர்கள். பல்வேறு கட்டங்களாக நடைபெறும் அப்போட்டி, அழகிய நெடுஞ்சாலையில் நடைபெறுவதில்லை. சில கட்டங்கள் தொடர்ந்து புல்வெளியில், சில கட்டங்கள் தொடர்ந்து மேடு-பள்ளங்கள் நிறைந்த சாலையில், சில கட்டங்களோ மலைப்பகுதிகளில், என்று சைக்கிள் ஓட்டியாக வேண்டும். “உலகிலேயே அதிக உடல்திறன் தேவையான விளையாட்டுப் போட்டி” என்றும், போட்டியை முழுவதுமாக நிறைவுசெய்யத் தேவைப்படும் ஆற்றல் “மூன்று முறை எவரெஸ்ட் ஏறுவதற்கும், பல மராத்தான் ஓட்டப்பந்தயங்களுக்கும் இணையானது” என்றும் நியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கை குறிப்பிட்டுள்ளது. அவ்வளவு கடுமையான பந்தயத்தில் வெல்லத்தான் லட்சியம் கொண்டார் லான்ஸ் ஆர்ம்ஸ்ட்ராங்.

அப்பொழுதுதான் அந்த விபரீதம் நேர்ந்தது! சைக்கிள் பயிற்சியின் போது தவறி விழுந்தார் லான்ஸ்! மருத்துவமனையில் அனுமதித்த சில நாட்களிலேயே கோமா நிலையை அடைந்தார்! காரணம், ஆர்ம்ஸ்ட்ராங்கிற்கு......... கேன்சர்! ஆம்! கொடுமையான புற்றுநோய், அவரது வாழ்க்கையையே புரட்டிப்போட்டது. அமெரிக்க மருத்துவர்களாலேயே, இவர் சில நாட்களில் இறந்து விடுவார் என்று கணிக்கப்பட்டார்!

இந்த நிலையில் தான், ஒரு நாள், சில நிமிடங்கள் ஆர்ம்ஸ்ட்ராங்கிற்கு, நினைவு திரும்பியது. கோமா நிலையில் இருந்த எந்த ஒரு நோயாளியானாலும், நினைவு வந்தவுடன் தன் உறவினர்களைத்தான் தேடுவார் அல்லவா! ஆனால், நம் ஆர்ம்ஸ்ட்ராங்கோ, “டாக்டர்! என்னை எப்படியாவது காப்பாற்றுங்கள்! நான் இறப்பது குறித்துக் கவலை கொள்ளவில்லை. ஆனால், ஒரே ஒரு முறையேனும், டூர் டி பிரான்ஸ் சைக்கிள் பந்தயத்தில் வெற்றி பெற்ற பின்னர்தான் நான் இறக்க வேண்டும்” என்றார். என்ன மனிதர் இவர்! மனதிற்குள் எத்தனை லட்சிய வெறி! என்று வியந்த மருத்துவர்கள், அவரை எப்படியாவது காப்பாற்றி விட முனைந்தனர்.

ஆனால் அது அவ்வளவு சுலபமானதாக அமையவில்லை. முழு குணமடைவதற்குள் அவர் பட்ட வேதனைகள் ஏராளம்! கீமொதெரபி என்னும் மிகவும் கடுமையான சிகிச்சை பல முறை அவருக்கு அளிக்கப்பட்டது! மூளையில் கட்டி வேறு ஏற்பட்டு, அதற்கும் அறுவை சிகிச்சை நடைபெற்றது. இவை போதாதென்று, தீவிரமான சிகிச்சைகளின் பக்க விளைவாக, நுரையீரலில் அடைப்பு, சிறுநீரகம் பழுது, பக்கவாதம் மற்றும் ஹார்ட் அட்டாக் என்று ஒரு மனிதன் சந்திக்கவே கூடாத அத்தனை பிரச்சனைகளையும், மொத்தமாக சந்தித்தார் ஆர்ம்ஸ்ட்ராங்! இத்தனைக்கும் பிறகு, இறைவன் அருளால், ஆர்ம்ஸ்ட்ராங்கின் லட்சிய வெறியால், உயிர் பிழைத்தார்!

உயிர் பிழைத்தாலும் கூட, இவரால் சைக்கிள் பந்தயத்தில் இனி பங்கேற்கவே முடியாது என்றுதான் உலகம் நினைத்தது! நினைத்ததோடு மட்டுமில்லை, தேசிய அணியில் இடம் கொடுக்காமல், அவரது இதயத்தில் இடியை இறக்கியது! எண்ணிப் பாருங்கள், ஒரு புகழ்பெற்ற வீரருக்கு, எவ்வளவு பெரிய அவமானம் இது!

ஆனால், ஆர்ம்ஸ்ட்ராங் மனம் தளரவில்லை! கடுமையாகப் பயிற்சி செய்தார்! தொடர்ந்து உழைத்தார்! நீங்கள் நம்பித்தான் ஆக வேண்டும்! மிக நல்ல உடல்நிலையோடு இருக்கும் ஒருவரால், ஒருமுறை வெல்வதே கடினம் என்று நம்பப்படும் டூர் டி பிரான்ஸ் சைக்கிள் பந்தயத்தில், ஒரு முறை அல்ல, இருமுறை அல்ல, தொடர்ச்சியாக ஏழு முறை (1999 – 2005) வென்று உலக சாதனை படைத்தார்.

செப்டம்பர் 18, 1971-ல் பிறந்து, தற்போது 39-ஆவது வயதில், உலகின் நம்பிக்கை நட்சத்திரமாக வாழ்ந்து கொண்டிருக்கும் ஆர்ம்ஸ்ட்ராங், உலகெங்கும் கேன்சர் நோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்திக் கொண்டும், அதற்காக நிதி திரட்டிக் கொண்டும் சமுதாய சேவை செய்து வருகிறார் என்றால்.........................

எண்ணிப் பாருங்கள் அன்பர்களே!

“என்னடா! துன்பம் அதை எட்டி உதை, வாழ்ந்து பார்! எப்போதும் உன்னை நம்பி!
இடுகாடு போனபின் நடுவீடு அழைக்குமோ? ஏறி விளையாடு தம்பி!”

என்ற வரிகளுக்கேற்ப, நம்முடைய பிரச்சனைகளை எல்லாம் நம்பிக்கையுடன் எதிர்கொள்ளுங்கள்! வெற்றியும், மகிழ்ச்சியும் நிச்சயம்! அடுத்த கட்டுரையில் சந்திப்போம்! அதுவரை ஆர்ம்ஸ்ட்ராங் குறித்தே சிந்திப்போம்!
-- இக்கட்டுரை "நமது நம்பிக்கை" மார்ச் 2010 இதழில் வெளியாகி உள்ளது