வெள்ளி, 31 டிசம்பர், 2010

மன்னிக்கவும்! நன்றி!


அன்பார்ந்த வாசகர்களே!

மன்னிக்கவும்! இந்த பிளாக் மூலமாகத் தொடர்ந்து எழுதிவந்த நான், கடந்த மூன்று மாதங்களாக, ஒரு இடுகையைக் கூட வெளியிடவில்லை. வெளியூர் பயணங்கள், தொடர்ச்சியான பயிற்சி அரங்குகள், பொது நிகழ்ச்சிகள், ரோட்டரி மற்றும் ஜேஸி பணிகள் போன்று பல காரணங்கள் இருந்தாலும், நான் தவறுகளுக்குக் காரணங்கள் சொல்வதை விரும்புவதில்லை. ஏனென்று சொன்னால், காரணங்கள் சொல்லத் தொடங்கி, அதுவே பழக்கமாகி விட்டால், நாம் தவறுகளைத் திருத்திக் கொள்ளாமலே இருந்து விடுவோம் என்று நம்புபவன் நான்.

அதனால் மீண்டும் ஒரு முறை இந்தத் தவறு நிகழாமல், நிச்சயம் பார்த்துக் கொள்வேன் என்று உங்களிடம் உறுதியளிக்கிறேன். நான் வருந்துகிறேன் என்று பூசி மெழுகவெல்லாம் நான் விரும்பவில்லை. நேரடியாகவே உங்களிடம் பணிந்து கேட்கிறேன். மன்னிக்கவும்! நீங்கள் பெருந்தன்மையானவர்கள் என்று எனக்குத் தெரியும். எனவே, மன்னி;த்ததற்கு நன்றி! எனக்கு என் தவறை உணர்த்திய, என் பதிவுகளைத் தொடர்ந்து படித்து வரும் பலருக்கும், குறிப்பாக புதுக்கோட்டை நண்பர் பிரசாத் அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள் கோடி!

2010-ஆம் ஆண்டின் நிறைவு நாள் இன்று! கடந்த ஆண்டின் நிகழ்வுகளைத் திரும்பி நினைவில் கொண்டு வாருங்கள்! அவற்றை அசைபோடுங்கள்! இனிமையானவை, வருத்தம் தருபவை என அனைத்தையும் நினைத்துப் பாருங்கள்! அவை அனைத்திலும், நம் வாழ்க்கையை மேம்படுத்துவதற்கு என்ன பாடங்கள் உள்ளன என்று கவனித்துக், கற்றுக்கொள்ளுங்கள்! நீங்கள் செய்த தவறுகளுக்குக், காலங் கடத்தாமல், உரியவர்களிடம் மன்னிப்புக் கேளுங்கள்!

இப்பொழுதெல்லாம் மன்னிப்புக் கேட்பதும், நன்றி கூறுவதும் நம் வழக்கங்களில் இருந்து சிறிது, சிறிதாக மறைந்து வருகிறது. குறிப்பாக மன்னிப்புக் கோருவது! ஆங்கிலத்தில் சாரி என்றும், எக்ஸ்கியூஸ் என்றும் சொல்ல முடிகிற நம்மால், தமிழில் மன்னிக்கவும் என்று சொல்ல முடிவதில்லை. காரணம்........... பிரெஸ்டீஜ், ஈகோ....

மன்னிப்புக் கேட்கிற அளவுக்கு நான் தவறு செய்யவில்லை என்று விளக்கமளிக்கிறோம். அப்படி என்றால், எந்த எந்த தவறுகளுக்கு, மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று யாராவது லிஸ்ட் கொடுத்தால் பரவாயில்லை. தவறு என்பது தவறிச் செய்வதுதான். எனவே, எல்லாவற்றுக்கும் மன்னிப்புக் கோரலாம். அதில் ஒரு குறையும் இல்லை. மன்னிப்புக் கோருவதால், நிச்சயமாக நாம் தாழ்ந்து விட மாட்டோம். எனவே, நாகரீகம் என்ற பெயரில், தேவையற்ற ஈகோ-வைத் தவிர்ப்போம். சிறியதோ, பெரியதோ, தவறு நம்முடையதாக இருந்தால், அதை உணர்ந்து, மன்னிப்புக் கோருவோம்.

அதேபோல், நமக்கு சொல்லித் தந்த பாடங்களுக்காக 2010-ஆம் ஆண்டுக்கும், நிகழ்வுகளுக்கும், தொடர்புடைய மனிதர்களுக்கும் நன்றி கூறுங்கள்! நல்லது செய்தவர்களுக்குத்தானே நன்றி கூற வேண்டும்! அல்லது செய்தவர்களுக்குமா? என்று வியப்படையாதீர்கள். அவர்களும், ஒரு அனுபவத்தையே தந்திருக்கிறார்கள்! அவையும் நம் வாழ்க்கை மேம்படுவதற்கு, உதவி செய்யக்கூடும்! இது குறித்து எனக்கு ஒரு அருமையான பார்வர்ட் எஸ்எம்எஸ் வந்தது. அதன் தமிழாக்கம் இதோ!


 என்னை வெறுத்தவர்களுக்கு என் நன்றி! ஏனென்றால், அவர்கள் என்னை மேலும், வலிமையுடையவனாக மாற்றினார்கள்.

 என்னை நேசித்தவர்களுக்கு என் நன்றி! ஏனென்றால், அவர்கள் என் இதயத்தை விரிவடையச் செய்தார்கள்!

 என்னைக் குறித்துக் கவலைப்பட்டவர்களுக்கு என் நன்றி! ஏனென்றால், என் மீது அக்கறையுடையவர்கள் பலர் இருக்கிறார்கள் என்ற நம்பிக்கையை அவர்கள் தந்தார்கள்!

 என்னை விட்டுப் பிரிந்தவர்களுக்கு என் நன்றி! ஏனென்றால், உலகில் எதுவும் நிலையானதில்லை என்று, அவர்கள் எனக்கு உணர்த்தினார்கள்!

 என் வாழ்க்கையில் புதிய வரவாக நுழைந்தவர்களுக்கு என் நன்றி! ஏனென்றால், நான் இன்று யாராக இருக்கிறேனோ, அதற்கு அவர்கள் காரணமாக இருந்தார்கள்!


மேற்கண்ட இந்த வரிகளையே நான் உங்களுக்கும் சமர்ப்பிக்கிறேன்! நான் உங்களைப் பொறுத்த வரையில், எந்த உறவில், எந்த நிலையில் இருந்தாலும், என் வாழ்வில், நீங்களும், நிச்சயமாக ஒரு அங்கமாக இருந்தீர்கள்! இருக்கிறீர்கள்! இருப்பீர்கள்! எனவே, உங்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள் கோடி!

2011-ஆம் ஆண்டை நல்ல முறையில் திட்டமிடுவோம்! உற்சாகமாக வரவேற்போம்! ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு நொடியும், நன்றாக அனுபவித்து வாழ்வோம்! வாழ்க்கை வாழ்வதற்கே! இனிய புத்தாண்டு வாழ்த்துகள்! மீண்டும் அடுத்த வாரம் சந்திப்போம்!

மீண்டும் சொல்கிறேன்...... மன்னிக்கவும்! நன்றி!