சனி, 13 ஆகஸ்ட், 2011

வள்ளுவனும் வைரமுத்துவும்

ஒன்றே முக்கால் அடியில் உலகளந்த உத்தமனாகிய வான்புகழ் வள்ளுவன், தனது நூலாம் திருக்குறளில் வழங்கியுள்ள கருத்துகள் விலைமதிப்பு மிக்கன. நாடு, மொழி, இனம், காலம் அனைத்தும் கடந்த அவ்வுலகப் பொதுமறையை ஏற்றாதார், போற்றாதார் எவரும் இலர். அவ்வாறே, புதுக்கவிதையிலும், மரபுக்கவிதையிலும் வல்லவராகவும், திரைப்பாடல்களிலும் இலக்கிய நயத்தை இழையோடச் செய்துவரக் கூடியவருமாகிய வைரமுத்துவும், தன் கவிதைகளில், திருக்குறள் கருத்துகளைத் தன் கருத்துகளாக ஏற்றுப் பதிவு செய்துள்ளார்.

வைரமுத்துவின் கவிதைகளில் திருக்குறள் மற்றும் வள்ளுவன் ஆகிய சொற்களின் பயன்பாடு:

“வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு” என்று மகாகவி பாரதி போற்றியது போல், வைரமுத்துவும் வள்ளுவனை ஏற்றுகிறார். தனக்கு வேண்டிய மிகச் சிறந்த பொருட்களைக் கேட்பதாக அமைந்த, “அமர்க்களம்” திரைப்படத்தின் ஒரு பாடலில், இராசராசனின் வாள், கண்ணனின் புல்லாங்குழல், மதுரை மீனாட்சியின் கிளி போன்றவற்றைக் கேட்டவர், அதோடு,
“வள்ளுவன் எழுதிய கோலைக் கேட்டேன்”
என்கிறார். இதன் மூலம் வைரமுத்து வள்ளுவப் பரம்பரை சார்ந்த கவிஞன் தான் எனக் காட்டிக் கொள்வதில் பெருமை கொள்கிறார்.

தனது “துறக்க முடியாத துறவு” என்னும் கவிதையில், இளைஞர்கள் படிக்க வேண்டிய இலக்;கியங்களைக் குறிப்பிடும் போது, வள்ளுவனைப் படிக்க வற்புறுத்துகிறார். அதே தொகுப்பில் இடம்பெறும் “தீ அணையட்டும்” என்ற கவிதையில், சாதிச் சண்டைகளைச் சாடும் போது,
“முன்னே வள்ளுவன், பின்னே பாரதி
முழங்கினர் ஊருக்கு – அட
இன்னும் நீங்கள் திருந்தா விட்டால்
இலக்கியம் ஏதுக்கு?”
என்று “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” என்று வள்ளுவன் பறைசாற்றியதை, அவர் பெயரைக் குறிப்பிடுவதன் மூலம் நினைவூட்டுகிறார் கவிஞர். மேலும், பல திரைப்படப் பாடல்களில், காதலன்-காதலி ஆகியோரின் உறவு நிலையைக் காட்ட திருக்குறளை உதாரணமாகப் பயன்படுத்தியுள்ளார்.

இவை போல இயைபுக்கு மட்டுமல்ல் முரணுக்கும், முதலாவதாக வள்ளுவரையே அழைக்கிறார் வைரமுத்து.
“வாரும் வள்ளுவரே!
மக்கட் பண்பில்லாதவரை
என்ன சொன்னீர்?
மரம் என்றீர்!
மரம் என்றால் அவ்வளவு
மட்டமா?”
என்று “மரங்களைப் பாடுவேன்” என்ற கவிதையில், மரங்களின் மேன்மையைக் காட்ட, வள்ளுவரையே கேள்வி கேட்கிறார். இவ்வாறு, தனது கவிதைகளில் ஆங்காங்கே வள்ளுவர் மற்றும் திருக்குறள் ஆகிய சொற்களை வைரமுத்து பயன்படுத்தியுள்ளார்.

வைரமுத்துவின் கவிதைகளில், திருக்குறளில் வரும் சொற்களின் பயன்பாடு:

கவிஞர் வைரமுத்து, தனது பல கவிதைகளின் தலைப்புகளாகத், திருக்குறளில் பயின்று வரும் பல சொற்களைப் பயன்படுத்தியுள்ளார். இதற்கு உதாரணமாக, மெய்ப்பொருள், தவம் போன்ற கவிதைத் தலைப்புகளை எடுத்துக் காட்டலாம். தனது ஒரு கவிதை நூலுக்கு, வள்ளுவனின் சொற்களான, “பெய்யெனப் பெய்யும் மழை” என்பதைத் தலைப்பாக வைத்துள்ளார். அது மட்டுமல்ல. “விலங்கு” என்று தலைப்பிட்ட கவிதையில்,
“ஒவ்வொரு விலங்கும்
உன் ஆசான்!
கற்க
கற்றபின் நிற்க
அதற்குத் தக!”
என்று வள்ளுவரின் சொல்லாட்சியை அப்படியே பயன்படுத்துகிறார். தனது “பாடம்” என்ற கவிதையில், மரம் மனிதனுக்குக் கூறும் அறிவுரையாக,
“இன்னா செய்தார்க்கும் இனியவை செய்”
என்ற வள்ளுவன் வார்த்தைகளையே வார்த்தெடுக்கிறார் வைரமுத்து. தனது ஒரு திரைப்பாடலில்,
“கண்டுகேட்டு உண்டுயிர்த்து உற்றறியும் ஐம்புலனும்
ஒண்டொடி கண்ணே உள”
என்னும் குறளை அப்படியே வரியாக்கி,
“கண்டுகேட்டு உண்டுயிர்த்து உற்றறியும் ஐம்புலனும்
பெண்ணில் இருக்கு”
(படம்: நேருக்கு நேர்)
என்று வருமாறு எழுதியுள்ளார்.

மேலும், தனது “பால்வினையாளி” என்ற கவிதையில், ஒரு முழு திருக்குறளையும் சொல்லி, அதில் ஒரே ஒரு சொல்லை மட்டும் மாற்றித், தனது கருத்தை வெளிப்படுத்துகிறார் கவிஞர். அக்கவிதையில், ஒரு பரத்தை, தன் வாடிக்கையாளரிடம் கூறும் பதிலாகத்,
“தக்கார் தகவிலார் என்பது அவரவர்
உச்சத்தாற் காணப் படும்”
என்று, குறளில் வரும் “எச்சத்தால்” என்னும் சொல்லை மட்டும் மாற்றி, “உச்சத்தால்” என்றிட்டுப், புதுக்குறள் படைக்கிறார் வைரமுத்து.

இதுபோல, குறள் வார்த்தைகளில் மட்டுமல்ல் கருத்திலும் மாறுபாடு கொண்டுள்ளதையும், குறளில் வரும் வார்த்தைகளாலேயே கூறுகிறார். தனது “ஆதலால் மனிதா!” என்ற கவிதையில்,
“பிறவி என்பது பெருங்கடலன்று:
எண்ணிப் பார்த்தால் சின்ன வாய்க்கால்”
என்று, வள்ளுவரின் வாக்கான “பிறவிப் பெருங்கடல்” என்பதை வைரமுத்து மறுக்கிறார். இவ்வாறு ஏராளமான இடங்களில், குறள் வரிகளை, சொற்களை அப்படியே கையாண்டுள்ளார் கவிஞர் வைரமுத்து.

வைரமுத்துவின் கவிதைகளில், திருக்குறள் கருத்துகளின் பயன்பாடு:

கவிஞர் வைரமுத்து, தனது “மௌனத்தின் சப்தங்கள்” என்ற நூலில், தான் திருக்குறள் உட்பட பல இலக்கியக் கருத்துகளைப் பயன்படுத்தியுள்ளதாகக் கூறுகையில், கீழ்க்கண்டவாறு வாக்குமூலமளிக்கிறார்.
“திருக்குறளைப் படிக்க வாய்ப்பில்லாதவன் கூட, திரைப்படப் பாடல்களைக் கேட்க வாய்ப்பிருக்கிறது. அவனுக்குத் திருக்குறளை நேரடியாகக் கற்றுத் தருவதை விட, திரைப்படப் பாடல் மூலம் கற்றுக் கொடுப்பது எளிது” என்று விளக்குகிறார். அவரே, அவரது பாடல் ஒன்றை உதாரணமாகவும் தருகிறார்.
“வாளற்றுப் புற்கென்ற கண்ணும் அவர்சென்ற
நாளொற்றித் தேய்ந்த விரல்”
என்ற திருக்குறளின் கருத்தை, எளிய திரைப்படப் பாடலாக்கி,
“மாலை சூடும் தேதி எண்ணிப் பத்து விரலும் தேயும்”
(படம்: பாலைவனச் சோலை)
என்று தான் வழங்கியிருப்பதைக் காட்டுகிறார்.

இதுமட்டுமல்லாது,
“மண்தான் கடைசியில் ஜெயிக்கிறது”
(படம்: முத்து)
போன்ற பல திரைப்படப் பாடல் வரிகள் மூலம், வள்ளுவரின் கருத்துகளான நிலையாமை, கொல்லாமை, ஈகை, ஒழுக்கமுடைமை, அடக்கமுடைமை, பணிவுடைமை, ஊக்கமுடைமை, ஆள்வினை உடைமை உள்ளிட்ட பல்வேறு வாழ்க்கை நெறிகளையும், நம் நினைவில் நிற்கும் வகையில், எளிமையான, வசதியான வடிவில் வைரமுத்து வழங்கியுள்ளார்.

திரையிசைப் பாடல்களில் மட்டுமின்றித், தனது கவிதைகளிலும், திருக்குறள் கருத்துகளைப் பிரதிபலிக்கிறார். “பாரதி நினைக்கப்படுகிறான்” என்ற கவிதையில்,
“தம்போல்
பகுத்துண்டு வாழும்
பண்பிலாமையால்
காக்கையும்
குருவியும்
மனிதனை இப்போது
மறுதலிக்கின்றன”
என்று கூறி,
“பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர்
தொகுத்தவற்றுள் எல்லாம் தலை”
என்ற குறளின் கருத்தை வலியுறுத்துகிறார்.

தனது “கூடு” என்ற கவிதையில், தன் வீட்டை இடிக்கும் அதிகாரிகளிடம் அழுது புலம்பும் ஒரு ஏழைத்தாய், இறுதியில் அதைத் தடுக்க முடியாது என உணர்ந்து, தன் மகள் நட்டு வைத்த மல்லிக் கொடியையாவது காப்பாற்ற வேண்டி,
“ஆசையில வச்சகொடி
அசங்காம இருக்கட்டும்;
அவவச்ச மல்லிகைதான்
எவளுக்கோ பூக்கட்டும்”
என்று மன்றாடுகையில், “ஒப்புரவறிதல்” என்ற வள்ளுவனின் அதிகாரத்திற்குப், புதிய விளக்கவுரையை வைரமுத்து எழுதுகிறார்.

இவ்வாறு வைரமுத்து சொல்நிலையிலும், கவிதைக்குத் தலைப்பிடும் நிலையிலும், பகுதியாகவும், முழுமையாகவும் குறளடிகளைக் கையாளும் நிலையிலும், எடுத்தாண்டுள்ளார். சிற்சில இடங்களில், தேவைக்கேற்ப சொற்களை மாற்றியும், புதுக்குறள் புனைந்துள்ளார். இயைபு, முரண் ஆகிய இருநிலைகளிலும் வள்ளுவர் கருத்துகளைக் கையாண்டிருப்பது அவரின் திருக்குறள் பற்றிற்குக் காட்டாக விளங்குகிறது.

மொத்தத்தில், திருக்குறளை மீண்டும், மீண்டும் மக்களிடம் கொண்டு செல்லும் நோக்கில், வைரமுத்து, தன் படைப்புகளையும், திரையிசைப் பாடல்களையும் வடிவமைத்துள்ளார் என்பது உறுதியாகிறது.

செவ்வாய், 2 ஆகஸ்ட், 2011

இளைஞர்களின் கலங்கரை விளக்கம் - ஜேஸிஐ



அறிமுகம்:
“ஒளி படைத்த கண்ணினாய், உறுதி கொண்ட நெஞ்சினாய், தெளிவு பெற்ற மதியினாய், வெற்றி கொண்ட கையினாய்” என்றெல்லாம் மகாகவி பாரதியாரால் மட்டுமல்லாது, விவேகானந்தர் முதல் அப்துல் கலாம் வரை அனைத்துத் தலைவர்களாலும் போற்றப் பெறும், ஆற்றல் மிகுந்த இளைஞர்களை, நல்ல வழியில் செலுத்தி, “நல்ல எதிர்காலத்தை இளைஞர்களுக்கும், நல்ல தலைவர்களை எதிர்கால உலகிற்கும்” தருவதையே, தனது முக்கியப் பணியாகக் கொண்ட ஓர் உலகளாவிய பேரியக்கம்தான், ஜூனியர் சேம்பர் இன்டர்நேஷனல் (JCI) ஆகும். இளம் தலைவர்கள் மற்றும் தொழில் முனைவோரின் உலகளாவிய அமைப்பாக விளங்கும் இந்த ஜேஸி இயக்கம், 18 முதல் 40 வயதுக்குட்பட்ட இளைஞர்களை மட்டுமே பிரதான உறுப்பினர்களாகக் கொண்டு வெற்றி நடைபோட்டு வருகிறது.

தோற்றமும், வளர்ச்சியும்:
ஜேஸி இயக்கம், ஹென்றி கிசன்பியர் (Henry Giessenbier) என்பவரால், 1915-ஆம் ஆண்டு, அக்டோபர் 13-ஆம் நாள், அமெரிக்காவில் துவங்கப்பட்டது. முதலில் YMPCA (Young Men Progressive Civic Association) என்ற பெயருடன் துவங்கப்பட்ட இவ்வியக்கம், 1916-ல், ஜூனியர் சேம்பர் சிட்டிசன்ஸ் (Junior Chamber Citizens), சுருக்கமாக ஜேஸி என்று பெயர் மாற்றப்பட்டது. அதன் பிறகு, முழுப்பெயர் பலமுறை மாற்றப்பட்டாலும், ஜேஸி என்கிற சுருக்கப்பெயர் மாறவில்லை. மாற்ற முடியாத அளவிற்கு அது பிரபலமாகிவிட்டது. 1988 முதல் ஜூனியர் சேம்பர் இன்டர்நேஷனல் என்று அழைக்கப்பட்டு வரும் இவ்வமைப்பு, உலகெங்கும் சுமார் 125 நாடுகளில், சுமார் 10,000 கிளை இயக்கங்களில், சுமார் 5 லட்சம் உறுப்பினர்களுடன் சிறப்பாக இயங்கி வருகிறது.

நோக்கம்:
என்றும் நிலைத்திருக்கும் உலக சமாதானம் வேண்டும் என்ற கனவுடன், ஜேஸி இயக்கத்தைத் தொடங்கினார் ஹென்றி கிசன்பியர். எனவே, இவ்வியக்கம், இளைஞர்கள் தங்கள் தலைமைப் பண்புகள், சமூகப் பொறுப்புணர்வு, தொழில் முனைவு மற்றும் நட்புறவு போன்றவற்றில் தங்களை மேம்படுத்திக் கொள்ள வாய்ப்பளிப்பதன் மூலம், ஒரு நல்ல மாற்றத்தை உண்டாக்கி, உலக சமுதாய முன்னேற்றத்திற்கு உதவுவதையே நோக்கமாகக் (Mission) கொண்டுள்ளது. மேலும், இவ்வியக்கத்தின் கோட்பாடு கடவுள் நம்பிக்கை, மனித சகோதரத்துவம், பொருளாதார நீதி, சட்டங்களாலான அரசு, மனித ஆளுமை வளர்ச்சி மற்றும் மனித சேவை போன்ற முக்கிய அம்சங்களைக் கொண்டு விளங்குகிறது.

சிறப்பம்சங்கள்:
ஜேஸி இயக்கம், அதன் உறுப்பினர்களுக்கு பல்வேறு வாய்ப்புகளை வழங்குகிறது. குறிப்பாக, தனிமனித முன்னேற்றம், நிர்வாகத் திறமை, சமூக சேவை, தொழில் வளர்ச்சி மற்றும் சர்வதேச நல்லுறவு ஆகிய ஐந்து பகுதிகளில் அதிக வாய்ப்புகள் அளிக்கப்படுகின்றன. அதிலும் குறிப்பாக, தனிமனித முன்னேற்றத்திற்கு உதவும் வகையில், தலைமைப் பண்புகள், சிறந்த தகவல் பரிமாற்றம், இலக்கு நிர்ணயம், நேர நிர்வாகம், மகிழ்ச்சியான வாழ்க்கை, மேம்பட்ட மனித உறவுகள் போன்றவற்றில் தேர்ச்சி பெறப், பல்வேறு பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. தற்போது ளுழகவ ளுமடைடள என்று அழைக்கப்படும் இது போன்ற சிறப்புத் திறன்களில், பல்வேறு படிநிலைகளில், முறையான பயிற்சியளித்து, மண்டல, தேசிய மற்றும் சர்வதேச அளவில் சான்றிதழ்களை வழங்கும் ஒரே உலகளாவிய சமூக இயக்கம் ஜேஸி மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், ஜேஸி இயக்கம் பின்பற்றும் கூட்டம் நடத்தும் நெறிமுறைகள், உலகெங்கும் பல நாடுகளின் பாராளுமன்றங்களின் செயல்பாட்டிற்கும், பல சர்வதேச இயக்கங்களின் செயல்பாட்டிற்கும் உதவிகரமாக அமைந்துள்ளன என்றால் அது மிகையல்ல.


புகழ்மிக்கவர்கள்:
ஜேஸி இயக்கம் சாதாரண மனிதர்கள் பலரையும் திறன் படைத்தவர்களாகவும், புகழ்மிக்கவர்களாகவும் மாற்றுகிறது. மேலும் புகழ்பெற்ற பலரும் ஜேஸியின் உறுப்பினர்களாகவும், தலைவர்களாகவும், ஜேஸி இயக்கத்துடன் தொடர்புடையவர்களாகவும் விளங்குகின்றனர். முன்னாள் அமெரிக்க அதிபர்கள் லிண்டன் ஜான்சன், ரிச்சர்டு நிக்ஸன், ஜெரால்டு போர்டு, ஜான் கென்னடி, பில் கிளின்டன், ஆப்பிரிக்க யூனியனின் நிறுவனர் லாரென்ட் டானா பொலாகா, பிரான்ஸின் முன்னாள் அதிபர் ஜாக்கஸ் சிராக், டென்மார்க் நாட்டின் முன்னாள் பிரதமர் பால் ஷ்லடர், ஜப்பான் முன்னாள் பிரதமர் யஸ_ஹிரோ நகசோனே, ஜப்பானின் முன்னாள் பிரதமர் தாரோ அசோ போன்ற பல உலகத்தலைவர்களும், முன்னாள் மத்திய அமைச்சர் மாதவராவ் சிந்தியா, ராஜஸ்தானின் முன்னாள் முதல்வர் அசோக் கெலாட், கோவாவின் முன்னாள் முதல்வர் ரவி நாயக் போன்ற பல இந்தியத் தலைவர்களும், ஹீரோ ஹோண்டா நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் முன்ஜால், கோத்ரெஜ் நிறுவனத்தின் தலைவர் ஆதி கோத்ரெஜ், இதயம் நிறுவனங்களின் அதிபர் முத்து, சக்தி மசாலா நிறுவனங்களின் நிர்வாக இயக்குநர் சாந்தி துரைசாமி போன்ற தொழிலதிபர்களும், ஜேஸி இயக்கத்தில் பயிற்சி பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

நிர்வாகம்:
சர்வதேச அளவில், ஒரு தலைவரும், அவருடைய ஆட்சிமன்றக் குழுவும் ஜேஸி இயக்கத்தை நிர்வகிக்கின்றனர். (2011-ன் சர்வதேசத் தலைவர் -- ஜப்பானைச் சேர்ந்த ஹண்டாரோ கருடா). இந்தியாவில், 1949-ல், கல்கத்தாவில் தொடங்கப்பட்ட ஜேஸி இயக்கம், நாடெங்கும் பரவியுள்ளது. இந்திய அளவிலும், அதேபோல் ஒரு தலைவர் மற்றும் ஆட்சி மன்றக் குழுவினர் இருப்பர். (2011-ன் இந்திய தேசத் தலைவர் -- நம் தமிழ்நாட்டின், ஈரோட்டைச் சேர்ந்த பாலவேலாயுதம்). ஜேஸிஐ இந்தியா, நிர்வாக வசதிக்காக, மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. மண்டல அளவிலும் ஒரு தலைவரும், ஆட்சி மன்றக் குழுவினரும் இருப்பர். ஒவ்வொரு மண்டலத்திலும் ஏராளமான ஜேஸி சங்கங்கள் இருக்கும். இவை கிளை இயக்கங்கள் (LOM) என்று அழைக்கப்படுகின்றன. ஒவ்வொரு சங்கத்திலும், ஒரு தலைவர் மற்றும் ஆட்சி மன்றக் குழுவினர், சங்க செயல்பாடுகளைக் கவனிப்பர். ஒரே ஊரில் அல்லது பகுதியில், பல ஜேஸி சங்கங்கள் இருக்கலாம்.

மண்டலம் - மாநாடு:
இந்தியாவில் உள்ள 23 ஜேஸி மண்டலங்களில், கன்னியாகுமரி முதல் புதுக்கோட்டை வரை உள்ள சுமார் 10 மாவட்டங்கள், மண்டலம் 18-ல் (Zone - XVIII) அடங்கும். இதனுடைய 2011-ன் மண்டலத் தலைவராக எங்கள் புதுக்கோட்டையைச் சேர்ந்த நல்லதம்பி உள்ளார். இந்த மண்டலத்தில், தற்போது சுமார் 60 கிளை இயக்கங்களும், 2000-த்திற்கும் அதிகமான உறுப்பினர்களும் உள்ளனர். மண்டலத்தில் உள்ள அனைத்து ஜேஸிக்களும் சங்கமிக்கும் திருவிழாவாக, ஆண்டுதோறும் மண்டல மாநாடு ஒன்று நடத்தப்பெறும். இந்த ஆண்டு மண்டல மாநாட்டை, ஏற்கனவே நான்கு முறை சிறப்பாக மண்டல மாநாடுகளை நடத்தியுள்ள, கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலான பாரம்பரியம் மிக்க புதுக்கோட்டை சென்ட்ரல் ஜேஸி இயக்கம், பொறுப்பேற்று நடத்த உள்ளது. சிறப்பு விருந்தினர்களின் உரைகள், அடுத்த ஆண்டின் மண்டலத் தலைவருக்கான தேர்தல், வண்ணமயமான கலைநிகழ்ச்சிகள், விருதுகள் வழங்கும் விழா, அறுசுவை உணவு, கனிவான உபசரிப்பு என்று களைகட்ட இருக்கும், இந்த ஆண்டின் மண்டல மாநாடு குறித்த விபரங்கள் கீழ் வருமாறு:
நாள்: அக்டோபர் 8 மற்றும் 9 ஆகிய இரு நாட்கள் (8,9-10-11)
இடம்: கிரீன்பேலஸ் A/c Hall, புதிய பேருந்து நிலையம் எதிரில், புதுக்கோட்டை.
மாநாட்டிற்குப் பதிவு செய்ய மற்றும் மாநாடு தொடர்பான அனைத்து விவரங்களுக்கும், தொடர்பு கொள்க: Jc. R.M. லெட்சுமணன், மாநாட்டு இயக்குநர் - 98429 12223

சனி, 16 ஏப்ரல், 2011

மாற்றத்தின் ஊற்று!

இன்றைய சூழலில் நாம் எல்லோருமே மாற்றத்தைப் பற்றித்தான் அதிகம் சிந்தித்தும், பேசியும், எழுதிக் கொண்டும் இருக்கிறோம். இந்த உலகில் மாறாத ஒன்றே ஒன்று மாற்றம் மட்டுமே என்று நாம் அனைவரும் அறிவோம். அப்துல் கலாம் முதல் அமெரிக்க அதிபர் ஒபாமா வரை எல்லோரும் மாற்றத்தின் அவசியத்தை, மாற்றமே ஏற்றம் தரும் என்ற நம்பிக்கையை உலகெங்கும் பரப்பி வருகிறார்கள். அதில், கடந்த சில நாட்களில் நிகழ்ந்த இரு முக்கிய நிகழ்வுகள், மாற்றத்தின் ஊற்றாய்த் தொடங்கியுள்ளன. அவை வெள்ளமாகிப் பெருகிப் பரவப், பல ஆண்டுகள் ஆகும் என்ற போதிலும், எதையும் செய்யாமல் இருப்பதை விட, செயல்படத் தொடங்குவது சிறந்தது என்பதால், அந்த நிகழ்வுகள் என்னை அதிகம் சிந்திக்க வைத்தன.

ஒன்று, தேர்தலில் வாக்களிக்க, இளைஞர்கள் காட்டிய ஆர்வம். மற்றொன்று, அன்னா ஹசாரோயின் உண்ணாவிரதம். இரண்டு நிகழ்வுகளையும், உற்று நோக்குவோம்! சிந்தையில் அவற்றை, சற்று தேக்குவோம்!

தமிழக வரலாற்றில் அதிகமான வாக்குப் பதிவு! “தேன் வந்து பாயுது காதினிலே” என்கிற அளவுக்கு மகிழ்ச்சியான செய்தி. அதிலும், இந்தத் தேர்தலில், இளைஞர்கள் வாக்களிக்க முனைந்து ஆர்வம் காட்டியது, கூடுதல் மகிழ்ச்சி. இன்றைய (16-4-11) தினமணி நாளிதழின் தலையங்கத்தில் கூறியுள்ளது போல, இளைஞர்கள் அனைவரும் மாறிவிட்டார்கள் என்றோ, மாற்றத்தை விரும்புகிறார்கள் என்றோ, அரசியல் மாற்றத்திற்கான மாதிரிகள் ஆகிவிட்டார்கள் என்றோ நாம் உறுதியாகச் சொல்ல முடியாது என்றாலும், குறைந்தபட்ச ஜனநாயகக் கடமையை ஆற்ற வேண்டும் என்னும் ஆர்வமே, நிச்சயமாக வரவேற்கத் தகுந்த மாற்றம்தான்.

ஆனால், மாற்றம் முழுமையடைய, நாடு ஏற்றம் பெற, இளைஞர்கள் தங்கள் சக்தியை உணர வேண்டும். அதை, சரியான திசைகளில் திருப்ப வேண்டும். அறிவு வளர்ச்சி, கொஞ்சம் பொது நலம் நோக்கியும் மாற வேண்டும். இளைஞர்கள் வாக்களித்தது மட்டுமே போதுமானது அல்ல. அவர்கள் யாருக்கு வாக்களித்தார்கள், எந்த அடிப்படையில் அல்லது எதை முன்னிலைப்படுத்தி வாக்களித்தார்கள், அவர்களின் வாக்கை முடிவு செய்வதில் எது (ஊடகங்கள் போன்றவை) அல்லது யார் அதிகமான தாக்கத்தை ஏற்படுத்தியது என்பது போன்ற பல கோணங்களும் நம் கவனத்திற்கு உரியது. உண்மையில், இவைதான், ஒரு நல்ல மாற்றத்திற்கான வழியினைத் தரும். சுய சிந்தனை உடையவர்களாகவும், யாராலும் அல்லது எதனாலும் வழிநடத்தப் பெறாதவர்களாகவும், சாதி, மதம், இனம், பணம், பதவி, புகழ், அதிகாரம் போன்ற எந்தக் குறுகிய சிந்தனையும் இல்லாதவர்களாகவும் இருந்தால்தான், வருங்காலத்திலாவது ஒரு நல்ல மாற்றம் வரும். அதுவே, நமக்கெல்லாம் இன்பம் தரும்.

அடுத்தது, அன்னா ஹசாரே! தனிமனிதர் ஒருவரின் உண்ணாவிரதம், தேசத்தையே எழுச்சி கொள்ளச் செய்தது என்பது, என் வாழ்வில், நான் நேரடியாகப் பார்த்த முதல் அனுபவம். கோவையில் நடைபெற்ற மாபெரும் ஊர்வலம், “மிஸ்டு கால்” பங்களிப்புகள், எங்கெங்கு காணினும் மக்களிடையே விவாதப்பொருளாக மாறிய ஆச்சரியம் என, அரசியல் பலமும், பண பலமும் இல்லாமல், தானாகவே ஒரு நல்ல செய்தி, ஊழலுக்கு எதிரான எண்ணம், பொது மக்களிடையே இவ்வளவு தாக்கத்தை ஏற்படுத்தியது, நல்லதோர் மாற்றத்தின் ஊற்றாகவே எனக்குத் தெரிந்தது.

அன்னாவின் கோரிக்கையை அரசு ஏற்றது குறித்த செய்தியைப் படித்துக் கொண்டே என் நண்பர் என்னிடம் கேட்டார், “ஒரு தனிமனிதன் நினைத்தால் எதையும் சாதிக்க முடியும் என்பதை இது நிரூபித்து விட்டது அல்லவா?” என்று. நான் புன்னகையுடன் சிந்தித்தேன். பல்லாண்டு காலமாக, தனிமனித மாற்றமே சமூக மாற்றம் என்றும், தனிமனித முன்னேற்றமே, தேச முன்னேற்றம் என்றும், தீவிரமாக நம்பிக்கொண்டும், பிரச்சாரம் செய்து கொண்டும் இருக்கும் என்னை, அன்னாவின் வெற்றி யோசிக்க வைத்தது. உண்மையிலேயே, இது வெற்றி என்றோ, தனிமனிதனின் வெற்றி என்றோ, நான் கருதவில்லை. பிரபலங்களின் ஆதரவு, ஊடகங்களின் ஒத்துழைப்பு போன்ற பலவும் இந்தக் காரியத்தைச் சாத்தியமாக்கி உள்ளன. மேலும், எல்லோரும் அறிந்துள்ளபடி, இது முழுமையான வெற்றி அல்ல. ஒரு நல்ல தொடக்கம்.

ஏனென்றால், ஒரு தனிமனிதரின், உண்மையான, பொதுநலம் சார்ந்த, அமைதிவழிப் போராட்டம், இந்த நாட்டை மாற்றிவிட முடியுமா என்றால், சந்தேகம்தான். அப்படியிருந்தால், சில நாட்கள் போராட்டத்திலேயே அன்னா அரசாங்கத்தை வழிக்குக் கொண்டு வர முடியும் போது, கடந்த 10 ஆண்டுகளாக, இராணுவப் படைச்சட்டத்தைத் திரும்பப் பெறச் சொல்லி உண்ணாவிரதம் இருக்கும் சர்மிளா சானுவின் போராட்டம் இன்னும் ஏன் வெற்றி பெறவில்லை? – யோசி!

என்னைப் பொறுத்தவரை, இந்த இரண்டு நிகழ்வுகளுமே, ஊடகங்களால் பெரிதாக்கிக் காண்பிக்கப்படும் பிம்பங்கள்தான்! அதில் மகிழ்ச்சிக்குரிய செய்தி என்னவென்றால், எப்போதுமே, தவறான, தேவையற்ற, எதிர்மறை நிகழ்வுகளையே மிகைப்படுத்தித், தங்கள் வருவாயைப் பெருக்கிக் கொள்ளும் ஊடகங்கள், நேர்மறையான, நம்பிக்கை ஊட்டக் கூடிய நிகழ்வுகளுக்கு, முக்கியத்துவம் அளித்துள்ளதுதான்!

இந்த இரு நிகழ்வுகளையும், மாற்றத்தின் ஊற்றுகளாகவும், நம்பிக்கை ஒளியின் கீற்றுகளாகவுமே நானும் காண்கிறேன். ஆனால், இதில் அதிகமாகப் பூரித்து, தேங்கி விடக் கூடாது என்பதே எனது வேண்டுகோள். நிலாவைப் பார்த்துவிட்டதால் மட்டுமே, நாம் நிலவுக்குப் போய்விட்டதாக எண்ணிவிடக் கூடாது. அதற்குத், தொடர்ச்சியான முயற்சி தேவை. அற்ப சந்தோ~ங்கள், நமக்கு, சில நாட்கள் மகிழ்ச்சி தரலாம். ஆனால், முழுமையான மன நிறைவடைய, நல்வாழ்வு பெற, நாம் இந்த நிகழ்வுகளையும் தாண்டி, தொடர்ந்து உழைக்க வேண்டும்.

லண்டனில் உள்ள வெஸ்ட் மின்ஸ்டர் சர்ச்சில் உள்ள புகழ்பெற்றவர்களின் கல்லறைகளில் ஒன்றில், இருப்பதாக அறியப்படும் வாசகம்.

“நான் சிறுவனாக இருக்கும்போது, இந்த உலகத்தையே மாற்ற வேண்டும் என்று விரும்பினேன். வளர்ந்து பெரியவனான பின்தான், எனக்குத் தெரிந்தது, இந்த உலகத்தை என்னால் மாற்ற முடியாது என்று. என்னுடைய நாட்டையாவது மாற்றிவிட வேண்டும் என்று நினைத்தேன். அதற்காகப் பலவாறும் முயற்சித்தேன். எனக்குத் திருமணம் ஆகிக், குழந்தைகளும் பிறந்துவிட்டார்கள். பல ஆண்டுகளுக்குப் பின்தான் எனக்குத் தெரிந்தது, என்னால் இந்த நாட்டை மாற்ற முடியாது என்று. என் குடும்பத்தையாவது மாற்றிவிட வேண்டும் என்று முடிவு செய்தேன். அவர்களுக்குப் பலவாறும் உபதேசித்தேன். என் குழந்தைகள், பெரியவர்களான பின்தான் எனக்குத் தெரிந்தது, என்னால் என் குடும்பத்தையும் மாற்ற முடியாது என்று. நான் இறக்கும் தருவாயில்தான் எனக்குப் புரிந்தது, என்னால் யாரையுமே மாற்ற முடியாது. ஏனென்று சொன்னால், கடைசிவரை நான் மட்டும் மாறவே இல்லை. நான் மாறியிருந்தால், என்னை உதாரணமாகக் காட்டி, என் குடும்பத்தையும், என் குடும்பத்தை உதாரணமாக வைத்து நாட்டையும், யார் கண்டது, ஒரு வேளை இந்த உலகத்தையே கூட நான் மாற்றியிருக்கக் கூடும்!”

இந்த வாசகம் போல்தான், உலகம் மாற வேண்டுமானால், மாற்றம் நம்மிடமிருந்தே தொடங்க வேண்டும். நாம் மாறாமல், யாரையும் மாற்ற முடியாது. எல்லோரும் உள்ள அளவில் மாறாத வரை எதுவுமே மாறாது. தலைவர்களையும், வழிநடத்துபவர்களையும், பெருந்திரள் கூட்டங்களையும், ஊடகங்களால் மிகைப்படுத்தப்படும் நிகழ்வுகளையும் தேடுவதை விட்டுவிட்டு, தனிமனிதன் ஒவ்வொருவரும் மாற வேண்டும். இந்த நிலையிலும், பணம் தரும் கட்சிக்காரனும், பணம் பெறும் வாக்காளனும் நம்மிடையில் இருப்பதை, நாம் ஏற்றுக் கொண்டாக வேண்டும்! ஒவ்வொருவரும் அவரவர்களை, நாட்டு நலன் நோக்கி, மனதை மாற்றிக் கொண்டாக வேண்டும்!

ஒரு நாள் நிச்சயம் விடியும்! அது நம்மால் மட்டுமே முடியும்! அந்த நம்பிக்கையோடு... அடுத்த கட்டுரையில் சந்திக்கிறேன்...

வியாழன், 31 மார்ச், 2011

தேர்தலும் தேர்வும்

ஆண்டுதோறும், மார்ச், ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் சூரியனின் காய்ச்சல் சற்று அதிகமாகவே இருக்கும். வெயிலின் கொடுமையால், சும்மா இருக்கும்பொழுதே, நம் உடலிலும் காய்ச்சல் வந்தது போலிருக்கும். இந்த லட்சணத்தில், இந்த ஆண்டு, ஒரே நேரத்தில் மூன்று காய்ச்சல்கள் நம்மை ஆட்டுவிக்கிறது. பாடாய்ப் படுத்துகிறது. உலகக் கோப்பை கிரிக்கெட் காய்ச்சல், தேர்தல் காய்ச்சல் மற்றும் தேர்;வுகளால் வரும் காய்ச்சல் ஆகியனதான் அந்த மூன்றும்! இந்தக் கட்டுரையில், தமிழகம் முழுவதும் அனேகம் பேருக்குப் பொருந்தும், நம் வாழ்க்கையில் மாற்றங்களை ஏற்படுத்தும் தேர்தல் மற்றும் தேர்வுகள் குறித்து சிந்திப்போம்!

பெயரின் எழுத்துகளிலும், ஒலியிலும் மட்டுமல்லாது தேர்தலுக்கும் தேர்வுக்கும்தான் எத்தனை ஒற்றுமைகள்! தேர்தலில் நிச்சயமாகத் தேர்வு உண்டு! போட்டியிடுபவர்களில் ஒருவரை, வாக்காளர்கள் தேர்வு செய்கின்றனர். விண்ணப்பிக்கின்ற பலரில் ஒருவரைக், கட்சி தேர்வு செய்கின்றது. சில கட்சிகளில், விண்ணப்பித்தவர்களுக்கு எழுத்து மற்றும் நேர்முகத் தேர்வும் நடைபெறுகிறது. பல நேரங்களில் வேட்பாளர்கள் பலருக்கு, அந்தத் தேர்தலே, வாழ்க்கையின் மிகப்பெரிய தேர்வாகி விடுகிறது. தேர்விலும் நிச்சயம் தேர்தல் இருக்கத்தான் செய்கிறது. எல்லாத் தேர்விலும், மாணவர்கள் குறிப்பிட்ட வினாக்களைத் தேர்ந்துதான் விடையளிக்கிறார்கள். அதில் தேர்ந்தால்தான் அவர்களால் அடுத்த கட்டத்திற்கு முன்னேற முடியும் என்பது நம் கல்வித் திட்டம்.

தேர்தல், தேர்வு என்னும் வார்த்தைகளின் பொருள்களை வைத்து மட்டும் சொல்லவில்லை. உண்மையிலேயே எண்ணிப் பாருங்கள் - இரண்டும் எவ்வளவு பொருத்தமானவை என்று!

தேர்தல், மற்றும் தேர்வுகள் இரண்டினாலுமே, நம் அன்றாட அலுவல்கள் பாதிக்கப்படுகிறது. இரண்டையுமே குறித்து நாம் அனைவரும் அதிகம் விவாதிக்கிறோம். தேர்வு எழுதுபவர்களோ, தேர்தலில் நிற்பவர்களோ நம் வீட்டில் இல்லை என்ற போதும், அவை குறித்து அதிகம் சிந்திக்கிறோம். விவாதிக்கிறோம். ஊடகங்கள் அவை குறித்து வெளியிடும் அத்தனையையும் கவனிக்கிறோம். இல்லையா..?

தேர்வு எழுதும் மாணவர்களுக்கு, குறிப்பாக பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு, அந்தத் தேர்வு, அவர்களின் எதிர்கால வாழ்க்கையைத் தீர்மானிப்பதில் பெரும் பங்காற்றுகின்றது. அதேபோல்தான், பல தேர்தல்கள், அந்தத் தேர்தலில் நிற்கும் வேட்பாளர்களின் வருங்காலத்தைத் தீர்மானிப்பதில் பெரும்பங்காற்றுகின்றன.

தேர்வு எழுதும் மாணவர்கள் மட்டுமல்லாது, அவர்களது பெற்றோர்கள், உறவினர்கள், நண்பர்கள், ஆசிரியர்கள் எனப் பல தரப்பினரும் அதிகமான மன அழுத்தமும், கவலையும் அடைகிறார்கள். தேர்தலில் நிற்கும் வேட்பாளர்கள் மட்டுமல்லாது, அவரது கட்சியினர், அதிகாரிகள், தேர்தல் ஆணையம், காவல்துறை எனப் பல தரப்பினரும் அதிகமான மன அழுத்தமும், கவலையும் அடைகிறார்கள். மேலும் இவர்கள் அனைவருக்கும் வேலைப் பளுவும் அதிகமாகிறது.

தேர்வுகளின் போது, படிக்கின்ற ஒவ்வொரு மாணவனின் இன்றியமையாக் கடமையான தேர்வுகளை, எழுதாமல் இருப்பதற்கு அல்லது ஒழுங்கான முறையில் எழுதாததற்கு, மாணவர்கள் எண்ணற்ற காரணங்களை அடுக்குகிறார்கள். தேர்தலிலும் கூட, ஒவ்வொரு குடிமகனின் இன்றியமையாக் கடமையான வாக்களிப்பதை, செய்யாமல் இருப்பதற்கு அல்லது வாக்களிக்காமல் இருந்ததற்கு, நாம் ஒவ்வொருவரும் ஏராளமான காரணங்களை வைத்திருக்கிறோம்.

தேர்தலின் போது, பணம் கொடுத்து ஓட்டுகள் பெறப்படுவதாகப் பல்வேறு குற்றச்சாட்டுகள் எழும். தற்போதெல்லாம், தேர்வுகளிலும் கூடப், பணம் கொடுத்து மதிப்பெண்கள் பெறும் முயற்சிகள் பல இடங்களிலும் நடக்கிறது. தேர்தலில் லஞ்சம், வன்முறை போன்ற பல தவறான செய்கைகள் தொடர்ந்து நடைபெற்ற வண்ணம் இருக்கின்றன. தேர்வுகளிலும், காப்பியடித்தல், பிட் அடித்தல் போன்ற பல தவறான செய்கைகள் தொடர்ந்து நடைபெற்ற வண்ணம் உள்ளன. தேர்தல், தேர்வு இரண்டிலுமே, தவறான செய்கைகளைத் தடுப்பதற்காக, சிறப்புப் படைகள் அமைக்கப்படுகின்றன. ஆனால், இரண்டிலுமே, முழுமையாகத் தவறுகளைக் களைய முடியவில்லை.

இப்படியே, எண்ணிக் கொண்டு போனால், தேர்தல், தேர்வு என இரண்டிற்கும் இடையே எண்ணிலடங்கா ஒற்றுமைகள் உள்ளன. ஆனால்... ஒரு முக்கியமான வேற்றுமை உண்டு. தேர்வின் முடிவுகள், மற்ற எல்லாரையும் விட, எழுதியவர்களைத்தான் அதிகம் பாதிக்கும். ஆனால் தேர்தல் முடிவுகள், தேர்தலில் போட்டியிட்டவரை விட, பொதுமக்கள் அனைவரையும் அதிகமாகப் பாதிக்கும்.


தேர்வு என்பது தனிப்பட்ட ஒருவரின் வாழ்வை மட்டுமே பாதிக்கக் கூடியது. அதுவும் ஓரளவிற்குத்தான். தேர்வில் ஒருவர் தேரவில்லையென்றாலும், அவரால் வாழ்வில் நிச்சயமாக சாதிக்கமுடியும். ஆனால், தேர்தல் அப்படியல்ல. அதன் முடிவுகள் ஒட்டுமொத்த சமூகத்தையும் பாதிக்கக் கூடியது. ஓட்டுப்போட்டவர், ஓட்டுப்போடாதவர், கட்சி சார்ந்தவர், நடுநிலையாளர், பணக்காரன், ஏழை, படித்தவர், படிக்காதவர், இளைஞர், முதியவர், ஆண், பெண் என்ற எந்தவிதமான பேதமும் இன்றி எல்லாரையும் பாதிக்கக்கூடியது.

எனவே, வருகின்ற ஏப்ரல் 13-ஆம் நாள், தமிழக சட்டமன்றத் தேர்தலில், நம் தேர்வு சரியானதாக அமைய வேண்டும். அந்தத் தேர்வே, நமது ஐந்தாண்டு கால வாழ்வைத் தீர்மானிக்க உள்ளது என்பதை நாம் கருத்தில் கொள்ள வேண்டும். தேர்தலில், எனது முக்கியமான வேண்டுகோள்கள் மூன்று.

முதலாவது, எந்தக் காரணம் சொல்லியும், ஓட்டளிக்காமல் இருந்து விடாதீர்கள். எல்லாக் காரணங்களும், நம் கடமையைச் சரியாகச் செய்யாமல் இருப்பதற்கான சாக்குப்போக்குகள்தான். நம் கடமையைச் சரியாகச் செய்யாத நாம், மற்றவர்கள் (அரசியல்வாதிகள், அதிகாரிகள், ...) அவர்கள் கடமையைச் சரியாகச் செய்யவில்லை என்று சொல்வதற்கான தகுதியவற்றவர்கள் என்பதை உணருங்கள். நம் ஒருவரின் வாக்கு, நம் தொகுதியின்... அவ்வளவு ஏன்... ஒருவேளை நம் மாநிலத்தின் தலையெழுத்தையே தீர்மானிக்க வல்லது என உணருங்கள்.

இரண்டாவது, வாக்கு என்பது நம்முடையது. நம் விருப்பப்படிதான் அவை அளிக்கப்பட வேண்டும். உணவகத்தில், நிறையப்பேர் சாப்பிடுகிறார்கள் என்பதற்காக, நாமும் அதையே சாப்பிடுவது சரியல்ல. நாம் விரும்பும் உணவையே உண்ண வேண்டும். அதுதான், நமது விருப்பம். மற்றவர்கள் அனைவரும் ஆலோசனை சொல்லலாம். ஆனால் முடிவு நம்முடையதாக இருக்க வேண்டும். வாக்களிக்கும்போது ஜாதி, இனம், மதம், கட்சி போன்ற நம் சொந்த லாபங்களுக்கு இடமளிக்காதீர்கள். ஏனெனில், நம் ஒருவரின் வாக்கு, அனைவரின் வாழ்வையும் பாதிக்கும் என்ற சமூகக் கடமையுணர்வோடு வாக்களியுங்கள். குறிப்பாக பணம், பொருள் அல்லது இலவசம் பெற்றுக்கொண்டு வாக்களிக்காதீர்கள். நம் வாக்குகளை எதற்காகவும், யாருக்காகவும் விற்றுவிடாதீர்கள். எனவே, உற்றார், உறவினர், அக்கம்பக்கத்தினர், கட்சிகளைச் சார்ந்தவர்கள், இவர்களை எல்லாம் விட முக்கியமாக, ஊடகங்கள் என எவர் சொல்வதைக் கொண்டும், முடிவெடுக்காதீர்கள். நம் எல்லோருக்கும் ஆறு அறிவு உள்ளது. நாட்டுக்கு, நம் தொகுதிக்கு நல்லது எது என சொந்தமாக யோசித்து, ஆராய்ந்து வாக்களியுங்கள். உங்கள் வாக்கு ரகசியமானதாக மட்டுமல்ல, உங்களுடையதாக இருக்கட்டும்.

மூன்றாவது, நல்ல வேட்பாளரைத் தேர்ந்தெடுங்கள். நமக்குப் பிடித்த அல்லது நாம் ஆட்சிக்கு வர வேண்டும் என்று எண்ணும் கட்சிக்கு அல்ல. எனவே, ஜெயிக்கிற கட்சிக்கு ஓட்டுப்போடுவேன் என்று, தன் மடமையைத், தம்பட்டம் அடித்துக்கொள்ளாதீர்கள். அப்படிச் சொல்வதற்கு நாம் ஒன்றும் பச்சோந்திகளோ, அரசியல்வாதிகளோ இல்லை. வேட்பாளர்தான், நமக்காகப் பாடுபடப் போகிறவர். அவர் எந்தக் கட்சியாக இருந்தாலும், நல்லவர் நிச்சயம் நமக்கும் நல்லது செய்வார். ஆனால், எந்தக் கட்சியும், நமக்கு, நம் தொகுதிக்கு ஒன்றும் செய்யாது. தேர்வு செய்யப் பெற்றவர்கள் வேறு, வேறு கட்சிகளாக இருந்தால், அவர்கள் ஒன்றிணைந்து ஆட்சி அமைக்கட்டுமே! நமக்கென்ன! தேர்தலுக்குப் பின் கூட்டணி என்பது இதுவரை நடைபெறாததா என்ன?

இந்த மூன்று வேண்டுகோள்களையும் சிந்தித்து, ஏற்று, நல்ல வேட்பாளர்களை நாம் தேர்ந்தெடுத்தால், இந்தத் தேர்தலில் நாமும் தேர்வோம்! நாடும் தேறும்!

வெள்ளி, 7 ஜனவரி, 2011

போதை தெளிவோம்!

“சார், நான் ஒயின் சாப்பிடவா..?” தொலைபேசியில், என்னிடம் அனுமதி கேட்ட, ஒரு +2 மாணவனை, நான் அதிர்ச்சியுடன் பார்த்தேன். எனது பயிலரங்கில் ஏற்கனவே பங்கு பெற்றிருந்தான் அவன். தமிழகத்தின் ஒரு மாநகரத்தில், அவன் படித்து வரும் தனியார் பள்ளியில், ஃபேர்வெல் பார்ட்டியை, ஒரு நட்சத்திர ஓட்டலில், மாணவர்கள், தாங்களே செலவு செய்து, ஏற்பாடு செய்திருந்தார்கள். (என்ன ஒரு வளர்;ச்சி..!!!!!!!!!!!!!!!!!!!!!!) அதில் சில மாணவர்கள் ஒயின் அருந்துவார்களாம். நான் மட்டும் அப்போது பார்த்துக்கொண்டு இருக்க முடியுமா? என்பதுதான் அவனது கேள்வி. நியாயம்தானே! நண்பர்களோடு இருக்கும்போது, அதுவும் ஸ்டார் ஹோட்டலில், அவர்களுக்கு சமமாக இருக்க வேண்டாமா? ரோம் நாட்டில் இருக்கும்போது, ரோமானியனாக இரு என்று நாம்தானே, அவர்களுக்குப் பாடம் சொல்லியிருக்கிறோம்.

நான் வழக்கம்போல், அதன் தீமைகளை எடுத்துரைத்து, ஒயின் அருந்த வேண்டாம் என்று அறிவுறுத்தினேன். உடனே, அவன் கேட்டான் “நான் எந்தப் பிரச்சனையை அல்லது சந்தேகத்தை உங்களிடம் கேட்டாலும், எனக்கு விளக்கமளித்துப் பின் முடிவை என்னையேதானே எடுக்கச் சொல்வீர்கள்! இந்தக் கேள்விக்கு மட்டும் நீங்களே ஏன் முடிவை சொல்லி விட்டீர்கள்?” என்று. நான் உண்மையிலேயே அசந்து போனேன். என் மாணவனின் அறிவுத்திறத்தைப் பார்த்து மட்டுமல்ல, அவன் என்னை எவ்வளவு புரிந்து வைத்துள்ளான் என்றும்தான். அவனுக்கு நான் சொன்ன பதிலுரையின் சாரம்தான், இக்கட்டுரையின் சாரமும்.

புத்தாண்டு முடிந்து ஒரு வாரம் ஆகிவிட்டது. ஆனாலும், இன்னும் அந்தச் செய்திகள் என் மனதிலிருந்து மறையவில்லை. புத்தாண்டு தினத்தன்று மட்டும், எத்தனை விபத்துகள், எத்தனை வன்முறைகள், எத்தனை உயிரிழப்புகள், எத்தனை பிரச்சனைகள்...! புதிய நம்பிக்கையோடும், புத்துணர்ச்சியோடும் பிறக்க வேண்டிய புத்தாண்டு ஏன் இப்படி ஆனது? – யோசி!

நம்மில் பெரும்பாலானோர், புத்தாண்டை ஏதேனும் ஒரு வகையில் கொண்டாடத்தான் செய்கிறோம். ஆனால், சிலர் இந்த ஆங்கிலப் புத்தாண்டுக் கொண்டாட்டங்களை எதிர்க்கின்றனர். அவர்கள் சொல்வதிலும் நியாயம் இருப்பதை, மேற்சொன்ன நிகழ்வுகள் நமக்கு உணர்த்துகின்றன. ஆனால், இந்தப் பிரச்சனைகளுக்கு எல்லாம் காரணம், புத்தாண்டா அல்லது நாம் அதைக் கொண்டாடும் விதமா..? – யோசி!

சிக்கல், புத்தாண்டு தினத்தில் இல்லை. அதை ஒட்டி விற்பனையாகும் மதுவின் அளவில்தான் இருக்கிறது. நான் மேற்சொன்ன சோக நிகழ்வுகளில், பெரும்பாலானவை மதுவினால் விளைந்த கேடுகள். ஆங்கிலப் புத்தாண்டினைக் கொண்டாடுவதால் எந்தக் கேடும் இல்லை. ஆனால், அதையொட்டி அதிகமாக விற்பனையாகும் மதுவினால் விளையும் கேடுகள் ஏராளம் அல்லவா? புத்தாண்டுக் கொண்டாட்டங்களைத் தடை செய்தால் மட்டும், இந்தக் கேடுகள் குறையாது. ஏனென்றால் யதார்த்தத்தில், எந்த ஒரு மகிழ்வான நிகழ்வு என்றாலும், கொண்டாட்டம் என்றாலும், உடனே நம்மவர்கள் கேட்பது “சரி, எப்ப பார்ட்டி..?”. நம்மைப் பொறுத்தவரை, கொண்டாட்டம் என்றாலே, அதில் நிச்சயம் மது இருக்க வேண்டும் என்ற மோசமான வழக்கத்திற்கு, நாம் மாறிக் கொண்டிருக்கிறோம்.

திருமணமா...? மாப்பிள்ளையின் நண்பர்களுக்கு அன்று இரவு நிச்சயம் தண்ணி பார்ட்டி இருக்க வேண்டும். சில நேரங்களில் மாப்பிள்ளையையும் வற்புறுத்தி இணைத்து விடுவார்கள். பிறகு பூ வாசம் வீச வேண்டிய முதலிரவில், பீர் வாசம் வீசும். வாழ்க்கையே நாறிவிடும். பல இடங்களில், மாப்பிள்ளையின் நண்பர்கள்தான் என்றில்லை, இரு வீட்டாரிடமும், பல உறவினர்கள், நண்பர்கள் பார்ட்டி கேட்பது, தற்போது வாடிக்கையாகிவிட்டது.

புத்தாண்டா..? அதைக் கொண்டாட, புத்தாண்டு முன்தினத்தில், இரவு 12 மணிக்கு, போதையில், நடுரோட்டில் வைத்துக் கேக் வெட்ட வேண்டும். போகும் பாதையெல்லாம் “ஹேப்பி நியூ இயர்” என்று நடுராத்திரியில் அலற வேண்டும். கொஞ்சம் பணமிருந்தால், பப், டிஸ்கொதே, ஸ்டார் ஹோட்டல் பார்ட்டிகள் என்று, ஒழுக்கக் கேடுகளைக் கொஞ்சம் காஸ்ட்லியாகச் செய்வார்கள். தெருவென்றாலும், ஹோட்டல் என்றாலும், போதையில் ஓடுவது, பாடுவது, ஆடுவது, போவோர் வருவோரையெல்லாம் சாடுவது, வம்புகளை வளர்ப்பது, ஒழுக்கமின்றி நடந்துகொள்வது என்று, இவர்களுக்கெல்லாம் புத்தாண்டு எப்போதுமே சாத்தானின் ஆண்டாகத்தான் விடிகிறது.

பொது அமைப்புகளில் இருப்பவர்களைக் கேளுங்கள். பெரும்பாலான சங்கங்கள் வைன் அண்ட் டைன் சங்கங்களாகவே உள்ளன. மாதக் கூட்டம் என்றால் “லிமிடெட்”. முக்கிய நிகழ்வுகள் அல்லது மாநாடுகள் என்றாலோ “அன்லிமிடெட்”. இதில் கொடுமை என்னவென்றால், குடிக்கும் கேவலத்தைக், கொஞ்சம் கூட வெட்கமின்றி, விளம்பரம் வேறு செய்வார்கள். ஏனென்றால், குடிதான் நட்பினை வளர்க்குமாம். அப்படிக் குடியினால் வரும் நட்பினை விட, தெளிந்த செயலால் வரும் எதிரியே மேல் என்பது என் கருத்து.

இந்தக் குடிப்பழக்கத்தால் விளையும் தீமைகள் ஒன்றல்ல, இரண்டல்ல. உடல் நலத்தை விடுங்கள். அவரவர் உடல். அவர்களே பார்த்துக்கொள்வார்கள். ஆனால், சமூக அளவில் எத்தனை தீமைகள்? என் கவiயெல்லாம் அவை குறித்துத்தான்.

• குடிபோதையால் விளையும் சாலைவிபத்துகள். அதிலும், குடிக்காத, தவறு செய்யாத பல அப்பாவிகள் அதில் பாதிப்படைவது.
• குடிபோதையால் விளையும் பிரச்சனைகள். (எ.கா.) புத்தாண்டு தினத்தில், எங்கள் ஊரில், மூன்று இளைஞர்கள் குடிபோதையில், தெருவிளக்கை உடைக்க, அதை சிலர் தட்டிக் கேட்க, தட்டிக்கேட்டவர்களை இளைஞர்கள் மிகக் கடுமையாகத்தாக்கி, அவர்கள் எல்லாரும் இப்போது மருத்துவமனையில். மூன்று இளைஞர்களும் சிறைச்சாலையில்.
• குடிபோதையால் விளையும் சமூகச் சீரழிவுகள், பாலியல் கொடுமைகள். (எ.கா.) சில ஆண்டுகளுக்கு முன், குடிபோதையில் ரோட்டில் சென்று கொண்டிருந்த இளைஞர்கள், இருட்டில் ஒரு பெண்ணைப் பாலியல் பலாத்காரம் செய்ததில், அப்பெண் அங்கேயே மரணமடைந்துவிட்டாள். அப்பெண்ணின் வயது சுமார் 70. போதையில் குமரிக்கும், கிழவிக்கும் எப்படி வித்தியாசம் தெரியும்?

மேற்சொன்னவை எல்லாம் கூட வெறும் உதாரணங்கள்தான். ஆனால், உண்மை.......... இவற்றையெல்லாம் விட அதிகமானது, பயங்கரமானது, நம்பமுடியாதது, நம்மை அதிகமாகக் கோபமும், வருத்தமும் அடையச் செய்வது.

மதுவினால் அறிவையும், உணர்வையும் இழக்கிறோம் என்பதை நான் மேற்சொன்ன செய்திகள் அனைத்தும் உணர்த்துகிறது. அறிவும், உணர்வும் இல்லையென்றால் நாம் மனிதர்களே இல்லை என்பதை நாம் இன்னும் உணரவில்லை.

இன்னும் கூட, “சாராயம்தான் கெடுதல். விலை அதிகமான மதுவகைகள் ஒன்றும் செய்யாது. ஹாட் வகைகள்தான் கெடுதல். பீர் குடித்தால் உடலில் தெம்பு கூடும். சதை போடும். ஒயின் குடிப்பது, உடலுக்குப் பளபளப்புத் தரும். அளவோடு இருந்தால், எதுவுமே தப்பில்லை. ஏதோ ஒருநாள் குடித்தால், நான் கெட்டவனா?” என்றெல்லாம், பலவாறும் நாம் சப்பைக் கட்டுகள் கட்டுவதிலும், சாக்குகள் சொல்வதிலுமே காலத்தை வீணடித்துக் கொண்டிருக்கிறோம். இப்படி எல்லாம் வாதம் செய்தாவது, அந்த மதுவைப் பழகியே ஆக வேண்டுமா..? மது என்ன, வாகனம் ஓட்டுவது போலவோ, செல்போன் பேசுவது போலவோ, இன்டர்நெட்டில் பணிபுரிவது போலவோ, செல்ப் ஷேவிங் போலவோ, நாகரிக காலத்தின் கட்டாயமா, நாம் பழகிக் கொள்வதற்கு..? – யோசி!

ஏழை, பணக்காரர் என்று எந்த ஒரு வித்தியாசமும் இன்றிப், பல்கிப் பரவிவிட்ட இந்தக் குடியை என்ன செய்வது? இத்தனைக்கும், இப்போது யாரும் குடியினால் வரும் தீமைகளை அறியாமல் குடிப்பது இல்லை. தெரிந்தே செய்கிறார்கள். என்ன செய்வது?

எது நாகரிகம்? எது பண்பாடு? ஒழுக்கத்தை விலையாகத் தந்துதான் என்னை நாகரிகமானவன் என்று நிரூபிக்க வேண்டுமா? மைனஸ் டிகிரிகளில் குளிர் வாட்டும் பகுதிகளில் உள்ளவர்களின் பழக்கத்தை, உச்சியைக் காய வைக்கும் வெயில் பகுதியில் நாமும் செய்ய வேண்டுமா? (ஓ! அதற்காகத்தான் சிலர், ஏசி அறைகளில் தண்ணி அடிக்கிறார்களோ!) மகிழ்ச்சிக்காக, எதை வேண்டுமானால் செய்யலாமா? கொடைக்கானல், ஊட்டி போன்ற பகுதிகளுக்கு டூர் செல்வதே, போதையில் விழுந்து கிடக்கத்தானா? மகான் அரவிந்தரும், மகாகவி பாரதியும் வாழ்ந்த பாண்டிச்சேரியை, பார்-சேரி-யாக என்ற எண்ணத்தை உண்டாக்கியது நியாயந்தானா? – யோசி!

இவையெல்லாம் கால மாற்றத்தின் கரைகளா? இல்லை, காலத்தின் மீது படிந்த கறைகளா? ஒழுக்கம் என்பது தனி மனிதன் சார்ந்தா? சமுதாயம் சார்ந்ததா? ஒழுக்க விதிகளில் அவசியம் மாறுதல் வேண்டுமா? – யோசி! அடுத்த கட்டுரையில் தேடலைத் தொடர்வோம்!