சனி, 31 ஜூலை, 2010

நட்பு வாழ்க!


ஆகஸ்ட் முதல் ஞாயிற்றுக்கிழமை, உலகம் முழுவதும் பல நாடுகளில், நண்பர்கள் தினமாகக் கொண்டாடப்படுகிறது. 1935-ல், அமெரிக்காவில் தேசிய நட்பு தினமாகத் தொடங்கிய இந்த நல்ல நிகழ்வு, பிறகு பல நாடுகளுக்கும் பரவி, தற்போது சர்வதேச நட்பு தினமாக, நண்பர்கள் தினமாக சிறந்த முறையில் கொண்டாடப்படுகிறது.

1935-ல், ஆகஸ்டு முதல் சனிக்கிழமை அன்று, அமெரிக்காவில் ஒருவர் கொல்லப்பட்டதாகவும், மறுநாள் - ஞாயிற்றுக்கிழமை அன்று அவரது நண்பர் தற்கொலை செய்துகொண்டதாகவும், அதன் நினைவாகத்தான், அமெரிக்காவில் நட்பு தினம் கொண்டாடப்பட்டதாகவும், இன்று காலையில் எனக்கொரு குறுந்தகவல் வந்தது.

என்ன காரணத்திற்காகத் தோன்றினாலும், எவ்வளவுதான் எல்லோரும் அதை வணிகமயமாக்கி, நட்பைக் கொண்டாடும் நல்ல நோக்கத்தின் வலிமையைக் குறைத்தாலும், எனக்கென்னவோ, தேவையில்லாத பல தினங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்துக் கொண்டாடி வரும் நாம், இந்த நட்பு தினத்திற்கு தாராளமாக வரவேற்பு அளித்துக் கொண்டாட வேண்டும் என்றே தோன்றுகிறது.

எல்லோருடைய நெஞ்சிலும் நண்பர்கள் குறித்த நினைவுகள் ஏராளம் இருக்கும். எனக்கும் உண்டு. பசுமையான, சில நினைவுகளை மட்டும் உங்களோடு இங்கே பகிர்ந்து கொள்ளலாம் என்று நினைக்கிறேன். ஆனால் அதை எழுதிட எனக்கு கொஞ்சம் சுதந்திரமான மனநிலையும், நேரமும் தேவை. ஓரிரு நாட்களில் இந்தக் கட்டுரையைத் தொடர்கிறேன்.

வன்முறையையும், சாதி, மத, இன, மொழி, நிற, பொருளாதார, சமுதாய வேற்றுமைகளையும் அழித்துப், புதியதோர் உலகம் படைக்க, நிச்சயமாக நட்பு தினத்தை நன்றாகக் கொண்டாடுங்கள். நண்பர்களைத் தொடர்பு கொள்ளுங்கள். சந்தித்து உரையாடுங்கள். நல்ல நட்பையும், நண்பர்களையும் போற்றுவோம்! நட்பு வாழ்க!